Arts
9 நிமிட வாசிப்பு

பெரிய புளியங்குளம் தமிழ்க் கல்வெட்டும் முள்ளியான் குடிமனை அழிபாடுகளும்

October 4, 2023 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

வன்னியில் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு

வன்னியில் பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் தலமையில் தொல்லியல் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொல்லியற் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர்கள் திரு. கபிலன், திரு. மணிமாறன் ஆகியோர் இணைந்து மேற்கொண்டு வரும் தொல்லியல் ஆய்வின் போது வன்னியில் மரையடித்த குளத்திற்கு அருகே பெரியபுளியங்குளம் என்ற இடத்தில் கி.பி 12-13 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டொன்றை அடையாளம் கண்டுள்ளனர். இக்கல்வெட்டு அப்பிரதேச மக்களால்  அங்குள்ள வயல்வெளியில் இருந்து எடுத்துவரப்பட்டு அங்குள்ள வைரவர் ஆலயத்தில் தெய்வச்சிலைகளை வைப்பதற்கான பீடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அக்கல்லில் உள்ள எழுத்துக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த வவுனியா பிரதேசசபை ஆய்வு உத்தியோகத்தர் திரு. ஜெயதீபன் இது பற்றிய செய்தியை திரு. மணிமாறனுக்கு தெரியப்படுத்தியதன் பேரில் இக்கல்வெட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் பிரிவினரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

பல வரிகளில் எழுதப்பட்டிருந்த கல்வெட்டின் உடைந்த கீழ்ப்பாகமே தற்போது எமக்கு கிடைத்துள்ளது. அதில் ஐந்து வரிகள் காணப்படுகின்றன. அதன் முதலாவது வரியில் உள்ள எழுத்துக்கள் பல பெருமளவு சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது. அதனால் அவ்வரியில் சொல்லப்பட்ட பெயர்களை அல்லது செய்திகளை அறியமுடியவில்லை. ஏனைய நான்கு வரிகளையும் தெளிவாக வாசிக்க முடிகிறது. அவற்றைத் தமிழக கல்வெட்டு அறிஞர், பேராசிரியர் சுப்பராயலு பின்வருமாறு வாசிக்கிறார்.

puliyankulam
  1. …………………………….
  2. ஆஞ்ஞை மூந்று த
  3. (ன்ம) ஆஞ்ஞை வல்ல-
  4. வரையன் சத்தியம் இ-
  5. து அழிப்பார் நர(கம்) புகுவார்.

ஒரு ஆலயத்திற்கு கொடுக்கப்பட்ட தானத்தை அல்லது அரசால் அல்லது ஒரு நிறுவனத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறி நடப்போர் அழிந்து நரகத்திற்கு போவது நிச்சயம்  என்ற செய்தியைச் சொல்வதே இக்கல்வெட்டை எழுதியதன் நோக்கம். இதில் வரும் ‘மூந்று த (ன்ம)’ என்ற சொல்  12-13 ஆம் நூற்றாண்டில் வன்னியில் செயற்பட்ட தமிழ் வணிக கணங்களை அல்லது வேளக்காரர், இடங்கை, வலங்கை ஆகிய தமிழ் படை அமைப்புக்களை குறிக்கலாம். வல்லவராயன் என்ற பெயர் வன்னியில் ஆட்சி புரிந்த அரசனை அல்லது விநாயகக் (கணபதி) கடவுளைக் குறித்திருக்கலாம். தமிழகத்தில் 11-12 ஆம் நூற்றாண்டு காலத்திற்குரிய கல்வெட்டுக்களில் வரும் வல்லவராயன் என்ற பெயர் விநாயகரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. ஆயினும் கல்வெட்டின் எஞ்சிய பாகம் கிடைக்கப்பெறும் பட்சத்தில் ஊகமாகச் சொல்லப்பட்ட விளக்கம் உறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து தற்போது கிடைத்த கல்வெட்டு, அங்குள்ள  காட்டுப்பகுதியில் ஒரு கட்டிட அழிபாடுகள் இடையே இருந்து எடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. இதனால் இக்கல்வெட்டின் மிகுதிப்பாகம் அக்கட்டிட அழிபாடுகள் இடையே இருக்கும் என எதிர்பார்க்கலாம். தொடர்ந்தும் இங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கல்வெட்டின் எஞ்சிய பாகமும், வேறு கல்வெட்டுக்களும் அங்கு கிடைக்க வாய்ப்புண்டு. எவ்வாறாயினும் வன்னிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது இடைக்காலத் தமிழ்க் கல்வெட்டென்ற வகையில் வன்னி பற்றிய ஆய்வில் இக்கல்வெட்டுக்கு தனி முக்கியத்துவம் உண்டு என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

முள்ளியான் காட்டுப் பகுதியில் யாழ்ப்பாண இராசதானிக்காலக் குடிமனையின் அழிபாடுகள் 

mulliyan ruined

கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட இயக்கச்சிக் கோட்டையில் இருந்து தென்கிழக்கே ஏழு கிலோமீற்றர் தொலைவில் உள்ள நித்தியவெட்டை முள்ளியான் என அழைக்கப்படும் காட்டுப்பகுதியில் அழிவடைந்த புராதன வீடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் களவாய்வில் ஈடுபட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொல்லியற் சிறப்புக்கலை மாணவர்களுக்கு அவ்வூர் மக்கள் அங்குள்ள காட்டுப்பகுதியில் அழிவடைந்த அரண்மனை ஒன்று இருப்பதாகக் கூறப்பட்ட தகவலை அடுத்து அவ்விடத்திற்குச் சென்று தொல்லியல் ஆய்வினை மேற்கொண்டோம். 

mulliyan ruined 2

இக்கட்டிட அழிபாடுகளை அவ்வூர் மக்களில் பலர் அரண்மனை எனவும்,வேறு சிலர் இயக்கச்சி கோட்டையுடன் தொடர்புடைய சிறைக்கூடம் எனவும் அழைக்கின்றனர். ஆனால் கட்டிடத்தின் அமைப்பையும், அதன் காலத்தையும் நோக்கும் போது, அது முன்பொரு காலத்தில் அங்கு வாழ்ந்த மக்களது வீடாக இருக்கலாம் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. இவ்வீடு காட்டின் நடுவேயுள்ள பெரியகுளத்திற்கு அருகேயுள்ள உயர்ந்த மேட்டுநிலத்தில் செங்கட்டிகள், களிமண், சுதை என்பன கொண்டு கட்டப்பட்டுள்ளது. இரண்டு அறைகளைக் கொண்ட இக்கட்டடம் ஏறத்தாழ ஒன்பது மீற்றர் நீளமும், நான்கரை மீற்றர் அகலமும் கொண்டது. இவ்வீட்டின் பின்பக்க அறைச் சுவரில் சிறிய யன்னல் ஒன்று இருந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது. கட்டிடத்தின் பெரும்பாலானசுவர்கள் அழிவடைந்து விட்டாலும், கட்டத்தின் மூன்றுபக்க அத்திவாரங்களை தெளிவாகப் பார்க்க முடிகிறது. கட்டிடத்தின் முன்பக்கம் அடர்ந்த காடாக இருப்பதால் அதன் அத்திவாரத்தை தற்போது அடையாளம் காணமுடியவில்லை. ஏனைய மூன்று அத்திவாரங்களில் இருந்தும் எழுப்பப்பட்ட சுவர்கள் ஒவ்வொன்றும் ஏறத்தாழ ஒருமீற்றர் தடிப்பைக் கொண்டன. அதிலும் இரண்டு அறைகளைப் பிரித்து நிற்கும் நடுச் சுவரின் தடிப்பு ஏனைய அத்திவாரச் சுவர்களைவிடச் சற்றுக் கூடுதலாகக் காணப்படுகிறது. பேராசிரியர் பொ. இரகுபதி சுவர்களின் தடிப்பை ஆதாரமாகக் காட்டி இக்கட்டிடம் இரு மாடிகளைக் கொண்ட வீடு எனக் குறிப்பிடுகிறார். இவ்வீட்டின் கூரை, ஓடுகளைக் கொண்டு வேயப்பட்டதற்கான ஆதாரங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் இதன் கூரை, மரங்கள் – பனை ஓலைகள் கொண்டு வேயப்பட்டிருக்கலாம் எனக் கருதலாம். 

clay pots

இவ்வீட்டை அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட செங்கட்டிகளின் அளவும், அவற்றின் தொழில் நுட்பமும் ஐரோப்பியர் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட செங்கட்டிகளின் காலத்திற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன. மேலும் இக்கட்டிட அழிபாடுகளிடையே இருந்து எடுக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட நீர்ப்பாசனக் குழாய்கள் என்பவற்றின் காலம் ஏறத்தாழ கி.பி. 15 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகக் காணப்படுகிறது. இவற்றை ஆதாரங்களாகக் கொண்டு இவ்வீடு அமைக்கப்பட்ட காலம் யாழ்ப்பாண அரசுகாலம் அல்லது அதற்கு முந்திய காலத்தைச் சேர்ந்ததெனக் கூறமுடியும். ஆகவே வடஇலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட காலத்தால் முந்திய குடிமனையாக இதைக் கருத முடியும்.

Dutch sentry point

வடஇலங்கையில் புராதனக் குடியிருப்புக்களைக் கொண்ட இடங்களில் வடமராச்சி கிழக்குப் பிரதேசமும் ஒன்றாகும். 1980 களில் பேராசிரியர் இரகுபதியும், பின்னர் இக்கட்டுரை ஆசிரியரும் வெற்றிலைக்கேணி, உடுத்துறை, செம்பியன்பற்று, முள்ளியான், கட்டைக்காடு ஆகிய இடங்களில் மேற்கொண்ட ஆய்வுகளில் இவ்விடங்களில் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. யாழ்ப்பாண அரசு காலத்தில் கடல் வழியாகவும், வன்னியில் இருந்து தரைவழியாகவும் கொண்டுவரப்பட்ட பொருட்களுக்கான வரி அறவிடும் கடவைகள் மேற்கூறப்பட்ட இடங்களில் இருந்ததற்கு வரலாற்று இலக்கியங்களில் ஆதாரங்கள் காணப்படுகின்றன. ஆனால் போத்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சியைத் தொடர்ந்து இவ்விடங்களில் வாழ்ந்த மக்கள் படிப்படியாகப் பிற இடங்களுக்குச் சென்றதாக இவர்களின் ஆட்சிக்கால ஆவணங்கள் கூறுகின்றன. ஆயினும் இவ்விடங்களில் இருந்து கடல் வழியாகவும், தரை வழியாகவும் பொருட்கள் கடத்தப்பட்டதால் அவற்றைத் தடுப்பதற்காகவே ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான கோட்டைகளை இயக்கச்சி, ஆனையிறவு, வெற்றிலைக்கேணி போன்ற இடங்களிலும், கடற்கரையை அண்டிய இடங்களில் காவல் அரண்களையும் அமைத்தனர். இந்நிலையில் முள்ளியான் காட்டுப் பகுதியில் கண்டுபிக்கப்பட்ட கட்டிட அழிபாடுகள் ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் செறிவான தமிழர் குடியிருப்புக்கள் அங்கிருந்ததன் அடையாளமாகக் காணப்படுகிறது. இது போன்ற வீடுகளின் சிதைவுகளும், பாழடைந்த ஆலயங்களின் அழிபாடுகளும் இவ்வட்டாரத்தின் காட்டுப் பகுதிகளில் இருப்பதாக இப்போது தெரிய வந்துள்ளது. எதிர்கால ஆய்வுகளால் அவை புதுவெளிச்சம் பெறலாம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7293 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)