குருநாகல் நகரில் இருந்து தம்புள்ளைக்குச் செல்லும் வீதியில் இப்பாகமுவ சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியில் இருந்து வடக்குப் பக்கமாக புல்னாவைக்குச் செல்லும் வீதியில் சுமார் 10 கி.மீ சென்றதும் பாதையின் இடது பக்கம் அதாவது மேற்குப் பக்கத்தில் ஒரு பெரிய மலைத்தொடரைக் காணலாம். இதுவே தொழுகந்த எனும் மலையாகும். இம்மலையின் கிழக்குப்பக்க அடிவாரத்தில் ஹிபவுவ எனும் காட்டுப்பகுதி அமைந்துள்ளது.
மலைப்பறைகள் நிறைந்த இக்காட்டுப்பகுதி நாகலேன என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஓர் இயற்கையான மலைக்குகையில் கற்புருவம் வெட்டப்பட்டு, பிராமி எழுத்துகளில் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
“உதியஹ அயக பருமக நாக குலஹ லேனே சகச”
இதன் பொருள் “The cave of the family of the chief Naga, of prince Uthi, [is given] to the Sangha” என்பதாகும். இது “இளவரசன் உதியவின், பெருமகன் நாகவின் குலத்தவரின் குகை சங்கத்தார்க்கு வழங்கப்பட்டது” என்பதாகும்.
இம்மலைக்குகை நாக குலத்தவர்களுக்குச் சொந்தமானது என்பது இக்கல்வெட்டின் மூலம் தெரியவரும் அரிய செய்தியாகும். இக்குகையைப் பயன்படுத்தி வந்த நாக குலத்தவர்கள் பின்பு இக்குகையை சங்கத்தார்க்கு தானமாக வழங்கியுள்ளனர்.


நாகனின் குகை பற்றிக் குறிப்பிடும் கும்புறுலேன கல்வெட்டு
குருநாகல் நகரில் இருந்து வடகிழக்குப் பக்கமாக தொடங்கஸ் லந்தைக்குச் செல்லும் வீதியில் 17 கி.மீ தூரத்தில் கும்புறுலேன ரஜமகா விகாரை சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியில் இருந்து கிழக்குப்பக்கமாகச் செல்லும் வீதியில் உள்ள முத்துமாரி அம்மன் கோயிலைக் கடந்து, சுமார் 100 மீற்றர் தூரத்தில் கும்புறுலேன ரஜமகா விகாரை காணப்படுகிறது. இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தில் ரிதி விகாரை மலை அமைந்துள்ளது.
இவ்விகாரையின் அருகில் உள்ள மலைப் பாறைகளில் இயற்கையாக அமைந்துள்ள கற்குகைகள் சிலவற்றில் கற்புருவங்கள் வெட்டப்பட்டுள்ளன. இக் கற்புருவங்களின் கீழே பிராமி எழுத்துகளில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கற்குகைகளில் மொத்தமாக 8 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு கல்வெட்டில் நாகர் பற்றி எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு:
“நாகஹ .. .. .. லேனே [உபச]க உதிய லேனே”
இதன் பொருள், Of Naga, the cave .. .. .. the cave of the [lay worshipper] Uttiya என்பதாகும். தமிழில் இது, “நாகவின் .. .. .. குகை பாமர பக்தன் உத்தியவின் குகை” எனப் பொருள்படும்.





நாகதத்தன் பற்றிக் குறிப்பிடும் நுவரகந்த கல்வெட்டு
குருநாகல் மாவட்டத்தில் உள்ள வாரியப்பொல நகரிலிருந்து கிழக்கு நோக்கி ஹிரிபிடிய என்னுமிடத்திற்குச் செல்லும் வீதியில் உள்ள அமுணுகம எனும் ஊரின் வடக்கில் 5 கி.மீ தூரத்தில் நுவரகந்த மலைக் குகைகள் காணப்படுகின்றன.
இங்குள்ள கற்குகைகளில் மொத்தமாக 20 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு கல்வெட்டு நாகர் பற்றிக் கூறுகிறது. அதில் எழுதப்பட்டுள்ள விபரங்கள் பின்வருமாறு:
“பருமக உதயஹ நாகததஹ லேனே சகச”
இதன் பொருள், The cave of the chief Udaya [and] of Nagadatta [is given] to the Sangha. தமிழில் இது “பெருமகன் உதயவினதும், நாக தத்தவினதும் குகை சங்கத்தார்க்கு வழங்கப்பட்டது” எனப் பொருள்படுகிறது. நாகதத்த எனும் சொல்லின் அர்த்தம் ‘நாகத்தால் அளிக்கப்பட்டவன்’ என்பதாகும்.





பெருமகன் நாகன் பற்றிக் கூறும் பட்டஹமுல்லே விகாரைக் கல்வெட்டு
குருநாகல் மாவட்டத்தில் உள்ள வாரியப்பொல நகரில் இருந்து கிழக்கு நோக்கி ஹிரிபிடிய என்னுமிடத்துக்குச் செல்லும் வழியில் பிரதான வீதியில் இருந்து சற்றுத் தூரத்தில் காணப்படும் காடும், மலைப்பாறைகளும் நிறைந்த இடத்தில் பட்டஹமுல்லே விகாரை அமைந்துள்ளது.
இங்கு காணப்படும் இயற்கையான கற்குகைகளில் மொத்தமாக 4 பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரு கல்வெட்டுகளில் நாகர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாகர் பற்றிய முதலாவது கல்வெட்டில் இரண்டு வரிகளில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
“பருமக நாக புத பருமக அசலிய லேனே
அகட்ட அனகட்ட சட்டு திச சகச”
இதன் பொருள் “The cave of the chief Asali, son of the chief Naga, [is given] to the Sangha of the four quarters, present and absent” என்பதாகும். தமிழில் இது “பெருமகன் நாகவின் புதல்வனான பெருமகன் அசலியின் குகை நாலா திசைகளிலும் இருந்து வரும் சங்கத்தாருக்கு அவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் வழங்கப்பட்டுள்ளது” எனப் பொருள்படும்.
நாகர் பற்றிய இரண்டாவது கல்வெட்டின் நடுப்பகுதியில் உள்ள எழுத்துகள் சில சிதைந்துள்ளன. அக்கல்வெட்டில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:
“பத நாக ரஜ .. .. .. .. ஹ லேனே”
இதன் பொருள் “The cave of Lord Naga, King .. .. ..” என்பதாகும். இது “சுவாமி நாகவின் குகை, மன்னன் .. ..” எனப் பொருள்படும். இக்கல்வெட்டுகள் இரண்டினதும் படியெடுக்கப்பட்ட படங்கள் கிடைக்கவில்லை.