Arts
20 நிமிட வாசிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகை மறுசீரமைப்பு அறிக்கையும் அதன் பரிந்துரைகளும் : சில அவதானிப்புகள் – பகுதி 1

November 2, 2023 | Ezhuna

அறிமுகம்

தற்போது இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தொடர்பாகப் பரந்த கலந்துரையாடல் (ஆதரவாகவும் எதிராகவும்) பாராளுமன்றத்திலும், அரசியல் பரப்பிலும், சிவில் சமூக மட்டத்திலும் இடம்பெற்று வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருப்பதனைப்  பார்க்க முடிகிறது. அது IMF இன் பொதுவான நடைமுறையும் கூட. அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் ஆளுகை செயன்முறையில் உள்ள குறைபாடுகளை ஆழமாக மதிப்பீடு செய்து, 139 பக்கங்களைக் கொண்ட ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது (Governance Diagnostic Report: file:///C:/Users/u;R%20LAP%201/Downloads/1LKAEA2023002.pdf). அந்த அறிக்கையில் இலங்கையின் ஆளுகைக் கட்டமைப்பில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பிரதான 16 மறுசீரமைப்புகள் மற்றும் மாற்றங்கள் குறித்து விரிவான பரிந்துரைகளை  முன்வைத்துள்ளது. இந்தப்பரிந்துரைகள் ஒவ்வொன்றும் இலங்கையில் ஆளுகை செயன்முறையில் உள்ள குறைபாடுகள், அதிகார துஷ்பிரயோகம், நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள ஊழல் மோசடி, ஊழல் கலாச்சாரம், வெளிப்படைத்தன்மை இன்மை, பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஒட்டுமொத்த அறிக்கையிலும் தொடர்ச்சியாக அழுத்தி வலியுறுத்தப்படும் விடயம் யாதெனில் இலங்கையில் ஊழலற்ற ஒரு ஆளுகை செயன்முறையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதாகும் (corruption – free governance process). ஆளுகை செயன்முறையில் உள்ள குறைபாடுகளை மிக விரைவில் களைய வேண்டும் என்பதை அவர்கள் வலியுறுத்துவதுடன், அது பொருளாதார அபிவிருத்தி, வெளிநாட்டு முதலீடு, ஒழுக்கமுடைய பொது நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறும் ஆளுகைக்கு அவசியம் எனப்படுகின்றது. அவர்கள் முன்வைத்துள்ள 16 பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேறுப்பட்ட கால அவகாசத்தையும் வழங்கியிருப்பது இதில் இன்னுமொரு சிறப்பம்சமாக காணப்படுகிறது.

ஆகவே, இலங்கையின் ஆட்சி செயன்முறையில் காணப்படும் தோல்வியைச் சரி செய்ய, அதில் இருந்து இலங்கை நாட்டை மீட்டெடுக்க வேண்டுமாயின் இந்த சவால்மிக்க பரிசோதனையில் இலங்கை ஈடுபட வேண்டும் என்பது இங்கு வெளிப்படுகின்றது. இந்தக் கசப்பான மாத்திரையினை இலங்கை விரும்பியோ விரும்பாமலோ உட்கொள்ள வேண்டும் என்பது இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும். ஆகவே, இந்த நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறுமாக இருந்தால் மூன்றாவது தவணைக் கடன் உதவியினைச் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக் கொள்வது இயலாத காரியமாக மாறக்கூடிய வாய்ப்பு ஏற்படலாம். இரண்டாவது தவணைக் கடன் ஜனவரி மாதம் அளவில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கலாம். அதில் பெரியளவிலான சவால்கள் இருப்பதாகத் தென்படவில்லை. இந்த நாட்டில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டப் பின்னர் ஆளுகை செயன்முறையில் காணப்படும் பிரதான குறைபாடுகளில் ஒன்றுதான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினுடைய கைகளில் சகல அதிகாரங்களையும் குவித்து பாராளுமன்றத்தையும், நீதிமன்றத்தையும் கேலிக்கூத்தாக மாற்றியமையாகும். இது இலங்கையில் நிறைவேற்று சர்வாதிகார ஆட்சியினை ஏற்படுத்தியது எனலாம். இதனை ஆளுகை செயன்முறையின் ஒரு பிரதான பிரச்சனையாக காணலாம். நாம் இன்று அனுபவிக்கும் பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் அனைத்திற்கும் ஆளுகை செயன்முறையில் காணப்படுகின்ற குறைபாடுகள் அல்லது ஆளுகை தோல்வி (governance failure) அல்லது தீங்கான ஆளுகை (misgovernance) பிரதான காரணியாக உள்ளது. அரகலயப் போராட்டக்காரர்கள் தொடச்சியாக வலியுறுத்தியது ஆளுகை மறுசீரமைப்பாகும் – அதனை அவர்கள் முறைமை மாற்றம் (system change) என்றப் பெயரில் கோரினார்கள். அந்த வகையில் இக்கட்டுரையானது IMF இன் ஆளுமை மறுசீரமைப்பு பரிந்துரைகள் தொடர்பான ஒரு சாரம்சத்தினை வழங்குவதனை நோக்காகக் கொண்டு அமைந்துள்ளது.

இங்கு அவதானிக்க வேண்டிய பிறிதொரு விடயம் யாதெனில், IMF இலங்கைக்கு இத்தகைய பரிந்துரைகளை 16 தடவைகள் வழங்கியுள்ளது. அவற்றினால் ஆளுகை செயன்முறையில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன என்ற வினாவினையும் இங்கு முன்வைப்பது பொருத்தமாகும். இலங்கை அரசாங்கம் ஒவ்வொறு முறையும் கடன் பெறும்போது இது போன்ற எண்ணற்றப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவை அமுல்படுத்தப்படவில்லை – அவை கிடப்பில் போடப்பட்டதுடன்,  ஊழல் மோசடிகள் நிறைந்த ஆளுகை முறையே தொடர்ந்தது. இப்போக்கினை பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் அவதானிக்க முடியும். ஆகவேதான், இடதுசாரி அமைப்புகளும் சில அரசியல் கட்சிகளும் IMF இன் கொள்கைகளே நாட்டின் தற்போதைய வங்குரோத்து நிலைக்கும் பொது மக்கள் அனுபவிக்கும் பொருளாதார பிரச்சினைகளுக்கும் காரணம் என விமர்சிக்கின்றனர். IMF இன் நவ தாராளக் கொள்கைகள் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமென விமர்சிக்கப்படுகின்றது. இது பகுதியவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் என்றாலும், கொள்கை வகுப்பாளர்கள் IMF இன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமை, தவறான கொள்கைகள் அல்லது பொருத்தமற்ற கொள்கைகளை தொடர்ச்சியாக உருவாக்கியமை, அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தமை, அரசியலில் இன, மதத்தின் தலையீட்டினை வெளிப்படையாகவே அனுமதித்தமை, ஊழல் போன்ற வேறும் பல காரணிகளும் நாட்டின் தற்போதைய வங்குரோத்து நிலைக்கு மற்றும் ஆளுகை தோல்விக்கு காரணம் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது. ஆகவே, இப்பொழுது IMF வழங்கியிருக்கும் பரிந்துரைகளை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டிய தேவையுண்டு. எதிர்காலத்தில் IMF இன் கடன் உதவிகளை நாடிச் செல்லாதவகையில் பொருளாதாரக் கொள்கைகளை மறுசீரமைக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பதற்கு, ஏற்றுமதி பொருளாதாரத்தினை, தன்னிறைவுடன் கூடிய பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்ப அவசியமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இவை நீண்டகாலத் திட்டங்களாக நிலைபேறுத்தன்மையின் அடிப்படையில் அமைய வேண்டும். தொடர்ச்சியான கடன் பொறிக்குள் இருந்து இலங்கையை மீட்டெடுக்க, நவப் பொருளாதார பிடியில் இருந்து மீட்க தீவிர மறுசீரமைப்புகளை உள்நாட்டு சூழலை அடிப்படையாகக் கொண்டு பாரிய பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் கலந்துரையாடல் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும், இம்முறை IMF வழங்கியுள்ள இப்பதினாறு பிரதானப் பரிந்துரைகள் இலங்கையில் ஆளுகைக் கட்டமைப்பில் நீண்டகாலமாக நிலவும் குறைப்பாடுகளை களைவதற்கான ஒரு நிழற்பட அச்சாகப் (blue print) பார்க்க முடியும். இவற்றை இலங்கை சரியான முறையில் பின்பற்றுகின்ற பட்சத்தில் ஆட்சிமுறை செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறலை மேம்படுத்த முடியும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நம்பிக்கையாகக் காணப்படுகின்து.  அதேவேளை, இலங்கையில் நல்லாட்சியை விரும்பும் அனைத்து தரப்பினரும் இதனை விரும்புவர் என்றும் எதிர்ப்பார்க்கலாம். ஊழலற்ற இலங்கையினை (corruption free Sri Lanka) கட்டியெழுப்ப எத்தனிக்கும் எவரும் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை முற்றாக எதிர்க்க மாட்டார்கள். ஏனென்றால் இவை நாட்டிற்கு மிக அவசியமானவை. இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இன்றுவரையில் ஆளுகை செயன்முறையில் நாம் நான்கு பிரதான குறைபாடுகளை அவதானிக்கலாம். அவை முறையே,

  1. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை
  2. ஊழல் மோசடி
  3. இனவாதம் அல்லது ஆட்சிமுறை செயற்பாட்டில் இனத்துவ மேலாதிக்கம்
  4. அரசியல் செயற்பாடுகளில் பௌத்த மதத்தின் மேலோங்கிய செல்வாக்கு

இந்நான்கு காரணிகளும் இலங்கையின் தற்போதைய வங்குரோத்து நிலைமைக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது என்பதனை எவரும் மறுதலிக்க முடியாது. ஆகவே இன்று பெரியளவிலான மறுசீரமைப்புகள் ஆளுகை மற்றும் இலங்கையின் அரசியல் முறைமையில் அவசியமாக உள்ளது. இப்பின்புலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் 16 பரிந்துரைகளையும் அவதானிப்பது அவசியமாகும். இவ்வறிக்கையும் அதன் பரிந்துரைகளும் முழுக்க ஆளுகை செயன்முறையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக மாத்திரமே அவதானம் செலுத்துகின்றது என்பதனை குறிப்பிட வேண்டும். பிரதான 16 பரிந்துரைகளுக்கு அப்பால் எண்ணற்ற பரிந்துரைகள் ஒவ்வொரு துறை சார்ந்து முன்வைக்கப்பட்டுள்ளது. அவற்றினை இவ்வறிக்கையினை வாசிக்கும் பொழுது அவதானிக்க முடிகின்றது.

இலஞ்ச மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை

இலங்கையின் இலஞ்ச மற்றும் ஊழல் எதிரப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஓர் ஆலோசனைக் குழுவை 2023 நவம்பர் மாதத்திற்குள் நியமிக்க வேண்டும் என்பதே முதலாவது பரிந்துரையாகும். இதனை நவம்பர் மாதத்தில் நிறைவுசெய்ய வேண்டும். இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவிற்கு கடந்த காலங்களில் பதவியில் இருந்த ஜனாதிபதிகள் தமக்கு வேண்டப்பட்டவர்களை,  விசுவாசமானவர்களை நியமித்த போக்கை அவதானித்துள்ளளோம்.  நிறைவேற்று அதிகாரத்தினைப் பயன்படுத்தி தமக்கு அரசியல் விசுவாசத்தினை காட்டும் நபர்களைக் மாறி மாறி பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள் நியமித்தார்கள். இச்செயற்பாடும் இந்நாட்டில் ஆளுகை செயன்முறையின் பிரதான வீழ்ச்சிக்கு  காரணமாக அமைந்தது. ஆகவேதான் தகுதியான ஆலோசனைக் குழுவொன்றை நியமித்து, அவர்கள் வழங்குகின்ற ஆலோசனையின் பெயரில் இலஞ்ச மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவிற்கான 5 உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்று இவ்வறிக்கை குறிப்பிடுகின்றது. இந்தக் காரியத்தினை அரசியலமைப்பு பேரவை முன்னெடுக்க வேண்டும்.

corruption Index 2023

அதனூடாக ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் நியமன விடயத்தில் அரசியல் தலையீடுகளை தவிர்ப்பது, நேர்மையாக, வினைத்திறன்மிக்க வகையில் இந்த ஆணைக்குழு செயற்படுவதை உறுதிப்படுத்துவது, ஊழலுக்கு எதிராக செயற்படுவதற்கு அவகாசத்தை ஏற்படுத்துவது என்பன  எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் இலஞ்ச ஊழலுக்கு எதிராகச் செயற்படுகின்ற பிரதான நிறுவனமாக ஒவ்வொரு நாட்டிலும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு காணப்படுகிறது. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் இவ் ஆணைக்குழு நிறுவன ரீதியான ஒரு கட்டமைப்பினைக் கொண்டிருந்தாலும் இதன் அதிகாரங்கள், கடமைகள், வளங்கள் தொடர்பாக பாரிய பிரச்சினைகளும், மட்டுப்பாடுகளும் காணப்படுகிறது. தொடர்ச்சியான அரசியல் அழுத்தம், அரசியல் தலையீடு, 20 ஆவது சீர்திருத்தங்களின் கீழ் இவ் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டமை மற்றும் அதன் நிலை வலுவிழக்கச் செய்யப்பட்டமை போன்றன இலஞ்ச-ஊழல் ஆட்சிமுறை செயற்பாடுகளில் பரந்தளவில் இடம்பெறுவதற்கு அல்லது ஒரு கலாசாரமாக மாறுவதற்கு காரணமாக அமைந்து விட்டது. ஆகவே இந்த நிலைமையை மறுசீரமைப்பதற்கு இந்த ஆணைக்குழுவின் சுயாதீன தன்மையைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாணைக்குழுவின் உறுப்பினர்களை நியமிக்கும் போது ஒரு சுயாதீன ஆலோசனைக் குழுவை நியமிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. டிரான்ஸ் பேரன்சி இன்டர்நெசனல் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு ஆசியாவில் உள்ள ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுக்களின் செயற்றிறன் தொடர்பாக மதிப்பீடு ஒன்றினை செய்து அறிக்கை வெளியிட்டது (Transparency International, Anti-corruption agencies in Asia: an evaluation of their performance and challenges). இதன்படி இலங்கையின் இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த பணியாளர் தொகை 802 ஆகும். அதில் 353 பேர் மாத்திரமே தற்போது சேவையில் இருப்பதாகவும் சுமார் 449 பதவி வெற்றிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இப்பதவி வெற்றிடங்கள் இக்கட்டுரை எழுதும் தருணம் வரையில் முழுமையாக நிரப்பப்படவில்லை இன்னும் 300 பதவி வெற்றிடங்கள் இருப்பதனை கட்டுரையாசிரிருக்குக் கிடைத்த தகவல்கள் உறுதிசெய்கின்றன.  இது அரசாங்கம் இலஞ்ச ஊழலுக்கு எதிராக போராடுவதில் காட்டுகின்ற அர்ப்பணிப்பின் அளவினை வெளிப்படுத்துகின்றது.

 அரசியல்வாதிகள் சொத்துக்களைப் பிரகடனப்படுத்தல்

இரண்டாவது பரிந்துரை 2024 ஆண்டு ஜீலை மாதமாகும் போது சகல அரசியல்வாதிகளும் தமது சொத்துக்களை பிரகடனப்படுத்தியிருக்க வேண்டும் என்பதாகும்.   பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் தமது சொத்துக்களைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்பதே இங்கு குறிப்பிடப்படுகின்றது. இது வெளிப்படைத்தன்மைக்கும், பொறுப்புக்கூறலுக்கும் பெரிதும் அவசியமாகும். இதுவரைக்கும் 12 உறுப்பினர்கள் மாத்திரமே தமது சொத்துகளைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளனர். அதுமட்டுமல்லாது சர்வதேச நாணய நிதியம் வெளிப்படுத்தும் இன்னுமொரு விடயம் அரசியல்வாதிகள் சொத்துக்களைப் பிரகடனப்படுத்திய பின்னர் அவற்றைப் பொதுமக்கள் அணுகக்கூடிய ஒரு இணையத்தளத்தில்  காட்சிப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அவற்றைப் பார்ப்பதற்கான வசதியை, உரிமையை வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றது. இது தனிப்பட்ட நபர்களை அடிப்படையாகக் கொண்ட முரண்பாடுகளை தவிர்ப்பதற்கு செய்வதற்கு அவசியமாகும்.  

ஆட்சி செயன்முறையில் நேர்மைத் தன்மையும், வெளிப்படைத்தன்மையும், பொறுப்பு கூறலையும் கொண்டு வருவதற்குப் சொத்துகளைப் பிரகடனப்படுத்துவது அவசியமாக உள்ளது. சொத்துகளைப் பிரகடனப்படுத்துவதை இலங்கையின் பல அரசியல்வாதிகள் தொடர்ந்தும் தவிர்த்து கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எவ்வாறு சொத்துக்களை சேர்த்தார்கள், எங்கிருந்து அவ்வளவு சொத்துக்களை சேர்த்தார்கள், எங்கு அதனை முதலீடு செய்கிறார்கள், எந்தந்த நாடுகளில் தமது சொத்துக்களை பதுக்கி வைத்திருக்கிறார்கள் போன்ற விடயங்களைப் பொதுமக்கள் அறிய முடியாதுள்ளனர். இது இன்னுமொரு பக்கத்தில் தேர்தல் காலத்தில் மோசமான ஊழல் மோசடியையும், பணத்தையும் பொருளையும் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் கலாசாரத்தையும் இலங்கையில் உருவாக்கி இருப்பதை நாம் பார்க்க முடியும். இந்த மோசமான நிலையை முறியடிக்க வேண்டுமாக இருந்தால் அரசியல்வாதிகள் சொத்துக்களை பகிரங்கப்படுத்துவது அவசியமாகும். அது மக்கள்  பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையும்கூட.

கறுப்புப்பணத்தின் புழக்கத்தினைத் தடைசெய்தல்

மூன்றாவது பரிந்துரை சட்டத்துக்குப் புறம்பான பணத்தினைத் (கறுப்புப்பணம்) ‘தூய்தாக்கல்’ செய்வதனைத் தடுப்பதற்கு குற்றவியல் சட்டத்தை இறுக்கமாக்க வேண்டும். அதன் ஊடாக கறுப்புப் பணத்தினைத் தூய்தாக்குவதனைத் தடுக்க வேண்டும் என்கிறது (anti –money laundering). ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான சமவாயம் (UN Convention Against Corruption) மற்றும் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் தராதரங்களுக்கு ஏற்ப குற்றவியல் சட்டங்களை இறுக்கமாக்க (திருத்த) வேண்டும் என குறிப்பிடுகின்றது. சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு (Financial Action Task Force –FATF) என்பது சட்டவிரோத பணப்புழக்கம் (கடத்தல்) மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவதனை தடுப்பதற்கான அரசுகளுக்கிடையிலான சர்வதேச கண்காணிப்பு அமைப்பாகும். அதன் தலைமையகம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் அமைந்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றத்தினை மற்றும் தூய்தாக்கப்படுவதனைத் தடுப்பதற்கு இவ்வமைப்பு பல தராதரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கையில் நிதி தூய்தாக்குதல் மிகவும் பிரச்சனைக்குரிய விடயமாக காணப்படுகிறது. அரசியல்வாதிகள் கருப்புப் பணத்தினை இலங்கையில் முதலிடுமாறு கடந்தகாலங்களில் பகிரங்கமாக அறிவித்தார்கள். இலங்கைக்கு நேர்மையான முதலீட்டாளர்கள் வருகைத்தராமைக்கு இது பிரதான காரணம் என்பதனை அரசியல்வாதிகள் இன்னும் உணரவில்லை போல் தெரிகிறது. கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வர முடியும் என்ற ஒரு சூழலைப் பசில் ராஜபக்ச தரப்பினர் இந்த நாட்டிலே உருவாக்கினார்கள். இது சர்வதேச சட்ட பொறிமுறைகளுக்கு முரணான ஒரு விடயம். ஆகவேதான் சர்வதேச நாணய நிதியம் 2024 ஏப்ரல் மாதமாகும் போது ஓர் உறுதியான சட்டத் திருத்தத்தினைக் கொண்டு வந்து நிதி தூய்தாக்குதலை ஒரு குற்றமாக நிறைவேற்ற வேண்டும், அதில் ஈடுபடுவோரை தண்டிக்க வேண்டும், அந்த செயற்பாட்டை நிறுத்த வேண்டும், சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப அந்த காரியத்தை இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகின்றது. 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, பணம் தூய்தாக்கலுக்கு எதிரான சட்டமானது பல குறைப்பாடுகளைக் கொண்டுள்ளது. அதனால் சட்டவிரோத பணப்புழக்கத்தினை நிறுத்த முடியாமல் உள்ளதாக இவ்வறிக்கை குறிப்பிடுகின்றது.

corruption Index 2022

இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்தப் பின்னர் நிதி தூய்தாக்குதல் பெரியளவில் இந்தியாவில் நிறுத்தப்பட்டது. இதற்குக் காரணம் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டமையாகும். இன்று பெரும் செல்வந்தர்களும், அதிகாரம் படைத்தவர்களும் சட்டவிரோத பணப்புழக்கத்தில் ஈடுபடுவதனை காண முடியும். இச்செயல் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதைரியப்படுத்தும்; அவநம்பிக்கையினை ஏற்படுத்தும். இத்தகைய செயற்பாடுகள் இலங்கையில் வியாபாரம் செய்வதற்கான உகந்த சூழ்நிலையினை ஒருபோதும் உருவாக்க போவதில்லை என்பதனை புரிந்துக்கொள்ள வேண்டும். வியாபாரம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு மிகவும் கடினமான ஒழுங்கு விதிகள், சட்டங்கள் மற்றும் இலஞ்ச கலாச்சராத்தினைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னணியில் உள்ளது என்பதனையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். உலக வங்கியின் 2023 ஆம் ஆண்டுக்கான எளிதாக வணிகம் செய்யக்கூடிய (ease of doing business index) நாடுகளின் தரப்படுத்தலில் 190 நாடுகளில் இலங்கை 99 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலைமையில் இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவருவது வெறும் பகல் கனவாகவே அமையும்.

தேசியக் கணக்காய்வு சட்டத்தினைத் திருத்துதல்

நான்காவது பரிந்துரை தேசிய கணக்காய்வு சட்டத்தைத் திருத்த வேண்டும் என்பதாகும். தேசிய கணக்காய்வு சட்டத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. தேசிய கணக்காய்வு சட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் அரச நிறுவனங்களில் ஊழல், மோசடிகள் பல்கி பெருகுவதற்கு காரணமாக இருக்கின்ற அதேவேளை, அரச நிறுவனங்களில் பொது நிதியை பயன்படுத்துவதில் நேர்மைத்தன்மை, பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை இல்லாமல் போவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. சில அரச நிறுவனங்களில் கடந்தகாலங்களில் கோடிக்கணக்கான பணம் செலவிடப்பட்டமைக்கு எந்த சான்றுகளும் இல்லை. ஒப்பந்தங்களை வழங்கும் போது, பெரும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்கின்றப் போது ஸ்தாபிக்கப்பட்ட நிதி ஒழுங்கு முறைகளுக்கு ஏற்ப பொது நிதி செலவிடப்படுவதில்லை. இது அரசியல் மற்றும் நிர்வாக ஊழலுக்கு பெரியளவில் வழிவகுக்கின்றது. ஆகவேதான் தேசிய கணக்காய்வு சட்டம் திருத்தப்பட்டு, அதில் புதிய ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டு கணக்காய்வு இறுக்கமாகப் பின்பற்ற வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது. கணக்காய்வு இறுக்கமாக இடம்பெறுகின்ற பொழுது பொறுப்புகூறலும், வெளிப்படைத்தன்மையும் ஏற்படும். மறுபக்கமாக பிரஜைகளுக்கு அரசாங்க நிறுவனங்கள் மீது நம்பிக்கை ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கின்றது. அத்துடன், பொது நிதியினை பயன்படுத்தல் தொடர்பாக சரியான மேற்பார்வையினை செய்யத் தவறும் அதிகாரிகள் மற்றும் பிரதம கணக்காளர்கள் (அமைச்சின் செயலாளர் உட்பட) ஆகியோரிடம் கடமையை செய்யத் தவறியமைக்காக அதிக பணத்தினை வசூலிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்படுகின்றது.

ஐந்தாவது பரிந்துரை வியாபார செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல் ஆகும். குறிப்பாக, கம்பனி சட்டத்தின் படி வணிக செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு தமக்கு கிடைக்கும் பயன்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு அவசியமான ஒழுங்குவிதிகளை இறுதி வடிவப்படுத்தி அதனை அமுல்படுத்த வேண்டும். அத்துடன் உரித்துடைமையின் பயன்களை பொதுவில் காட்சிப்படுத்த 2024 ஏப்ரல் மாதம் ஆகும் போது ஒரு பதிவேட்டினை ஸ்தாபித்தல் வேண்டும்.

பொது கொள்முதல் தொடர்பாகப் புதிய சட்டம் ஒன்றினை இயற்றுதல்

இலங்கைக்கு மிக மிக முக்கியமானது ஆறாவது பரிந்துரையாகும். இது நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் விடயமும் கூட. இலங்கையில் பொது நிறுவனங்களில் ஊழல் மோசடிகள் பாரிய அளவில் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைவது கொள்முதல் தொடர்பான சட்டமொன்று இல்லாமல் இருப்பதாகும் (Procurement law). இலங்கையில் அரச நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றபோது சில வழிகாட்டல்கள் மற்றும் கொள்கைகள் இருக்கின்றனவே தவிர சட்டமொன்று இன்னும் பாராளுமன்றத்தால் உருவாக்கப்படவில்லை. இந்த சட்டம் உருவாக்கப்படாமைக்கு காரணமும் அது ஊழல் மோசடிகளை தடுக்கும் என்பதாலாகும். ஆகவே பாராளுமன்றத்திலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் இத்தகைய சட்டத்தை நிறைவேற்ற தொடர்ந்தும் விருப்பம் காட்டவில்லை. உலகில் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் தொடர்பான ஆராய்ச்சிகளில் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விடயம் யாதெனில் அரச நிறுவனங்களில் கொள்முதல் அல்லது பெறுகை (procurement) தொடர்பான விடயங்களில் காணப்படும் தவறான செயற்பாடுகளே ஊழல் மோசடிக்கான கதவை திறந்து விடுகின்றது என்பதாகும். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக கொள்முதல் ஆணைக்குழுவொன்று கொண்டுவரப்பட்டப்போதும், அது தொடர்பான சட்டம் ஒன்றினைக் கொண்டு வந்து கொள்முதல் செயன்முறையில் நீண்டகாலமாக காணப்படும் ஊழலை தடுப்பதற்கு எந்த ஒரு அரசாங்கமும் முயற்சிக்கவில்லை என்பது ஊழலை ஒழிப்பதில் இலங்கையின் அரசியல் தலைமைகள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பின் அளவைக் காட்டுகின்றது.

ஆகவேதான் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆகின்ற பொழுது கொள்முதல் தொடர்பான சட்டத்தினை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. ஊழலைக் கட்டுப்படுத்த இச்சட்டம் பெரிதும் அவசியமாகும். பொதுக் கொள்முதல் தொடர்பாக பொதுமக்களுக்குத் தகவல்களை வழங்க வேண்டும். பாரிய அளவிலான கொள்முதல் செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது. சீனிக் கொள்முதலாக இருக்கலாம் அல்லது அண்மைக்காலத்தில் சுகாதார அமைச்சு கொள்வனவு செய்த அவசர உபகரணங்கள் மற்றும் தரம் குறைந்த மருந்துப் பொருட்களாக இருக்கலாம். இவையனைத்தும் பாரிய ஊழலுடன் தொடர்புடையவை என்பதனை ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தியதனை இலகுவில் மறந்துவிட முடியாது.

விலைமனு கோரல் செயன்முறையில் போட்டித்தன்மையினை ஊக்குவித்தல்

அரசாங்கம் விலைமனு ஊடாக கொள்முதல் ஒப்பந்தங்களைக்  வழங்கும்போது போட்டித்தன்மையினை ஊக்குவிக்க வேண்டும் என்பது ஏழாவது பரிந்துரையாகும்.  போட்டித்தன்மையின் அடிப்படையில் இவை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், அது தொடர்பான முன்னேற்ற அறிக்கையினைப் பொதுமக்கள் பார்க்கக்கூடிய ஒரு இணையத்தளத்தில்  பிரசுரிக்க வேண்டும் என்கிறது. இதனை 2024 டிசம்பர் மாதம் ஆகும் போது மேற்கொள்ள வேண்டும். காரணம், 2022 ஆம் ஆண்டு சுமார் 10 முக்கியமான அரச நிறுவனங்களில் போட்டித்தன்மை அடிப்படையில் விலை மணு கோரல் மற்றும் ஒப்பந்தங்கள் வழங்கல் இடம்பெறவில்லை. இந்நிறுவனங்கள் அரசியல் மற்றும் தனிப்பட்ட உறவின் அடிப்படையில் ஒப்பந்தங்களை வழங்கியுள்ளன. ஆகவே, பாரிய திட்டங்களுக்காக ஒப்பந்தங்களை கோருகின்ற போது அது போட்டித்தன்மை மிகுந்ததாக இருக்க வேண்டும். போட்டித்தன்மை இல்லாவிட்டால் அங்கு ஊழல் மோசடிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பெருகும். போட்டித்தன்மை திட்டங்களின் தரம், பணத்திற்கான பெறுமதி (value for money), வினைத்திறன் மற்றும் சிறந்த கண்காணிப்பு என்பவற்றுக்கு வழிசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எட்டாவது பரிந்துரை ஒரு பில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட பொது கொள்முதல் தொடர்பான சகல ஒப்பந்தங்களையும் பொதுமக்களுடைய பாவனைக்காக காட்சிப்படுத்த வேண்டும். அது தொடர்பான தகவல்களை (ஒப்பந்தத்தினை பெற்றுக்கொண்டவர்களின் தகவல்கள் உட்பட) ஒரு பொது இணையத்தளத்தில் இற்றைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது. ஏனென்றால் மகிந்த ராஜபக்சக் காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற மாபெரும் அபிவிருத்தித் திட்டங்களையும், அதில் இடம்பெற்ற ஊழல் மோசடியையும், அந்த அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கை மக்களுக்கு ஏற்படுத்திய கடன் சுமையினையும் நாங்கள் இன்று அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம். அக்காலத்தில் இடம்பெற்ற மெகா அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு எந்தவகையிலும் பங்களிப்பு செய்யவில்லை. மாறாக கடன் சுமையினை மாத்திரமே ஏற்படுத்தியது. அதற்கு மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டையில் கட்டப்பட்ட மாநாட்டு மண்டபம், சூரியவெவ என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விளையாட்டு மைதானம் மற்றும் தாமரைத்தடாகக் கட்டிடம் என்பவற்றினைச் சிறந்த உதாரணங்களாக குறிப்பிடலாம். ஆனால், இந்தத் திட்டங்களை முன்னெடுத்த அரசியல்வாதிகளுக்கு அவை செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள உதவியாக இருந்தன என்பதில் ஐயமில்லை. 

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

6604 பார்வைகள்

About the Author

இராமசாமி ரமேஷ்

கலாநிதி இரா. ரமேஷ் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆவார். ஆட்சிமுறை, ஊழல், அரச சேவை வழங்கல், சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பாக தனது ஆய்வுகளைச் செய்து வருகிறார். மலையகம் குறித்தும் எழுதி வருகின்றார்.
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்
  • April 2024 (2)
  • March 2024 (1)
  • November 2023 (5)
  • October 2023 (4)
  • September 2023 (3)
  • July 2023 (3)
  • June 2023 (1)
  • May 2023 (4)
  • April 2023 (2)
  • March 2023 (2)
  • February 2023 (1)
  • January 2023 (1)