லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் - வட்டுக்கோட்டை
Arts
11 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – வட்டுக்கோட்டை

February 3, 2025 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

சென்ற கட்டுரையில் மானிப்பாய்க் கோவிற்பற்றைப் பற்றி லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படம் தரும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றுத் தொடர்பாக அந்நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பற்றி ஆராயலாம். நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பு வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றில் வட்டுக்கோட்டை மேற்கு, வட்டுக்கோட்டை கிழக்கு, அராலி ஆகிய மூன்று துணைப்பிரிவுகள் இருப்பதாகக் காட்டுகிறது. ஆனால், நிலப்படத்தில் இரண்டு துணைப்பிரிவுகளை மட்டுமே குறித்துள்ளனர். வட்டுக்கோட்டை கிழக்குப் பிரிவை நிலப்படத்தில் எல்லை குறித்துக் காட்டவில்லை (படம்-1).

நிலப்படம் காட்டும் வட்டுக்கோட்டைக் கோவிற்பற்று இன்றைய வலிகாமம் மேற்கு – சங்கானைப் பிரதேச செயலர் பிரிவுக்குள் அடங்குகிறது. நிலப்படத்தில் கட்டியுள்ள வடக்கு எல்லையும் அமைவிடத்தைத் துல்லியமாக அறிவது கடினம் என்றாலும், இன்றைய கிராம சேவையாளர் பிரிவுகளான வட்டுக்கோட்டை தென்மேற்கு, வட்டுக்கோட்டை வடக்கு, வட்டுக்கோட்டை மேற்கு, வட்டுக்கோட்டை கிழக்கு, சங்கரத்தை, அராலி மேற்கு, அராலி மத்தி, அராலி வடக்கு, அராலி தெற்கு, அராலி கிழக்கு ஆகியவை இந்தக் கோவிற்பற்றுக்குள் அடங்கியிருந்திருக்கும் எனலாம். பிற்காலத்தில் வடக்கு எல்லையை அண்டிச் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அதேவேளை, உள்ளூராட்சி நிர்வாகத்தைப் பொறுத்தவரை இது, வலிகாமம் மேற்குப் பிரதேசசபையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

எல்லைகள்

வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றின் வடக்குப் பகுதியின் மூன்று பக்கங்களிலும் சங்கானைக் கோவிற்பற்றும், தெற்குப் பகுதியின் மேற்கு, தெற்கு எல்லைகளில் கடலேரியும் கிழக்கு எல்லையில் வழுக்கியாறும் உள்ளன. இக்கோவிற்பற்றின் கிழக்கு எல்லையை அண்டியே வழுக்கியாறு கடலேரியுட் கலக்கிறது. மேற்குப் பக்கம் உள்ள கடலேரிக் கரை எதிர்ப் பக்கத்திலுள்ள காரைநகர், வேலணை ஆகிய தீவுகளை நோக்கியபடி அமைந்துள்ளது. கிழக்கு எல்லையிலுள்ள வழுக்கியாற்றுக்கு அடுத்த பக்கத்தில் மானிப்பாய்க் கோவிற்பற்று உள்ளது. வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றின் தென் அரைப் பகுதியை அராலி துணைப்பிரிவு உள்ளடக்குகிறது. வடக்கு அரைப்பகுதியை வட்டுக்கோட்டை மேற்கு என நிலப்படம் குறித்துக் காட்டுகிறது. படத்தில் எல்லை குறித்துக் காட்டாவிட்டாலும், வட்டுக்கோட்டை கிழக்குப் பிரிவும் மேற்படி வடக்கு அரைப் பகுதிக்குள் அடங்குவதாகக் கொள்ளமுடியும் (படம்-2). குறிப்பாக, சங்கரத்தையும் அதை அண்டிய சில பகுதிகளும் வட்டுக்கோட்டை கிழக்குத் துணைப்பிரிவுக்குள் அடங்கியிருந்திருக்கக்கூடும்.

வீதிகள்

இக்கோவிற்பற்றுக்குள் அடங்கிய பல வீதிகளை நிலப்படத்தில் காணமுடிகிறது. வட்டுக்கோட்டைத் தேவாலயத்துக்கு அருகில் காணப்படும் சந்திப்பில் மூன்று வீதிகள் இணைகின்றன. இச்சந்திப்பிலிருந்து தென்கிழக்குத் திசை நோக்கிச் செல்லும் வீதி, தெற்கெல்லையை அண்டி அமைந்த வழுக்கியாற்றைக் கடந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் செல்கிறது. நிலப்படம் வரையப்பட்ட காலத்தில் இவ்வீதி வழுக்கியாற்றைக் கடக்கும் இடத்தில் பாலம் எதுவும் இருக்கவில்லை. அதனால், மழைக்காலத்தில் போக்குவரத்துக் கடினமாக இருந்திருக்கும். வழுக்கியாற்றுப் பாலம் பிரித்தானியர் காலத்தில் அப்போதைய அரசாங்க அதிபராக இருந்த பேர்சிவல் அக்லன்ட் டைக் அவர்களின் முயற்சியால் 1843 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.1

இன்னொரு வீதி மேற்கு நோக்கிச் சென்று மூளாய் – தொல்புரம் எல்லையை அண்டிக் கடற்கரையை அடைகிறது. வட்டுக்கோட்டையில் இது தொடங்குமிடத்தில் பெரிதாக வரையப்பட்டுள்ள தேவாலய இல்லத்துக்கு இடம் தருவதற்காகப் போலும், வீதியைப் பெரிதாக வளைத்து வரைந்துள்ளனர். உண்மையில் இது இவ்வாறு இருந்திருக்க வாய்ப்பில்லை. லெயுசிக்காமின் தொகுப்பிலுள்ள முழு யாழ்ப்பாணக் குடாநாட்டையும் தீவுப்பகுதிகளையும் காட்டும் நிலப்படத்தில் இவ்வீதி நேராகவே உள்ளது. இவ்வீதியின் முடிவிடமே தற்காலத்தில் புன்னாலைப்பாலம் தொடங்குமிடம் ஆகும். மேற்படி வீதி புன்னாலைப் பாலத்தினூடாகக் காரைநகருக்குச் செல்கிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டையும் தீவுப்பகுதிகளையும் முழுமையாகக் காட்டும் மேலே குறிப்பிட்ட லெயுசிக்காமின் நிலப்படம் இவ்வீதி முடிவுறும் மூளாய்க் கரையிலிருந்தே காரைநகருக்கான கடல்வழிப்பாதை தொடங்குவதாகக் காட்டுகிறது. 

1560 ஆம் ஆண்டில் முதன்முறையாகப் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்தபோது இடம்பெற்ற நிகழ்வுகளை விவரித்த கோட்டூ என்பவர், யானைத்துறைக்குச் செல்லும் வீதி பற்றிக் குறிப்பிட்டிருப்பதையும்2 அந்த யானைத்துறை காரை நகரில் இருந்ததுபற்றியும் ஏற்கெனவே குறிப்பிட்டோம். வழுக்கியாற்றிலிருந்து வட்டுக்கோட்டைக்கும், அங்கிருந்து புன்னாலைக்கும் செல்லும் வீதிகள் மேலே குறிப்பிட்ட யானைத்துறைக்குச் செல்லும் வீதியின் பகுதிகள் என்பதில் ஐயமில்லை. எனவே, இவ்வீதி போர்த்துக்கேயர் காலத்துக்கு முற்பட்டது என்பது தெளிவு. முற்காலத்தில் யானை ஏற்றுமதி அரசாங்கத்துக்கு நல்ல வருமானத்தைத் தரும் செயற்பாடாக இருந்தது. இதனால், காரைநகரில் யானைத்துறை இயங்கிய காலத்தில் இந்த வீதி பொருளாதார முக்கியத்துவம் கொண்ட ஒரு வீதியாக இருந்திருக்கும்.

அடுத்த வீதி, வட்டுக்கோட்டையிலிருந்து வடகிழக்குத் திசையிற் சென்று சங்கானையுடனான எல்லைக்கு அருகே கிழக்கு நோக்கித் திரும்பிச் சங்கானையூடாக மானிப்பாய்க்குச் செல்வதாக நிலப்படம் காட்டுகிறது. வட்டுக்கோட்டையிலிருந்து வரும் வீதி கிழக்கு நோக்கித் திரும்பும் இடம் சித்தன்கேணிச் சந்தியாக இருக்கவேண்டும். தற்கால நிலப்படங்களோடு ஒப்பிடும்போது லெயுசிக்காமின் நிலப்படத்தில் சித்தங்கேணிச் சந்தியின் அமைவிடம் கூடுதலாகக் கிழக்கு நோக்கி நகர்ந்திருப்பதால் வீதி வடகிழக்குத் திசையில் செல்வதுபோல் வரையப்பட்டுள்ளது. தற்காலத்தில் சித்தன்கேணிச் சந்தியிலிருந்து மேற்கு நோக்கிப் புன்னாலை வரை செல்லும் வீதியையும் நேரே பண்டத்தரிப்புவரை செல்லும் வீதியையும் நிலப்படம் காட்டவில்லை. இதனால் இன்று நாற்சந்தியாக இருக்கும் சித்தன்கேணிச் சந்தியை நிலப்படம் ஒரு சந்தியாகக் காட்டவில்லை. 

மடம் ஒன்றைக் குறிப்பதன் மூலம் அராலித்துறையை நிலப்படம் காட்டுகிறது. இத்துறையை அண்மையிலுள்ள பகுதிகளுடன் இணைப்பதற்கு அக்காலத்தில் வீதித் தொடர்பு இருந்திருக்க வேண்டும். ஆனால், அத்தகைய வீதித் தொடர்பு இருப்பதை நிலப்படம் காட்டவில்லை. தற்காலத்தில், வட்டுக்கோட்டைச் சந்தியிலிருந்தும் வழுக்கியாற்றுப் பாலத்துக்கு அருகிலிருந்தும் வீதிகள் அராலித்துறைக்குச் செல்கின்றன. இவை நிலப்படத்தில் இல்லை. இவை அக்காலத்தில் முக்கியத்துவம் அற்றவையாக இருந்திருக்கலாம் அல்லது, நிலப்படத்தின் நோக்கத்துக்கு அவை தேவையற்றவையாகக் கருதப்பட்டிருக்கலாம்.

கட்டடங்கள்

மானிப்பாய்க் கோவிற்பற்றுக்குள் இருப்பதாக லெயுசிக்காமின் நிலப்படம் காட்டும் கட்டடங்களுள் வட்டுக்கோட்டை கிறித்தவத் தேவாலயமும் அதனோடிணைந்த குருமனையும் முக்கியமானவை. இவற்றைத் தவிர அராலித் துணைப் பிரிவுக்குள் கடற்கரை ஓரமாக ஒரு மடமும் உள்ளது.

தேவாலயமும் குருமனையும்

நல்லூர்க் கோவிற்பற்றைத் தவிர, இந்தக் கட்டுரைத் தொடரில் இதுவரை எடுத்தாளப்பட்ட எல்லாக் கோவிற்பற்றுகளிலும் தேவாலயமும் குருமனையுமே முக்கியமான கட்டடங்களாக நிலப்படத்திற் குறித்துக் காட்டப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். மேற்குறித்த எல்லாத் தேவாலயங்களிலும் குருமனைகள் ஏறத்தாழ ஒரே மாதிரியான குறியீடுகளாகவே காணப்பட்டன. ஆனால், வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றில் குறித்துள்ள குருமனை சற்று வேறுபட்டுக் காணப்படுகிறது. இது, இதுவரை பார்த்த குருமனைகளைவிடப் பெரிதாகவும் விரிவானதாகவும் காணப்படுகிறது. வழமையான குருமனையுடன் இணைந்ததாக நீளமான கட்டட அமைப்பொன்றை நிலப்படம் காட்டுகிறது. வேறு கோவிற்பற்றுகளில் இல்லாதவாறு இவ்விடத்தில் இவ்வாறான கட்டடம் காட்டப்பட்டிருப்பதாலும், அதைக் காட்டுவதற்காக அருகிலுள்ள வீதியைக்கூட வளைத்துக் காட்டியிருப்பதாலும், உண்மையிலேயே அவ்வாறான பெரிய கட்டடம் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

இது, வட்டுக்கோட்டைத் தேவாலயத் தொகுதி ஏதோவொரு வகையில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்த ஏனைய தேவாலயத் தொகுதிகளைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததைக் காட்டுவதாகக் கொள்ளக்கூடும். ஆனாலும், போல்தேயஸ் பாதிரியாரின் நூலிலுள்ள குறிப்புகளைப் பார்க்கும்போது, ஒல்லாந்தர் ஆட்சியின் தொடக்கப் பகுதியில் வட்டுக்கோட்டைத் தேவாலயத்துக்குச் சிறப்பு முக்கியத்துவம் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், அந்நூலிலுள்ள வட்டுக்கோட்டைத் தேவாலயத்தின் படத்தில் தேவாலய இல்லம் ஓரளவு பெரிய கட்டடமாகவே காட்டப்பட்டுள்ளது (படம்-3). இப்படத்தை வரைந்தவர் கட்டடத்தைப் பார்க்கவில்லை என்பதால் இப்படத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதே. அக்காலத்தில் தெல்லிப்பழைத் தேவாலயமே தலைமைத் தேவாலயமாக இருந்துள்ளது.3 நிலப்படம் வரையப்பட்ட 1719 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் வட்டுக்கோட்டைத் தேவாலயம் புதிய வகிபாகத்தைப் பெற்று வளர்ச்சி பெற்றிருக்கக்கூடும். 

1820 களில், பிரித்தானியரின் ஆட்சியின்கீழ் வட்டுக்கோட்டைத் தேவாலயம் அமெரிக்க மிசனின் முக்கியமான நிலையங்களில் ஒன்றாக விளங்கியது. 1816 ஆம் ஆண்டில் அமெரிக்க மிசன் பணிக்குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வந்த பின்னர் அவர்களிடம் கையளிக்கப்பட்ட ஐந்து ஒல்லாந்தர் காலத் தேவாலயங்களில் முதலில் இயங்கவைக்கப்பட்ட இரண்டு நிலையங்களில் வட்டுக்கோட்டையும் ஒன்று. மற்றது தெல்லிப்பழை. அமெரிக்க மிசனின் புகழ்பெற்ற செமினரியும் பிற்காலத்தில் வட்டுக்கோட்டையிலேயே நிறுவப்பட்டது. ஒல்லாந்தர்காலப் பிற்பகுதியில் வட்டுக்கோட்டை பெற்றிருந்த முக்கியத்துவத்தின் தொடர்ச்சியாகவே அமெரிக்க மிசன் காலத்திலும் அது முக்கியத்துவம் பெற்றதா என்பது ஆய்வுக்குரியது.   

எவ்வாறெனினும், அமெரிக்க மிசன் கையேற்றபோது வட்டுக்கோட்டைத் தேவாலயமும் அதனோடிணைந்த குருமனையும் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சிதிலமடைந்து இருந்தன என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும். அக்காலத்தில் ஒல்லாந்தர் தேவாலயம் 170 அடி நீளமும் 56 அடி அகலமும் கொண்டதாகவும், நான்கு அடி தடிப்புக் கொண்ட கற்சுவர்களுடன் கூடியதாகவும் இருந்துள்ளது.4

மடம்

நிலப்படம், அராலி துணைப்பிரிவின் தென்கிழக்குக் கரையோரத்தில் ஒரு மடம் இருப்பதைக் குறித்துக் காட்டுகிறது. ‘ராலி மடம்’ (Ralie maddam) என இதற்குப் பெயர் குறித்துள்ளனர். நிலப்படத்தில் பல இடங்களில் இவ்வாறான மடங்களுக்கு ஊர்ப்பெயரைத் தழுவியே பெயர் வழங்கப்பட்டிருப்பதால்,  இப்பெயரும் ‘அராலி மடம்’ என்பதன் திரிபாக இருக்கக்கூடும். இது இருக்குமிடம் இன்றைய அராலித்துறை என்பதில் ஐயமில்லை. நீண்ட காலமாகவே இவ்விடத்திலிருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் வேலணைத் தீவிலுள்ள வடக்குத்துறைக்கு, இடையிலுள்ள ஆழம் குறைந்த கடலேரியூடாகச் சிறு வள்ளங்கள் மூலமும் சிலவேளைகளில் கால்நடையாகவும் போக்குவரத்து இடம்பெற்றுள்ளது.5 எனவே, இங்கே குறிக்கப்பட்டுள்ள மடம், துறைகளை அண்டிப் பயணிகள் காத்திருப்பதற்காக அமைக்கப்பட்ட மடம் என்பதில் ஐயமில்லை. இதற்கு எதிர்க் கரையில் வேலணை வடக்குத் துறையிலும் ஒரு மடம் இருந்ததை லெயுசிக்காம் தொகுப்பிலுள்ள வேறு நிலப்படங்கள் காட்டுகின்றன.

குளங்கள்

வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றுக்குள் பதினாறு குளங்களை நிலப்படம் காட்டுகிறது. இவற்றுள் ஏழு குளங்களுக்கு மட்டுமே சிறப்புப் பெயர்கள் காணப்படுகின்றன. ஏனையவை குளம் (Tanck), கேணி (keúni) ஆகிய பொதுப் பெயர்களாலேயே குறிக்கப்பட்டுள்ளன. பதினாறு குளங்களில் வட்டுக்கோட்டை மேற்குப் பிரிவையும் கிழக்குப் பிரிவையும் உள்ளடக்கிய பகுதிக்குள் ஒன்பது குளங்கள் உள்ளன. இப்பிரிவில் இரண்டு நீர்நிலைகள் மட்டுமே வெட்டுத்துரவு, திக்கிராய்க் குளம் என்னும் சிறப்புப் பெயர்களுடன் காணப்படுகின்றன. எஞ்சியவற்றுள் மூன்று கேணிகளும் நான்கு குளங்களும் உள்ளன.  அராலிப் பிரிவுக்குள் காணப்படும் ஏழு குளங்களுள் கோணாவில் குளம், ஒல்லிக் குளம், பெரிய குளம், திக்கிரிக் குளம், பெந்தாலிக் குளம் ஆகிய சிறப்புப் பெயர்களுடன் கூடிய ஐந்து குளங்களும் குளம் என்ற பொதுப் பெயருடன் இரண்டு குளங்களும் உள்ளன.

தற்காலத்தில் அராலிப் பிரிவில் பதினாறு குளங்களும், வட்டுக்கோட்டைப் பிரிவில் அடங்கிய பகுதிகளுக்குள் பத்துக் குளங்களும் உள்ளதைப் பதிவுகள் காட்டுகின்றன.6 லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி அராலியில் ஏழு குளங்களே உள்ளதால், அக்காலத்தில் இருந்த பல குளங்களை நிலப்படம் காட்டவில்லை என்றே தோன்றுகிறது. வட்டுக்கோட்டையில் இன்று ஒரு குளமே கூடுதலாகக் காணப்படுகிறது. நிலப்படத்தில் கேணி, துரவு ஆகிய பெயர்களில் குறிக்கப்பட்டிருப்பவற்றைத் தற்காலத்தில் குளங்களாகக் கருதிப் பதிவு செய்துள்ளனரா என்பது தெரியவில்லை. 

நிலப்படத்திலுள்ள குளங்களுள் அராலிப் பிரிவிலுள்ள பெரிய குளம் இன்றுவரை பெயர் மாற்றமின்றி இருப்பதைக் காணமுடிகிறது. தற்காலப் பதிவுகளின்படி இதற்கு அராலிப் பெரிய குளம் என்ற பெயர் வழங்குகிறது. இதைவிட, வட்டுக்கோட்டைப் பிரிவுக்குள் இருப்பதாக நிலப்படம் காட்டும் திக்கிராய்க் குளம் என்ற பெயருடன் தற்காலப் பதிவில் சங்கரத்தைக் கிராம சேவையாளர் பிரிவுக்குள் ஒரு குளம் உள்ளது. மேற்படி குளங்கள் இரண்டும் ஒன்றாக இருக்கக்கூடும். நிலப்படத்தில் வட்டுக்கோட்டைப் பிரிவுக்குள் குறித்துள்ள வெட்டுத்துரவும், தற்காலப் பதிவிலுள்ள வெட்டுக்குளத்துக்கும் இடையில் பெயர் ஒற்றுமை இருந்தாலும் அவற்றின் அமைவிடங்களுக்கிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளதால் இவை குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது. ஏனைய பல குளங்கள் பெயர் மாற்றம் பெற்றுள்ளன என்பதில் ஐயம் இல்லை. ஆனால், ஒப்பிடும்போது அடையாளம் காணத்தக்க பெயர் ஒற்றுமை இல்லாததாலும் நிலப்படத்தில் அமைவிடங்களைத் துல்லியமாக அறிய முடியாததாலும் பெயர் மாற்றங்களைப் பற்றிய சரியான தகவல்களை அறிவது கடினமாக உள்ளது.

குறிப்புகள்

  1. செ. இராசநாயகம், யாழ்ப்பாணச் சரித்திரம் – ஆங்கிலேயர் காலம், (கொழும்பு: குமரன் புத்தக இல்லம், 2018), 133.
  2. Donald Ferguson (trans. and ed.), “History of Ceylon from the Earliest Times to 1600 A. D. as Related by Joao de Barrows and Diogo do Couto,” Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society XX, no. 60 (1908): 189.
  3. Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 318, 322.
  4. Miron Winslow, Memoirs of Mrs. Harriet L. Winslow (New York: American Tract Society, 1840), 192.
  5. கா. குகபாலன், தீவகம்-தொன்மையும் மேன்மையும் (கொக்குவில்: 2017), 221.
  6. விவசாய அபிவிருத்தித் திணைக்களப் பதிவுகளின்படி.

ஒலிவடிவில் கேட்க

1261 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்