பௌத்தமும் ஈழமும் - பகுதி 1
Arts
17 நிமிட வாசிப்பு

பௌத்தமும் ஈழமும் – பகுதி 1 

August 9, 2024 | Ezhuna
'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.

தமிழகத்தில் வழங்கும் சமயங்களினைப் புறத்தே இருந்து வந்த சமயங்கள், அகத்தே நிலவிய சமயங்கள் எனும் இரு பிரிவுகளில் அடக்கலாம். சமணம், பௌத்தம் முதலானவை சங்ககால தமிழ்ச் சமூகவியலில் புறத்தேயிருந்து வந்த பெருஞ் சமயங்களாகும். ஆசிவகம் தமிழகத்திலிருந்தே நாவலத்தீவு முழுதிற்கும் பரவிற்று என்று ஒரு சாரரும், வடகோடியிலிருந்தே தமிழகம் போந்ததென்று ஒருசாரரும் குறிப்பிடுவர். புறச்சமயங்கள் தமிழ்த் தாயகங்களுக்கு எவ்வகையில், எவ்விடத்தின் வழிநுழைந்தன என்பனவற்றினைக் குறித்து ஆய்ந்து அறிந்து கொள்ளுவதற்கு, அச் சமயங்களின் தோற்றுவாய் நிலைய, அவை தமிழ்ச் சமுதாயத்தில் பெற்ற பரவலாக்கம், அதன் செவ்வியல் ஆளுமைக்கால வரலாறு, போன்றனவற்றை அறிவது இன்றியமையானதாகும். இதன்வழி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பே தமிழகத்தின் கொங்குப் பகுதியின் வடபால் உள்ளதும், பண்டைய எருமைநாடு என்று அழைக்கப்பட்டதுமான மைசூர் பீடபூமியின் ‘சரவணபெலகோலா’ எனும் இடத்தில் மையம் கொண்டிருந்த சமணம், மேயாற்றுக் கணவாயைக் கடந்து கொங்குநாட்டில் முதலில் நுழைந்தது. விசயமங்கலம், பூந்துறை, திங்களூர் முதலான இடங்களில் தலமமைத்துக் கோலோச்சியது. இதன் விளைவால் கொங்குநாட்டு வேளிர் தலைவன் சமணத்தைச் சார்ந்து பெருங்கதை எனும் சமண இலக்கியம் செய்தமையும், கொங்கிலிருந்த சமணம் பாண்டியநாடு முழுதும் பெரிதும் பரவியமையும், பின் தமிழகம் முழுதும் பரந்தமையும் அறிந்தமையே. சமண முனிவர்கள் கடல் கடக்கக்கூடாது எனும் விதி சமணத்தைக் கடல் கடந்து ஈழத்தில் பரவுவதைத் தடை செய்தது. ஆயினும் சமண வாணிகர்கள் இலங்கையில் பெரிதும் இருந்து, ஈழத்தில் மேலாண்மை பெற்றமையை ஈழத்தின் கிழக்குக் கரையோரம் திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடைப்பட்ட பழைய வாணிகப் பாதையில் கிடைக்கும் தமிழ்க் கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு அறியலாம்.

தமிழகத்தின் மேற்குப் பகுதிகளில் சமணச் சின்னங்கள் மிகுந்து கிடைப்பதைப் போன்றே தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் பௌத்த சின்னங்கள் மிகுந்து கிடைப்பதினைக் காணலாம். பௌத்தம் தமிழகத்தின் கிழக்குப் பகுதியினை ஒட்டியே பரவத் தலைப்பட்டமையைப் பல்வேறு சான்றுகளின் வழி உணரலாம். காஞ்சிபுரம், மாங்காடு, இரண்டாங்காடு, ஆவூர், கூவம், ஞாயர், நாவலூர், பல்லாவரம், திருப்பாதிரிப்புலியூர், சங்கமங்கை எனத் தொடர்ச்சியான தொண்டை மண்டல ஊர்களிலும், காவிரிப்பூம்பட்டினம், பூதமங்கலம் (கோயில்வெண்ணி), புத்தமங்கலம், சங்கமங்கலம், போதிமங்கலம், திருவிளத்துறைக் கோயில், கும்பகோணம், திருவலஞ்சுழி, பட்டீச்சுரம், எலயனூர், பொன்பற்றி, புத்தகுடி உறையூர், பெருஞ்சேறு, கோட்டப்பாடி, மயூரபட்டணம், நாகைப்பட்டினம் முதலாய ஊர்களைத் தலைமையாகக் கொண்டு சோழ மண்டலத்திலும் பௌத்தம் பரவலாக்கம் பெற்றது.

பாண்டிய மண்டலத்தில் மதுரை, அரிட்டாபட்டி, பொதிகை, தஞ்சை (தஞ்சாகூர்), திருமாலிருஞ்சோலை, தென்கரை முதலான ஊர்களையும் பௌத்தம் தலமாகக் கொண்டு செழித்திருந்தது. ஆனால் மேலைக்கரையில் வஞ்சிமாநகர் தவிர மற்றைய இடங்களில் பௌத்தம் பெரிதும் பரவியதாக அறியக் கூடுதலில்லை. ஆனால், சமணம் செழித்திருந்தது. ஈழமண்டலத்தில், நையினாதீவு (மணிபல்லவம்), காரைத்தீவு, திருகோணமலை  நெடுந்தீவு, சாவகச்சேரி, கந்தரோடை முதலான தலங்களில் தமிழ் பௌத்தம் செழித்திருந்தது. இவ் வகைத் தலங்களையே காஞ்சியிலிருந்து நெல்லைவரை கிழக்குக் கடற்கரை வாயிலாகப் பௌத்தத் துறவிகள் பயணம் செய்து வணங்கினர். இதனை யுவான் சுவாங் போன்ற வெளிநாட்டுத் துறவிகளின் பயணப் பாதைகளினை ஆய்வதன் வழியறியலாம்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் காலம் தொட்டே தமிழகத்தில் பௌத்தம் மக்கள் செல்வாக்கும், மன்னர்களின் செல்வாக்கும் பெற்ற பெருஞ் சமயமாக தமிழ் பௌத்தம் விளங்கிற்று. அதே காலக்கட்டத்தில் தமிழகத்திலிருந்து ஈழத்தில் உள்ள தமிழர்களிடம் பரவி, பிறகு சிங்களரிடமும் பரவியிருக்க வேண்டும் எனக் கருத இடமுண்டு. ஆனால், சிங்கள நூலான மகாவம்சம், “மூன்றாம் பௌத்த மாநாடு, மௌரியப் பேரரசின் தலைநகரான பாடலிபுத்திரத்தில், அசோகரின் ஆதரவில், மெக்கலபுத்த திஸ்ஸ எனும் தேரரின் தலைமையில் கூடி, பௌத்த மதத்தினைப் பரப்புதற் பொருட்டுப் பல்வேறு நாடுகளுக்கும் பிக்குகளை அனுப்புவதாக முடிவாக்கியது. மாநாட்டு முடிவின்பின் காஸ்மீரம், காந்தாரம் எனும் நாடுகளுக்கு மஜ்ஜந்திகர் எனும் பிக்குவும், மகிஷ மண்டலத்துக்கு மாகதேவர் எனும் பிக்கும், அபரந்தக நாட்டிற்குத் தம்மரக்கிதர் எனும் பிக்குவும், வனவாசி நாட்டிற்கு ரச்சிதர் எனும் தேரரும், மகாராட்டிர தேசத்திற்கு மகாதம்மரக்கிதர் எனும் தேரரும், யோனதேசத்திற்கு மாகரக்கிதர் எனும் தேரரும் அனுப்பப்பட்டனர். இமாலயத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு மஜ்ஜிம எனும் தேரரும், சுவர்ணபூமி எனும் நாட்டிற்குச் சோனர், உத்திரர் என்னும் தேரர்களும் அனுப்பப்பட்டனர். பெரிய தேரராகிய மகிந்தரும் அவரின் சீடர்களாகிய இட்டியர், உத்தியர், சம்பலர், பத்தசாலர் என்பவர்களும் இலங்கைத் தீவிற்குப் பௌத்த மதத்தைப் பரவச் செய்ய அனுப்பப்பட்டனர். மகிந்தர் முதலியவர்கள் தாம் அடைந்திருந்த இருத்தினாலே ஆகாய வழியாகப் பறந்து இலங்கையை அடைந்தனர்.” என்று கூறுகிறது (12 ஆம் அதிகாரம்). பௌத்த மத விரிவாக்கத்திற்காகப் பிக்குகள் அனுப்பப்பட்டதாக மகாவம்சம் கூறும் நாடுகளின் பட்டியலில் தமிழ்நாடுகள் எதுவுமில்லை. மேலே குறிப்பிட்ட நாடுகளோடு (யோனதேசம்) யவனநாடு முதலிய தூர நாடுகளுக்கும், தமிழ் நாடுகளுக்கும் பிக்குகளை அனுப்பியமையைப் பின்வரும் அசோகச் சாசனங்களின் வழியறியலாம்.

குஜராத்தின் சௌராஷ்டிரப் பகுதியில் உள்ள கிர்னார் நகருக்கருகிலுள்ள பாறையில் எழுதப்பட்டுள்ள அசோகக் கல்வெட்டில் பின்வரும் பகுதி காணப்படுகிறது:

“காருண்யமுள்ள தேவனாம்பிரியராகிய அரசர் பெருமானுடைய (அசோகரின்) ஆட்சிக்குட்பட்ட எல்லா விடங்களிலும் இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர தேசங்களிலும், தாமிரபரணியிலும் (இலங்கை), யவன அரசனாகிய அண்டியொகஸ் ஆட்சிசெய்யும் தேசத்திலும், அதற்கப்பாற்பட்ட தேசங்களிலும் காருண்யமும் மேன்மையும் பொருந்திய அரசரால் இரண்டு வித மருத்துவச் சிகிச்சைகள் ஏற்படுத்தப்பட்டன. அவை, மக்களுக்கு மருத்துவம், கால்நடைகளுக்கு மருத்துவம் என்னும் இருவகை மருத்துவ நிலைகளாம்.”

இதற்கடுத்து மூன்றாம் பாறைக் கல்வெட்டில், தமிழகத்திலும் இலங்கையிலும் பௌத்தத்தைப் பரப்பிய செய்தி குறிப்பிடப்படுகின்றது. ஆனால், பின்வரும் மூன்றாம் பாறைக் கல்வெட்டில் சேர (கேரள புத்திர) தேசம் விடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சாசனம் கி.மு. 258 இல் எழுதப்பட்டது.

“தரும விஜயம் என்னும் வெற்றியே மாட்சிமைமிக்க அரசரால் (அசோக மன்னரால்) முதற் தரமான வெற்றியென்று கருதப்படுகின்றது. இந்த வெற்றி இந்த இராச்சியத்திலும், இதற்கப்பாற்பட்ட அறுநூறு யோசனைத் தூரத்திலுள்ள அண்டியொகஸ் என்னும் யவன அரசனுடைய தேசத்திலும், அதற்கு அப்பால் டாலமி, அண்டிகொனஸ் மகஸ், அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும், இப்பால் தெற்கேயுள்ள சோழ, பாண்டிய, தாமிரபரணி (இலங்கை) தேசங்கள் வரையிலும் அரசருக்கு அடிக்கடி கிடைத்தது.”

மேற்கண்ட இரண்டு கல்வெட்டுக்களிலும் சோழ, பாண்டிய நாடுகள் எனும் தமிழ் நாடுகளை அடுத்தே இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் நாடுகளுக்கு அடுத்தே இலங்கைக்குச் சமயக் குழுக்களை அசோக மன்னர் அனுப்பினார் என்பதனை அறியமுடிகின்றது.

“பர்மா தேசத்துப் பௌத்தப் பிக்கு பரம்பரையைக் கூறுகின்ற வரலாறு (Talang Records) காஞ்சிபுரத்துக்கு அருகிலே பதரதிட்டை என்னும் இடத்தில் அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட விகாரையில் தம்மபாலர் என்னும் பௌத்தப் பிக்கு வசித்திருந்தார் என்று கூறுகிறது. இந்தத் தர்மபாலர் என்பவர் பேர்போன ஆசாரிய தர்மபாலர் ஆவார். இவர், பௌத்த வேதமாகிய திரிபிடகத்தின் சில பகுதிகளுக்குப் பாளி மொழியில் உரை எழுதியிருக்கிறார். இவர் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவர். தாம் எழுதிய நூலில் அசோகச் சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட விகாரையில் தாம் தங்கியிருந்து இந் நூலை எழுதியதாகக் கூறியிருக்கிறார்1”. இப்படியான சான்றுகள் உள்ளபோது, மகிந்தர் ஆகாய வழியாகச் சிங்கள நாட்டை வந்தடைந்தார் என்பதனை எவ்வகையில் ஏற்பதென்பதோ? ஆனால் மகிந்தர் தமிழகம் போந்து, பின்னர் இலங்கை அடைந்தமையை ஆய்வின் வழி உணரவியலும். அதற்கான மேலும் பல சான்றுகள் உண்டு.

“பணையைந் தோங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழ லறவோன் றிருமொழி
அந்தர சாரிக ளறைந்தனர் சான்றும்
இந்திர விகார மேழுடன் போகிப்”
– சிலப்பதிகாரம் – 10: 11-14

எனும் சிலப்பதிகார அடிகளில் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்ததாகக் கூறப்படும் ஏழு இந்திர விகாரைகள் மகிந்தனால் கட்டப்பட்டதாக அறிஞர்கள் கூறுவர். மேலும், அசோகரும், மகிந்தர் எனும் மகேந்திரரும் தமிழகத்தில் கட்டிய விகாரைகள் பல இருந்தமைக்கான சான்றுகள் பல உண்டு.

“தலைநகருக்கு (காஞ்சி) அருகில் தென்திசையில் மிகவும் புகழ்பெற்ற ஒரு பெரிய மடம் இருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த மிகச் சிறந்த அறிஞர்கள் அடிக்கடி அந்த மடத்தில் கூடினார்கள். அந்த மடத்தில் நூறடிக்கு மேல் உயர்ந்து நின்ற அசோகத்தூபி ஒன்று இருந்தது. அந்த இடத்தில் புத்தர் ஒருமுறை தீர்த்தங்கரர்களோடு வாதிட்டு அவர்களை வென்று, மக்கள் பலரைத் தம்முடைய மதத்தில் சேர்த்துக் கொண்டார்.” என்று அசோகர் காஞ்சிபுரத்தில் புத்தமடத் தூபி அமைத்தமை குறித்து யுவாங் சுவாங் குறிப்பிடுகிறார்2. “தலைநகருக்குக் (மதுரை) கிழக்கில் அசோகருடைய தம்பி மகிந்தன் கட்டிய பழம் புத்தமடம் ஒன்று இருந்தது. ஆனால், அது இடிந்து போயிருந்தது. கடைக்காலும் ஒரு தூபியுமே எஞ்சியிருந்தன. மடத்திற்குக் கிழக்கே கட்டப்பட்டிருந்த அந்தத் தூபியின் கவிகை மாடம் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. ஏனைய பகுதிகளை மண் மூடிவிட்டது. அந்த இடத்தில் புத்தர் தம்முடைய மதத்தில் திக்கற்ற மக்களைச் சேர்த்துக் கொண்டார்.” என யுவாங்சுவாங் மேலும் குறிப்பிடுகிறார். மேற்கண்ட கூற்றுகளின் வழி மகிந்தர் தமிழகத்தில் பல பௌத்தப் பள்ளிகளைக் கட்டியிருந்தார் என்பதினை அறியலாம். இதனால் தமிழகத்திற்குப் பௌத்த மதத்தினைப் பரப்புதற் பொருட்டு மகிந்தர் வந்தார் என்பது விளங்கும். தமிழகம் வந்த மகிந்தர், தமிழகத்திலிருந்து எட்டுக்கல் தொலைவு உள்ள இலங்கைக்கு, தமிழகத்திலிருந்து செல்லாமல், மீண்டும் பாடலிபுத்திரம் சென்று பின் வான் வழியில் சென்றார் என்பது ஏற்புடையதாகா. தமிழகத்திலிருந்தே இலங்கைக்குச் சென்றார் என்பதே பொருத்தமானதாகயிருக்கும்.

தமிழகம் போந்த மகிந்தர் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு எப்படிச் சென்றார் என்பதினை ஆராய வேண்டியுள்ளது. பொதுவில் அசோகப் பேரரசரும் மகிந்தனும் கட்டிய பௌத்தப் பள்ளிகளெல்லாம் புத்தர் வந்த இடங்களாகப் பௌத்தர்களால் சுட்டப்படுகின்றமையைக் காணவியலும். இவை போன்ற பள்ளிகள் உலகெங்கும் உள்ளனவாகும் (புத்தர் வடஇந்தியாவைத் தாண்டி எங்கும் செல்லவில்லை என்பதே வரலாற்றியல் அறிஞர்களின் துணிவு). அவ் வகையில் தமிழகத்தில் காஞ்சி, மதுரை, காவிரிப்பூம்பட்டினம் முதலாய இடங்களில் உள்ள பள்ளிகள் சுட்டப்படுகின்றமையை முன்னர் கண்டோம். இவ்விடங்களில் எல்லாம் மகிந்தன் கட்டிய பள்ளிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே இலங்கையில் உள்ள பௌத்தத் தலங்களுள் இரண்டு சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அவை, யாழ். குடாநாட்டில் உள்ள மணிபல்லவமும் (நயினாதீவு), அநுராதபுரத்திற்கு அருகிலுள்ள மிகிந்தலையுமாகும். இலங்கையில் புத்தர் வந்த தலமாக மணிபல்லவமே அமைகின்றது. ஆக ஈழத்தில் மகிந்தன் கால்வைத்த முதல் தலம் தமிழரின் மணிபல்லவமே. அங்கு தமது சமயப் பரவலாக்கத்தினை மேற்கொண்ட மகிந்தன், அங்கிருந்த தமிழர்களைப் பௌத்த வழிப்படுத்திவிட்டு, கரைநகர் வாயிலாக அநுராதபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு மடத்தில் தங்கி, ஒரு விகாரையை எழுப்பிச் சமயப் பரவலாக்கத்தினையும், சமயக் கல்வியையும் மேற்கொண்டார் எனலாம். ஆதலால், அவ்விடம்  (மகிந்தன் வந்த தலைமையிடம்) மகிந்தலை என வழங்கலாயிற்று. இன்று மிகிந்தலை என அது வழங்கப்படுகிறது.

மகிந்தன் ஈழம் வந்தவேளை நாக நாடாகிய மணிபல்லவத்தில் வாழ்ந்த மக்கள் தமிழரேயாவர் என்பதினைச் சில சான்றுகளின் வழியுணரலாம். மணிபல்லவத்தில் நாகர்கள் வாழ்ந்தார்களென்றும், அவர்களின் அரியணைப் போட்டியைத் தடுத்து நல்வழிப்படுத்தவே புத்தர் அவ்விடம் போந்தார் எனவும் குறிப்பிடப்படுகின்றது. நாகர் என்போர் யாவரெனின் அவர்கள் தமிழர்களே. இதனை எமது அரவாடு எனும் கட்டுரையில் கண்டு கொள்க. மேலும், மணிபல்லவத்துத் நாகர்கள் தமிழர்களே என்பதினை மணிமேகலையில் வரும் செய்திகளின் வழியும் அறியலாம்.

மணிமேகலைக் காப்பியத்தின் இருபத்து நான்காம் காதையாகிய ஆபுத்திரன்நாடு அடைந்த காதை எனும் பகுதியில் பின்வரும் நிகழ்வு கூறப்பட்டுள்ளது: 

“பண்டொரு காலத்தில் சோழ அரசனாகிய நெடுமுடிக்கிள்ளி, புகார் நகரின் கடற்கரையில் உள்ள புன்னைமரச் சோலையில் பேரழகு வாய்ந்த மங்கையைக் கண்டு காதல் கொண்டு அவளோடு ஒரு மாதம் உறைந்தனன். பிறிதொரு நாள் அம்மங்கை அவனிடம் ஏதும் கூறாது ஒழிந்தாள். மன்னன், எங்கு மறைந்தாளென அவளைத் தேடி அலைந்தான். அச்சமயம் நிலத்தில் குளித்தல் முதலாய பல சித்துக்களைப் பெற்ற சாரணனொருவன் வந்தான். அரசன் அவனைப் பணிந்து தாம் தேடும் மங்கை குறித்து அறிவீரோ என வினவ, அந்தச் சாரணன் அவளை நான் கண்டிட்டிலேன், ஆயினும் அவள் வரலாற்றினை முன்பே அறிந்துளேன் எனக் கூறி. அவள் நாக நாட்டரசனாகிய வளைவணன் என்பானது தேவியான வாசமயிலை யென்பவள் வயிற்றிற் தோன்றியவள். பீலிவளை யென்னும் பெயரினள். அவள் பிறந்த வேளையில் நிமித்திகன் இவள் கதிரவன் குலத்தரசனைக் கூடிக் கருவுற்று வருவாள் என்று கூறினான். அவளே நீ கூறிய மடந்தை என்று அரசனுக்குக் கூறினான். மேலும், நீ கவலை கொள்ளாதே, அவள் வாராள். அவள் வயிற்றில் உதிக்கும் உனது மகனே வருவான் எனக் கூறினான்.” 

மேற்கண்ட செய்திகளைப் பின்வரும் மணிமேகலையடிகளால் அறியலாம்: 

“உப்பளந் தழீஇ வுயர்மன னெடுங்கோட்டுப்
பொங்குதிரை யுலாவும் புன்னையங் கானல்
கிளர்மணி நெடுமுடிக் கிள்ளி முன்னா
இளவேனி லிறுப்ப விறும்பூது சான்ற
பூநாறு சோலை யாருமி லொருசிறைச்
தானே தமிய ளொருத்தி தோன்ற
இன்ன ளர்கொ லீங்கிவ ளென்று
மன்னவ னறியான் மயக்க மெய்தாக்
கண்ட கண்ணினுங் கேட்ட செவியினும்
உண்ட வாயினு முயிர்த்த மூக்கினும்
உற்றுண ருடம்பினும் வெற்றிச்சிலைக் காமன்
மயிலையுஞ் செயலையு மாவுங் குவளையும்
பயிலி தழ்க் கமலமும் பருவத் தலர்ந்த
மலர்வா யம்பின் வாசங் கமழப்
பலர்புறங் கண்டோன் பணிந்து தொழில் கேட்ப
ஒருமதி யெல்லை கழிப்பினு முரையாள்
பொருவலரு பூங்கொடி போயின வந்நாள்
யாங்கொளித் தனளவ் விளங்கொடி யென்றே
வேந்தரை யட்டோன் மெல்லியற் றேர்வுழி
நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச்
சலத்திற் றிரியுமோர் சாரணன் றோன்ற
மன்னவ னவனை வணங்கி முன்னின்று
என்னுயி ரணையா வீங்கொளித் தாளுளள்
அன்னா ளொருத்தியைக் கண்டிரோ வடிகள்
சொல்லுமி னென்று தொழவவ னுரைப்பான்
கண்டிலே னாயினுங் காரிகை தன்னைப்
பண்டறி வுடையேன் பார்த்திப கேளாய்
நாகநாடு நடுக்கின் றாள் பவன்
வாகை வேலோன் வளைவணன் றேவி
வாசமயிலை வயிற்றுட் டோன்றிய
பீலிவளை யென்போள் பிறந்த வந்நாள்
இரவிகுலத் தொருவ னிணைமுலை தோயக்
கருவொடு வருமெனக் கணியெடுத் துரைத்தனன்
ஆங்கப் புதல்வன் வரூஉ மல்லது
பூங்கொடி வாராள் புலம்ப லிதுகேள்”
– மணிமேகலை – 24: 27-61

மேற்கண்ட கதையில் பயிலும் நாகர்களின் பெயர்களெல்லாம் தமிழ்ப் பெயராகவே அமைகின்றன. அப்பெயர்கள் நெய்தல் திணைக்கு உரிய பெயர்களாம். நாக அரசன் வளைவணன் எனும் சொல் தூய தமிழ்ச் சொல்லாகவே அமைகின்றது. 

“வயிரெழுந் திசைப்ப வால்வளை ஞரல”
– திருமுருகாற்றுப்படை – 120

“பயிர்வளை யரவமொடு வயிரெடுத்தூதி”
– பெருங்கதை – 1/38: 4

எனும் சான்றோர் செய்யுள் அடிகளில் வளை எனும் சொல் சங்கு எனும் பொருளில் ஆளப்பட்டுள்ளமையைக் காணலாம். மேலும், குற்றமற்ற சங்குடன் தலைமைத் தன்மையை ஒப்பிட்டமையை, 

“இலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்
வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பி”
– பெரும்பாண். 34-35

எனும் அடிகளின் வழி அறியலாம். வண்ணன் எனும் சொல் புணர்ச்சியில் இடைக்குறையாகி வணன் என முடிவுறும். அவ்வகையில் இரவு (இரா) + வண்ணன் = இராவணன் (இராக்கால நிறத்தினையுடையவன்) என அமையும். அதுபோல் வளை + வண்ணன், வளைவணன் (சங்கின் நிறத்தையுடையவன்) என்பதாயிற்று.

நாகர் தலைவனான வளைவணனின் மனைவியின் பெயர் வாசமயிலை எனச் சுட்டப்பட்டுள்ளது. இப்பெயரும் தமிழ்ப் பெயரே. மயிலை எனும் சொல் இன்று அழகிய பெண்களைக் குறிக்கக் கொங்குநாட்டிலே வழங்குகின்றது. மயிலை எனும் சொல் மணம் பொருந்திய இருவாட்சி (மல்லிகையில் ஒருவகை) மலரின் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கியமையை, 

“மயிலைக் கண்ணிப் பெருந்தோட் குறுமகள்”
– புறநானூறு – 34 / 2

எனும் அடிகளில் காணலாம். மயிற்பீலியின் வளைவுகளை ஒத்த சுழற்சியையுடைய சங்கினைப் போன்ற இள மடந்தையைப் பீலிவளை எனச் சுட்டியுள்ளமையைக் காணலாம். பீலியின் வளைந்த கண்ணினைச் சான்றுகாட்டியமையினை, 

“பீலி யொன்பொறிக் கருவிளை யாட்டி”
– குறுந். 110/4

எனும் குறுந்தொகையடிகளால் அறியலாம். மேற்கண்டவற்றால் மணிபல்லவத்தில் வாழ்ந்த நாகர்கள் தமிழர்களே என்பதினை அறிந்தோம். அந் நாகர்கள் பௌத்தர்கள் என்பதினையும் மணிமேகலையின் வழி அறியலாம். பீலிவளை சோழ மன்னனின் குழந்தையைக் கையிலேந்தி, மணிபல்லவத்திலுள்ள புத்த பீடிகையை வலம் வந்து வணங்கி, பின் அக் குழந்தையைச் சோழனிடம் ஒப்படைக்க, கம்பலச் செட்டியிடம் கொடுத்தமையைப் பின்வரும் அடிகளின் வழி அறியலாம். 

“நாக நன்னா டாள்வோன் றன்மகள்
பீலிவளை யென்பாள் பெண்டிரின் மிக்கோள்
பனிப்பகை வானவன் வழியிற் றோன்றிய
புனிற்றிளங் குழவியொடு பூங்கொடி பொருந்தியித்
தீவகம் வலஞ்செய்து தேவர்கோ னிட்ட
மாபெரும் பீடிகை வலங்கொண் டேத்துழிக்
கம்பளச் செட்டி கலம்வந் திறுப்ப
அங்கவன் பாற்சென் றவன்றிற மறிந்து
கொற்றவன் மகனிவன் கொள்கெனக் கொடுத்தலும்
பெற்ற வுவகையன் பெருமகிழ் வெய்திப்”
– மணிமேகலை – 25/179-188

மேற்கண்டவற்றின் வழி பண்டு மணிபல்லவத்திலும் நாகநாட்டிலும் வாழ்ந்த தமிழர்கள் பௌத்த மதத்தினைப் பின்பற்றினமையை அறியலாம். அத்தோடு அதே நாகநாட்டுப் பீலிவளைக்குச் சோழன் வழியுதித்த அக் குழந்தை, கம்பலச் செட்டியின் கலம் கடலில் அழிய (மணிமேகலை 29/3-15), திரையினால் கரை சேர்ந்து சோழனிடம் ஒப்படைக்கப்பட்டமையால், திரையன் எனப்பட்டான். இவனே பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் பெரும்பாணாற்றுப்படையின் தலைவனாகப் பாடப்பெற்ற ‘தொண்டைமானிளந்திரையன்’. இதனைப் பின்வரும் சான்றுகளால் அறியலாம்.

“முந்நீர் வண்ணன் பிறங்கடை யந்நீர்த்
திரைதரு மரபி னுரவோ னும்பன்”
– பெரும்பாணாற்றுப்படை – 30-31

இவ்வடிகளுக்கு உரைகூறும் நச்சினார்க்கினியர் “நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று, நாககன்னியைப் புணர்ந்த காலத்து, அவள் யான்பெற்ற புதல்வனை என் செய்வேனென்ற பொழுது, தொண்டையை அடையாளமாகக் கட்டி கடலிலே விட, அவன் வந்து கரையேறின், அவற்கு யான் அரசவுரிமையை எய்வித்து நாட்டாட்சி கொடுப்பவென்று அவன் கூற, அவளும் புதல்வனை அங்கனம் வரவிடத் திரைதருதலின் திரைய னென்று பெயர் பெற்ற கதை கூறினார்” என்பனவாக விளக்குகிறார். இதற்கான மற்றொரு சான்று பெரும்பாணாற்றுப் படையின் இறுதி வெண்பாவிலும் காணக் கிடைக்கின்றது. 

“கங்குலு நண்பகலும் துஞ்சா வியல்பிற்றாய்
மங்குல்சூழ் மாக்கட லார்ப்பதூஉம் – வெஞ்சினவேற்
கான் பயந்த கண்ணிக் கடுமான் றிரையனை
யான்பயந்தே னென்னுஞ் செருக்கு”
– பெரும்பாணாற்றுப்படை – இறுதி வெண்பா

மேலும் பீவிளையின் மகனான இளந்திரையன் ஆண்ட தொண்டை நாட்டுப் பகுதி பண்டு மாவிலங்கை எனப்பட்டது. இவ் மாவிலங்கையை ஓவியர் எனும் நாக மரபினர் ஆண்டனர். அதே ஓவியர் மரபினர், ஈழத்து வடபாலினையும் ஆண்டதாக வி. கணகசபைப் பிள்ளை குறிப்பிடுவார். அந் நாக மரபினரே பௌத்தத்தைக் கைக்கொண்ட தமிழராவர் எனலாம்.

மேற்கண்டவற்றின் வழி அசோகர் காலத்தில் தமிழகம் போந்த பௌத்தம் பின் மணிபல்லவம் வழியாக ஈழம் பெயர்ந்து அங்குள்ள தமிழர்களிடம் பரவி, பிறகே சிங்கள மக்களிடமும் பரவிற்றெனலாம். இதனை மேலும் சில சான்றுகள் வழியிலும் அறியலாம்.

தொண்டை நாட்டில் முதன்முதலில் பௌத்தம் தலைப்பட்ட இடம் காஞ்சிபுரம். இதனால் இதனைப் பௌத்த காஞ்சி எனத் தொண்டை நாட்டினர் கொண்டாடினர். இதற்கான எச்சங்களை இன்றைய காஞ்சியிலும் காணவியலும். அறப்பனஞ்சேரி, அறவணஞ்சேரி, புத்தேரித்தெரு என்பனவான இடப்பெயர் வழக்குகள் இன்றும் அங்கு உண்டு. மேலும், காஞ்சியில் முதன்முதல் தோன்றிய விகாரை மூலசோம விகாரை எனப்பட்டது (மூலம் – முதல்). இது குறித்து மயிலை சீனி வேங்கடசாமியின் கூற்றுகளைக் காண்போம்.3

“கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த புத்தகோச ஆசாரியார் பீடக நூல்களுக்கு உரைகள் எழுதியவர். இவர் தமது நண்பர்களான சுமதி, ஜோதிபாலர் என்னும் பௌத்த பிக்குகளுடன் காஞ்சிபுரத்தில் வசித்திருந்ததாகவும், அவர்களின் வேண்டுகோளின்படி இலங்கைக்குச் சென்றதாகவும் தமது மனோரதபூரணீ என்னும் உரையில் குறிப்பிடுகிறார். புத்தகோசர் காஞ்சியில் இருந்தபோது அவருக்கு அண்டாத்தகதா என்னும் நூல் கிடைத்தாகவும், அந்நூல் தாம் திரிபிடகங்களுக்கு உரை எழுதுவதற்குத் துணையாக இருந்தது என்றும், சமந்தபாசாதிகா என்னும் உரையில் இவர் கூறுகிறார்.” 

ஆசாரிய தர்மபாலரும், அபிதம்மாத்த சங்கிரதம் முதலிய நூல்களை இயற்றிய அநுருத்தரும் காஞ்சியில் பிறந்தவர்கள் என மயிலை சீனி வேங்கடசாமி கூறிச்செல்கின்றார். இவை போன்றதே காவிரிப்பூம்பட்டினத்திலும் மதுரையிலும் பல விகாரைகள் இருந்தன. இதனை மயிலையாரின் நூலில் விரிவாகக் காணலாம். தமிழகத்தில் உள்ள தலைநகரங்களின் பௌத்தப் பள்ளிகள் பெரும்புகழ் பெற்றதைப் போலவே, ஈழத்திலும் பல பள்ளிகள் பெரும்பேறு பெற்றன. 

அடிக்குறிப்புகள்

  1. மயிலை.சீனி.வேங்கடசாமி; பௌத்தமும் தமிழும் – 2010: பக். 24.
  2. K.A. நீலகண்ட சாஸ்திரி; தென்னிந்தியாவைப் பற்றிய அயல்நாட்டார் குறிப்புகள்.
  3. மயிலை.சீனி.வேங்கடசாமி; பௌத்தமும் தமிழும். பக். 48.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

4758 பார்வைகள்

About the Author

ஜெகநாதன் அரங்கராஜ்

முனைவர் ஜெ. அரங்கராஜ் யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்தவர். இவர் பழந்தமிழ் இலக்கியத் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம் முதலான துறைகளில் தமது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். சிங்கப்பூர்த் தமிழ்ப் பாடநூற்கள் குறித்தும் பண்டைத் தமிழர்களின் அயலகத் தொடர்புகள் குறித்தும் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ‘செம்மொழித் தமிழ் இலக்கண, இலக்கிய மேற்கோள் அடைவு’ என்னும் இவரது நூல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் ஈழம், தமிழகம் என இரண்டு தலங்களிலும் ஆய்வு மேற்கொண்டுள்ள ஆய்வாளராக இவர் திகழ்கின்றார்.