தோழமையுடன் ஒரு குரல்

வ.ஐ.ச ஜெயபாலன்
எழுநா வெளியீடு 10
யூன் 2013

இந்த நூல் வெளிவருகின்ற இன்றைய காலகட்டம் ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் இனத்தேசிய அரசியலில் பொறுப்புமிகு காலகட்டமாகும். இலங்கை முஸ்லிம்கள் மீதான இன மத அடையாளங்கள் சார்ந்த நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. சிங்கள தேசத்திற்கும் தமிழ் தேசத்திற்குமான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதும் அவ்வெற்றியின் இனத்துவப் பெருமையும், அரசியல் களிப்பும் அடுத்த கட்டப் பாய்ச்சலாக முஸ்லிம்கள் மேல் திரும்பியுள்ளது.

இந்த இக்கட்டான நிலைமையில் தமிழ் முஸ்லிம் மக்கள் தமக்குள்ளும் தமக்கு வெளியேயும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறையவே உள்ளன. தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் எழுத்தாளர்களும் சிவில் சமூகமும் இந்த விடயங்களையிட்டு பரந்துபட்ட வகையில் ஆக்கபூர்வமான உரையாடல்களைத் தொடங்குவது அவசியமானதாகும். தமிழ் முஸ்லிம் மக்களை இனவிரோத உணர்ச்சி சார்ந்த அரசியலிலிருந்து வெளியே எடுத்து தேசிய இனங்களின் விடுதலைக்கும் சமத்துவ வாழ்விற்குமான களத்திற்கு இட்டுச்செல்ல வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் இந்நூல் முக்கியமான பங்களிப்பை வழங்கும் என உணர்கிறேன்
எம்.பௌசர்