சாரோன் பாலாவின் 'படகு மக்கள்'
Arts
17 நிமிட வாசிப்பு

சாரோன் பாலாவின் ‘படகு மக்கள்’ 

July 27, 2024 | Ezhuna

ஈழத்தில் போர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உக்கிரமாக நடந்திருக்கின்றது. அது அங்கிருந்த அனைத்து மக்களையும் ஏதோ ஒருவகையில் பாதித்திருக்கின்றது. இப்போது யுத்தம் முடிந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. போர் ஒரு கொடுங்கனவாய் மக்களின் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டிருந்தாலும், அதன் நிமித்தம் ஏற்பட்ட உடல்/உள வடுக்கள் இன்னும் இல்லாமல் போகவில்லை. இனங்களிடையே நல்லிணக்கம் மட்டுமில்லை, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆற்றுப்படுத்தல்கள், உதவிகள் கூட போரால் வெற்றி கொள்ளப்பட்ட அதிகாரத் தரப்பால் நிகழ்த்தப்படவில்லை. இன்னுமின்னும் இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு இனங்களும் துவிதங்களாகப் பிரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஈழத்துப் போர்ச்சூழலின் பின்னணியில் எழுதப்பட்ட பனுவல்களை முன்வைத்து வாசிப்புச் செய்யப்படுகின்ற ஒரு தொடராக ‘இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள்’ அமைகின்றது.

‘படகு மக்கள்’ (The Boat People), கனடாவில் கப்பலில் வந்து இறங்கிய ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசும் ஒரு புதினமாகும். ஐநூறுக்கு அதிகமான ஈழத் தமிழர்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக கடலில் பயணித்து கனடாவின் கிழக்குப் பகுதியில் வந்து சேர்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல் இதுவாகும். இந்நாவலில் மகிந்தன் என்பவனும், அவனது பத்து வயது மகனான செழியனும் முக்கிய பாத்திரங்களாகின்றனர். அவர்கள் கனடா வந்திறங்கியபின், அவர்களுக்காக வழக்காடும் பிரியாவினதும், அவர்களின் வழக்கை விசாரிக்கும் ஜப்பானியப் பின்புலத்தைக் கொண்ட கிரேஸினதும் கதைகள் சமாந்திரமாக இதில் கூறப்படுகின்றன.

கனடா, அகதி கோரி வருபவர்களை அரவணைக்கின்ற ஒரு நாடாக இருந்திருக்கின்றது. எனவே எவ்வளவு ஆபத்தாக இருப்பினும், கனடாவுக்கு வந்து சேர்ந்துவிட்டால் புதிய வளமானதொரு வாழ்வு கிடைத்துவிடுமென்று நம்பி மகிந்தன் மட்டுமல்ல ஏனைய பலரும் இப்பயணத்தை மேற்கொள்கின்றனர். ஆனால் அவர்களுக்கு வேறுவிதமான வரவேற்பு கனடாவில் கிடைக்கின்றது. இந்தக் கப்பலில் பயங்கரவாதிகளும், குற்றவாளிகளும் வருகின்றனர்; அவர்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டு மகிந்தனும், அவனது மகனான செழியனும் தடுப்பு முகாமில் அடைக்கப்படுகின்றனர். செழியன் குழந்தையாததால், அவன் மகிந்தனிடமிருந்து பிரிக்கப்பட்டு வேறொரு முகாமில் பெண்களோடு அடைக்கப்படுகின்றான்.

மகிந்தனுக்கு அழகான குடும்பமொன்று கிளிநொச்சியில் இருந்தது. இந் நாவலில், இறுதி யுத்தத்திற்கு முன்பான சமாதான காலத்தில் இருந்த மகிந்தனது வாழ்வு விரிவாகப் பேசப்படுகின்றது. மகிந்தனின் மனைவியான சித்ரா, செழியன் பிறக்கும் போது இறந்துவிடுகின்றார். பின்னர் எப்படியோ இறுதி யுத்தத்தில் அருந்தப்பில் தப்பிப் பிழைத்த மகிந்தன், தனதும் தனது மகனினது நல்வாழ்வின் பொருட்டு இந்தக் கப்பல் பயணத்தை மேற்கொள்கின்றான். மகிந்தனது வழக்கை விசாரிக்கும் கனடிய அரசு சார்பான வழக்கறிஞர்கள், மகிந்தன் உள்ளிட்ட அனைவரினதும் உண்மை விபரங்களை இலங்கை அரசுக்கு அனுப்பிச் சரி பார்க்கின்றனர். ஒருவர், தனது சொந்த நாட்டிலிருந்து உயிருக்கு உத்தரவாதம் இல்லையென அகதியாகத் தப்பி வரும்போது, அந்த நபரின் உண்மை விபரங்களை, தப்பி வந்த நாட்டுக்கு அனுப்பி உறுதிப்படுத்தல் அறமான என்கின்ற கேள்வியை மகிந்தனுக்காக வழக்காடும் பிரியா கேட்கின்றார். அதுவரை இல்லாத ஒரு புதிய முறையை கனடிய அரசு இந்த அகதிகள் விடயத்தில் செய்து பார்ப்பது மனித உரிமைகளில் அக்கறை கொள்கின்ற பிரியாவை மனம் நோகச் செய்கின்றது.

இவ்வாறு மகிந்தனும், செழியனும் பிரிக்கப்பட்டதால், மகிந்தனுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் பேசப்படுகின்றன. மகிந்தன் உள்ளிட்ட பிறர் தமது எதிர்காலம் குறித்த நிச்சயமின்மைகளோடு மாதக்கணக்கில் தடுப்பு முகாங்களில் இருக்கும் அவதியையும் இந்நூலின் ஆசிரியரான சாரோன் பாலா விரிவாகப் பேசுகின்றார். அதேவேளை சமாந்திரமாக, இவர்களின் வழக்கை விசாரிக்கும் கிரேஸின் குடும்பப் பின்னணியும் பேசப்படுகின்றது. கிரேஸ் ஜப்பானியப் பின்புலத்தில் இருந்து வந்தவர். இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது கனடாவிலிருந்த ஜப்பானியர்கள் அனைவரும் தடுப்பு முகாங்களுக்கு அனுப்பப்பட்டு, ஜப்பானிய அரசின் ஆதரவாளர்கள் என்கின்ற கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டவர்கள். அந்த வழித்தோன்றல்களில் இருந்து வந்த கிரேஸ் கூட, அன்றைய‌ பழமைவாதக் கனடிய அரசின் கட்டளைகளுக்குப் பணிகின்றவராக, கப்பலில் வந்த அகதிகளை சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றார்.

அவர் மட்டுமல்ல அரச தரப்பு வழக்கறிஞரான இந்திய வம்சாளிப் பெயருள்ள மிஸ். சிங்கும் மிகக் கடுமையான கேள்விகளை ஈழத்தமிழ் அகதிகளை நோக்கி நீதிமன்றத்தில் வீசுகின்றார். இந்தப் புதினத்தில் அடைக்கலந் தேடி வந்தவர்களின் பின்னணி வாழ்க்கை மட்டுமின்றி, நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளும் ஆழமாக அலசி ஆராயப்படுகின்றன. இப்படி அடைக்கலந்தேடி வந்த ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி, கனடாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான புலிகளின் தாலியென்று அந்த சிங் வம்சாவளிப் பெண்மணி வாதாடுகின்றார். இல்லை அது புலிகள் அணியும் தாலியல்ல, அது அனைவருக்கும் பொதுவான தாலி என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க நீண்டகாலம் எடுக்கின்றது. அதனால் அந்தப் பெண்ணின் வழக்கு நெடுங்காலத்துக்கு ஒத்திவைக்கப்படுகின்றது. அவர் மீண்டும் தடுப்புக் காவலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்.

மகிந்தனின் வழக்கும் சிக்கலான நிலைக்குப் போகின்றது. கிளிநொச்சியில் ஒரு மெக்கானிக்காக இருக்கும் மகிந்தன், புலிகளின் வாகனங்களைத் திருத்திக் கொடுத்தவர் என்று குற்றஞ் சாட்டப்படுகின்றார். அந்த வாகனத்திலேயே குண்டுகள் நிரப்பப்பட்டு கொழும்பில் ஒரு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதென கனடிய அரச வழக்கறிஞர்கள் நிரூபிக்க முயல்கின்றனர். மகிந்தன் அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன நடந்ததென விபரிக்க முயல்கின்றான். புலிகள் தமது வாகனத்தைத் திருத்தக் கேட்டபோது வேறு வழியில்லாது தான் திருத்திக் கொடுத்தேனே தவிர அந்த வாகனத்தை குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தியது தனக்கு தெரியாது என்று கூறுகின்றான். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும்போது புலிகள் சொல்வதைக் கேட்பதைத் தவிர தமக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை என்று மகிந்தன் சொல்வதை நீதிமன்றம் கேட்கத் தயாரில்லாததால், மகிந்தனின் வழக்கு ஒத்திவைக்கப்படுகின்றது. அவ்வாறே இந்த நாவலும் மகிந்தன் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படப் போகின்றாரா, அல்லது கனடிய மண்ணில் வாழ அனுமதிக்கப்படுகின்றாரா என்ற தெளிவான பதிலைச் சொல்லாது முடிவடைகின்றது.

மகிந்தனின் வழக்கு இவ்வாறு இழுபறியில் இருக்கும்போது, பிரியாவின் மாமா ஒருவரின் மூலம் இலங்கையின் கடந்தகால வரலாறு சொல்லப்படுகின்றது. எவ்வாறு தமிழர்கள் சிங்களப் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டு இரண்டாம் தர மக்களாக நடத்தப்பட்டனர் என்பதோடு 83 ஆம் ஆண்டுக் கலவரம் கொடுத்த அழிவுகள் எல்லாம் பேசப்படுகின்றன. இனி இந்த நாட்டில் இருக்க முடியாது என்று 80 களில் பிரியாவின் தகப்பனார் குடும்பத்துடன் கனடாவுக்குப் புலம்பெயர்ந்துவிட, இந்த மாமாவோ நான் போராடப்  போகின்றேன் என்று புலிகளோடு இணைகின்றார். அதன்பிறகு அவர், இந்திய இராணுவத்தோடு போரிடும் போதும் புலிகளோடு இருக்கின்றார். இந்திய இராணுவச் சுற்றிவளைப்பின் போது விளாமரத்தில் ஏறி இவர் தப்பிவிட, அவரின் நண்பர் ஒருவர் சுடப்பட்டு இறந்துவிடுகின்றார். அங்கிருந்து பின்னர் இவரும் தப்பி, கனடாவுக்குப் புலம்பெயர்கின்றார். புலிகளில் இணைந்த மாமாவுக்கு, அதற்குப் பின்னரான புலிகளின் செயற்பாடுகள் பிடிப்பதில்லை. அவர்களை கடும் விமர்சனம் செய்கின்றவராக இருக்கின்றார். ஒருவகையில் சாரோன் பாலா, இந்த மாமாவின் கதையைச் சொல்வதன் மூலம், மகிந்தனின் சிக்கலான கடந்தகால வாழ்க்கைப் புரிந்து கொள்ள, வாசகரை மறைமுகமாக அழைக்கின்றார் என்று நாம் புரிந்துகொள்ள முடியும். ஒருகாலத்தில் புலிகளில் இணைந்திருந்த பிரியாவின் மாமாவால் கனடிய நீரோட்டத்தில் இணைந்து நல்லதொரு குடிமகனாக வாழ முடியும் போது, மகிந்தனுக்கு மட்டும் அது ஏன் முடியவில்லை? புலிகளுக்கு உதவினார் என்ற ஒரு காரணத்துக்காக மகிந்தனை அவனின் மகனிடமிருந்து பிரிந்து மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது நியாயமானதா? என்ற கேள்வி மறைமுகமாக எழுப்பப்படுகின்றது.

மகிந்தன், பிரியா, கிரேஸ் உள்ளிட்ட பல சிக்கலான பாத்திரங்கள் பல்வேறு பரிணாமங்களில் சிந்திக்கக்கூடிய நிகழ்வுகளினூடாக அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். தனது வழக்குத் தோற்கப் போகின்றது, தன்னை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப் போகின்றார்கள் என நம்பும் மகிந்தனின் நண்பனொருவன் சிறைக்குள்ளேயே தற்கொலை செய்துகொள்கின்றான். அது மகிந்தனை இன்னும் உளவியல் சிக்கலின் ஆழத்துக்குள் தள்ளிவிடுகின்றது. வெற்றிகரமாக வழக்கு முடிந்து வெளியே செல்பவர்களைப் பார்த்து, நாம் எப்போது இவர்களைப் போல் தடுப்பு முகாங்களில் இருந்து வெளியே போய் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியும் என யோசிப்பவர்களை, வெறுமை பெரும் சுழலென மூடிக்கொள்கின்றது. இவ்வாறு வழக்குகளுக்குப் போகும்போது கால்களிலும் கைகளிலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுச் செல்லப்படும் உக்கிரமான தடுப்பு முகாம் வாழ்வை, பல பாத்திரங்கள் ஊடாக நம் முன்னே உலாவ விடுகின்றார் சாரோன்.

கனடாவுக்கு அகதிகள் கப்பல்களில் காலங்காலமாக வந்து கொண்டிருக்கின்றனர். உலக மகா யுத்தங்களின் போது பலர் அகதிகளாக ஐரோப்பாவிலிருந்து தப்பி வந்திருக்கின்றனர். இன்னும் வரலாற்றைச் சற்று முன்னோக்கிப் பார்த்தால், 1899 இல் 7,500 டோக்பார்ஸ் ரஷ்யாவில் இருந்து அகதிகளாக வந்திருக்கின்றனர். அன்றைய ஜார் மன்னன் இம் மக்களை ஒடுக்கத் தொடங்க, அவர்கள் கனடாவுக்கு வந்திறங்கியிருக்கின்றனர். இம்மக்கள் கனடாவுக்கு வர உதவி செய்தவர் பிரபலம் வாய்ந்த எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய். அவர் ‘புத்துயிர்ப்பு’ என்ற நாவலை எழுதி அது விற்கப்பட்ட பணத்தில் டோக்பார்ஸை கனடாவுக்கு அனுப்பியிருந்தார்.

அவ்வாறே பிரித்தானியா – அமெரிக்கா சிவில் யுத்தத்தின் போதும் பலர் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்திருக்கின்றனர். அமெரிக்காவின் மிகப்பெரும் துயரார்ந்த வரலாற்றுச் சித்திரமான கறுப்பின அடிமைகள் தமது விடுதலைக்காக அமெரிக்காவிலிருந்து கனடாவைத் தேடியே முதன்முதலில் தப்பி வந்திருக்கின்றனர்.

இவ்வாறு அடைக்கலந் தேடி வந்த அகதிகளை கனடா எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இருகரம் கூப்பி வரவேற்றதா என்றால், இல்லை என்று தான் சொல்லமுடியும். இந்தியாவில் இருந்து 1914 இல் ‘Komagata Maru’ என்ற கப்பலில் வந்த முந்நூறுக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கனடாவுக்குள் அனுமதிக்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். அதற்கான மன்னிப்பை, கனடாவின் இருவேறு பிரதமர்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கடந்தபின் பொதுவெளியில் கேட்டிருக்கின்றார்கள்.

ஈழத்து அகதிகள் முதன்முதலில் வந்த கப்பல் 1986 இல் கனடாவில் கிழக்குக்கரையில் இறங்கியது. அன்று கனடிய மக்களிடையே இந்த அகதிகள் மீது அவ்வளவு எதிர்ப்பு இல்லையென்றாலும், அன்றைய பிரதமராக இருந்த மல்ரோனி கூறிய வார்த்தைகள் இன்றும் நினைவுகொள்ளத்தக்கது : 

“Canada was built by immigrants and refugees, and those who arrive in lifeboats off our shores are not going to be turned away” என்று உறுதியாகச் சொன்னார்.

ஆனால் பின்னர் ஈழத்தில் இறுதி யுத்தம் முடிந்து கப்பல்களில் 2009 – 2010 காலகட்டத்தில் புறப்பட்ட மக்களை இதே கனடா மிக மோசமாக வரவேற்றது. பொதுவெளியில் வந்து அந்த அகதிகள் தமது கதைகளைச் சொல்லமுன்னரே, இந்தக் கப்பலில் வந்த அனைவருமே ‘பயங்கரவாதிகள்’ என அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களின் அபிப்பிராயத்தை அரசே குழப்பியது. அது மட்டுமின்றி கப்பலில் வந்த 500 இற்கும் மேற்பட்ட மக்களை தடுப்பு முகாங்களுக்கு அனுப்பி வைத்தது. ஆண்கள், பெண்களை மட்டுமல்ல, குழந்தைகளாக 10 வயதுகளில் இருந்த சிறுவர்களைக் கூட விசாரணை என்ற பெயரில் ஒரு வருடத்துக்கு மேலாகச் சிறைக்குள் வைத்து, கனடா தனது மனிதாபிமான முகத்தின் இன்னொரு பக்கத்தைக் காட்டியது.

கிட்டத்தட்ட இன்று பதினைந்து வருடங்கள் கடந்த பின்னும், அந்தக் கப்பலில் வந்த மூன்றில் இரண்டு பங்கு அகதிகளே கனடாவில் சட்டபூர்வமாக வாழ அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மிகுதி மூன்றிலொரு பங்கினர் எவ்வித உரிய ஆவணங்களும் இல்லாது கனடாவுக்குள் இருக்கின்றனர். இலங்கைக்கு மீண்டும் சென்றால் தமது உயிருக்குப் பாதுகாப்பில்லை என்று சொன்னபோதும், சிலர் ‘பயங்கரவாதிகள் / குற்றவாளிகள்’ என்று சொல்லப்பட்டு, இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

இப்படி இந்தக் கப்பல்களின் வருகையின் பின், கனடாவின் அகதிகளுக்கான முக்கிய சட்டத்தை அன்றைய வலதுசாரி அரசாங்கம் திருத்தி எழுதியது. ‘ஒரு காலத்தில் கனடா என்கின்ற நாடு குடிவரவாளர்களாலும் அகதிகளாலும் கட்டியெழுப்பட்டது, நாம் ஒருபோதும் அகதிநிலை கோரி வந்தவர்களைத் திருப்பி அனுப்பப் போவதில்லை’ எனக் கூறிய ஒரு பிரதமரின் வார்த்தைகள் வெறும் கடந்த கால நினைவுகளாக உதிர்ந்து போயிற்று.

ஈழப் பிரச்சினை பற்றி ஆங்கிலத்தில் எழுதப்படும் பல நாவல்கள் 83 இனக் கொலையையே முக்கிய பேசுபொருளாகக் கொண்டிருக்கின்றன. ‘படகு மக்கள்’ என்கின்ற இந்த நாவல் இறுதி யுத்தத்தைக் களமாகக் கொண்டு இயன்றளவு தான் எடுத்துக்கொண்ட பின்னணிக்கு நியாயம் சேர்ப்பதாகவே எழுதப்பட்டிருக்கின்றது. இந் நாவல் மனிதாபிமானம் பற்றியும், சமத்துவ வாழ்வு பற்றியும் பேசியபடி, அனைத்துத் தரப்பையும் அவர்கள் செய்த தவறுகளுக்காக விமர்சிக்கவும் தயங்கவில்லை என்பதை முக்கிய ஓர் அவதானமாக இங்கே நாம் வைக்க முடியும். நியாயத் தராசின் எந்த முள்ளின் பக்கம் சாயவேண்டும் என்கின்ற எவ்வித முற்சார்பும் இல்லாது எழுத – யுத்தத்திற்கு வெளியே இருக்கும் – அதேவேளை யுத்தத்தோடு தொடர்புடைய – சாரோன் பாலா போன்ற ஈழத்தமிழரின் இரண்டாம் தலைமுறையால்தான் முடியும் போல இருக்கின்றது.

நமது நாட்டில் நடந்த யுத்தத்தை மட்டுமின்றி, நாம் ஏன் அகதிகளாக மேற்கத்தேய நாடுகளுக்கு புகலிடம் தேடி வந்தோம் என்பதையும் இந்த நாவல் எவ்வித அதீத நியாயப்படுத்தல்களும் இல்லாது இயல்பாக முன்வைக்கின்றது. அத்துடன், 2010 இல் சூரியக் கடல் (Sun Sea) என்கின்ற கப்பலில் ஈழத்தமிழர்கள் வந்தபோது ஏற்பட்ட எதிர்ப்புக் குரல்களுக்கு மறுப்பாக, அப்படி வந்த அகதிகளுக்கும் ஒரு குரல் இருக்கின்றது; அதைக் கேட்கவேண்டும் என உரத்துச் சொல்கின்ற ஒரு புனைவு ஆவணமாகவும் இது இருப்பது கவனிக்கத்தக்கது. சரி X பிழை, நியாயம் X அநியாயம் என்கின்ற துவிதப் பிரிப்புகளுக்கு அப்பால், ஏன் அந்த மக்கள் மூன்று மாதக் கடும் பயணம் மேற்கொண்டு, ஒழுங்கான உணவோ, குளிப்போ, கழிப்போ இன்றி கனடாவைத் தேடி வந்தார்கள் என்பதைக் கனடிய பொதுப்புத்திக்கு உணர்த்த, இந்த நாவல் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கும் என நாம் உறுதியாக நம்பலாம்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

5642 பார்வைகள்

About the Author

இளங்கோ

யாழ்ப்பாணம் அம்பனையில் பிறந்தவர். ஈழத்திலிருந்து போரின் நிமித்தம் தனது பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து தற்போது ரொறொண்டோவில் வசித்து வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், நாவல் தவிர, 'டிசே தமிழன்' என்னும் பெயரில் கட்டுரைகளும், விமர்சனங்களும், பத்திகளும் பல்வேறு இதழ்களிலும், இணையத்தளங்களிலும் எழுதி வருகின்றார். நாடற்றவனின் குறிப்புகள் (கவிதைகள் - 2007), சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (சிறுகதைகள் -2012), பேயாய் உழலும் சிறுமனமே (கட்டுரைகள் - 2016), மெக்ஸிக்கோ (நாவல் - 2019), உதிரும் நினைவின் வர்ணங்கள் (திரைப்படக்கட்டுரைகள் - 2020), ப்யூகோவ்ஸ்கி கவிதைகள் (மொழிபெயர்ப்பு -2021), தாய்லாந்து (குறுநாவல் - 2023) ஆகியவை இதுவரையில் இவர் எழுதிய பனுவல்கள் ஆகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • September 2024 (11)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)