யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும்

பரம்சோதி தங்கேஸ்
ஆய்வு நுால்
எழுநா வெளியீடு 3
ஜனவரி 2013

யாழ்ப்பாணத்தின் பிரதான சமூக ஒழுங்கமைப்பு முறையான சாதி அமைப்பில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வளர்ச்சிகள், மாற்றங்கள் பற்றிய மிக முக்கிய குறிப்புக்களும் கருத்தாடல்களும் பரம்சோதி தங்கேசுடைய கட்டுரைகளில் இடம்பெறுகின்றன. அவரது கட்டுரைகளில் காணப்படும் தரவுகள், கூற்றுக்கள் ஆகியன பல கருத்தாடல்களுக்கு இடம்கொடுக்கக் கூடியனவாக இருக்கும் அதே வேளையில் நேர்மைத் தன்மையினையும் அதனை வெளிப்படுத்தும் புலமை வேட்கையினையும் கொண்டிருக்கின்றன.
கார்த்திகேசு சிவத்தம்பி
மறைந்த தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர்
(யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)

பரம்சோதி தங்கேஸ் சாதியம் தொடர்பான கற்கைசார் செயற்பாடுகளில் தொடர்ச்சியாகத் தன்னை ஈடுபடுத்திவருபவர். தனது கலைமாமணிப் படிப்பிற்கான ஆய்வுக்கற்கையை யாழ்ப்பாணத்தில் சாதி மற்றும் இனத்துவ அடையாளங்களுக்கிடையிலான இடைவிளைவுகள் பற்றியதாக மேற்கொண்டவர். ஒரு சமூகவியலாளராக சாதியத்தின் கட்டுமானத்தை குறிப்பாக போர் மற்றும் போரின் விளைவுகளால் அதன் கட்டுமானத்தில் ஏற்பட்ட தாக்கங்களை கற்கைசார் ஒழுங்குடனும் தரவுகளுடனும் தனது எழுத்துக்களில் முன்வைத்துள்ளார்.

தொண்ணூறுகளில், குறிப்பாக அம்பேத்கார் நூற்றாண்டுக்குப்பிறகு தமிழகத்தில் தலித் அரசியல் எழுச்சி பெறுகின்றது. இந்த எழுச்சியானது தமிழகத்தின் சமூக, பண்பாட்டுச் சூழலில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தியதுடன், தலித் சமூகத்தின் அரசியல், வாழ்வியல், சமூகவியல் சார்ந்த பல்வேறு கற்கை நெறிகளும் ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெறுவதற்குக் காரணமாகவும் அமைந்தது.

Read More

இலங்கையில் அறுபது மற்றும் எழுபதுகளில் சாதி பற்றிய முக்கியமான ஆய்வுக்கற்கைகள் பல இடம்பெற்றன. குறிப்பாக மேற்கத்தேய மானிடவியலாளர்களால் சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர்களின் சாதிமுறைமை பற்றிய மிக முக்கியமான பல ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

Read More