Arts
10 நிமிட வாசிப்பு

அசைவ உணவுகளின் சாதகங்களும் பாதகங்களும்

June 5, 2023 | Ezhuna

ஈழத்தில் யாழ்ப்பாணம் தனக்கென சிறப்பான உணவுப் பழக்கவழக்கங்களையும் மருத்துவத்தில் சில விசேட முறைகளையும் கொண்டிருந்தது. ஆயினும் அந்நியர் ஆட்சி, பூகோளமயமாதல், வர்த்த நோக்கிலான வாழ்வியல், நாகரிகமோகம் என்பன அந்த உணவுப்பழக்கவழக்கத்தைக் குலைத்துப்போட்டது. அதன் விளைவாக, ஆரோக்கியக் குறைபாடுகள், தொற்றா நோய்கள் என பலவீனமான சமுதாயம் ஒன்று நம்மிடையே உருவெடுத்துள்ளது. இந்த நிலையை மாற்றியமைத்து, மீண்டும் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப எமது பாரம்பரிய உணவுமுறைமையை மீட்டெடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் உணவுப்பழக்க வழக்கங்கள், உணவுகள் என்பன தொடர்பாக  சித்தமருத்துவம், தற்கால உணவு விஞ்ஞான  ஆய்வு என்பவற்றின் நோக்குநிலையில் விளக்குகின்றது ‘மாறுபாடில்லா உண்டி’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர்.

பன்றி

“ஊர்ப்பன்றி நிணநெய் யுண்ணி லுறுந்திரி தோசம் புண்ணே
தீர்க்கருங் கரப்பன் வெட்டை தினவொடு மற்று முண்டாம்
ஈர்த்ததிடும் வரட்சி மூல மிளைப்பும்போ மதுர மாகும்
கார்க்காட்டுப் பன்றி தன்னின் கடுநிணங் கரப்பன் வாயு”

– பக்.86, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி

ஊர்ப்பன்றி இறைச்சி மற்றும் அதன் கொழுப்பு என்பனவறைத் தொடர்ந்து உண்டுவந்தால், திரிதோசங்களும் தோசமடையும். இதனால் பலவிதமான தொற்றா நோய்களும் ஏற்படும். எளிதில் தீர்க்கமுடியாத புண்ணுடன் கூடிய கரப்பன் என்னும் தோல் நோயானது,  தோல் எரிவு, சொறிவு என்பனவற்றுடன் உண்டாகும். அதேவேளை உடலில் வரட்சி, மூலம், மூச்சுக்கஸ்டம் என்பனவும் ஏற்படக்கூடும்.

மதுரச் சுவையுடைய கறுத்த காட்டுப்பன்றி இறைச்சிக்கு தசையைப் பற்றிய கடும் கரப்பன் என்னும் தோல் தொடர்பான நோய் உருவாகும். உடலில் வாயு அதிகரிக்கும்.

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பன்றி இறைச்சி உண்பது பொதுவாகக்  குறைவாகவே காணப்படுகின்றது. எனினும் முஸ்லிம் மக்கள் தவிர்த்து மேலைநாடுகளில் பன்றி இறைச்சி பொதுவானதொன்றாகக் காணப்படுவதுடன் நாளாந்த உணவிலும் அடங்குகின்றது.

பன்றி இறைச்சியானது அதிகளவான புரதம், கொழுப்பு, இரும்பு, நாகச்சத்து, பொஸ்பரஸ், செலனியம் என்பவற்றுடன் B வகை உயிர்ச்சத்துக்களையும் கொண்டது. செலனியம் ஆனது தைரொயிட் சுரப்பியின் தொழிற்பாட்டுக்கு அத்தியாவசியமானது. நாளொன்றுக்கு உடலுக்குத் தேவையான செலனியம் சராசரியாக 200 கிராம் ஆகும். இது பன்றி இறைச்சியில் இருந்து கிடைக்கும்.

 அதேபோல் உடலுக்குத்  தேவையான அதிகளவிலான புரதவகைகளைக் (அமினோஅமிலங்கள்) கொண்டது பன்றி இறைச்சியாகும். 100 கிராம் இறைச்சியில் குறைந்தது 25 கிராம் புரதம் காணப்படுகின்றது.

பன்றி இறைச்சியில் நாடாப்புழு (Taenia solium), வட்டப்புழு (Trichinella) என்பன காணப்படுவதற்கான சாத்தியம் அதிகம். எனவே இறைச்சியை  நன்றாக வேகவைத்து உட்கொள்ள வேண்டும்.

மரை (கடமான்), மான் இறைச்சி

“உட்டண மதனி னோடே யுதரத்தில் வலியுண் டாக்கும்
தட்டிலா மரையி றைச்சி தவிர்விலா மந்த மாகும்
பெட்புடன் பெலனு முண்டாம் பெருமைசேர் மானி றைச்சி
திட்டமாய்ப் பெலனுண் டாக்குஞ் சேர்த்திடு மந்தந் தன்னை”

– பக்.86-87, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி

மரை இறைச்சிக்கு வயிற்றில் சூடு உண்டாவதுடன் வயிற்றில் வலி ஏற்படும்.  அதிகமாக உண்ணும்போது உடல் பருமனடைந்து பலமுண்டாவதுடன் சோம்பலும் அடையும். இங்கு அதிகமாக உண்ணும்போது ஏனைய இறைச்சி வகைகளுடன் ஒப்பிடும்போது தீங்கின்றியதாக இருக்கும் என்பதையே “பெட்புடன்” (பாதுகாப்பான) பலன் உண்டாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் ஏனைய இறைச்சிகளுடன் ஒப்பிடும்போது விலங்குக் கொழுப்பும், கலோரியும் மரை, மான் இறைச்சிகளில் மிகக்குறைவாகவே உள்ளது.

மான் இறைச்சியும் உடலைப் பலமுள்ளதாக்கும் அதேவேளை அதிகமாகும்போது சோம்பலையும் ஏற்படுத்தும்.

முயல் இறைச்சி

பாரம்பரியமாக முயல் ஆண்டு முழுவதும் வேட்டையாடப்பட்டு உணவாகக் கொள்ளப்படுவதாகும். சாதாரண வளர்ப்பு முயல் இறைச்சியை விட காட்டு முயல் இறைச்சி சிறந்தது.

 சமைக்கப்பட்ட 75 கிராம் முயல் இறைச்சியில் இருந்து நாளொன்றுக்குத் தேவையான புரதச்சத்து, இரும்புச்சத்து, B வகை உயிர்ச்சத்துக்களில் 25% இற்கும் அதிகமாகக் கிடைக்கும். ஏனைய சத்துக்கள் 15 – 24% வரை கிடைக்கும். 5 – 14% ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் (Omegs 3 fatty acids) கிடைக்கும்.

முயல் இறைச்சியில் உள்ள நிறைபுரதத்தினால்  உடற் தசைகள், தோல், இரத்தம் என்பனவற்றின் ஆரோக்கியமும், சிதைவுகளும் சீராக்கப்படுகின்றன. தேவையான அளவு காணப்படும் இரும்புச்சத்தினால் இரத்தவிருத்தி நன்றாக இருக்கும். தேவையான அளவு B வகை உயிர்ச்சத்துக்களினால் உணவுகளின் அகத்துறிஞ்சலுக்கும், உடல் வளர்ச்சி, ஆரோக்கியமான தோல், நரம்பு, தசை, தலைமயிர் வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

“முயனிண மிரும லீழை மொழிந்திடு சுவாச காசம்
கயமலக் கட்டுப் பித்தங் கருதரும் வரட்சி யோட்டும்
நயனுறு நடையுண் டாக்கு நல்லன்னஞ் செரிக்கப் பண்ணும்
சயமுறு கொழுப்பி னோடு சார்ந்திடும் பெலனு மன்றே”

– பக். 87, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி

முயல் இறைச்சிக்கு இருமல், இரைப்பு (Asthma), சுவாசப் பாதை ஒவ்வாமை, மலக்கட்டு, பித்தத்தினால் ஏற்படும் உடல் வரட்சி என்பவற்றைப் போக்கும். சுறுசுறுப்பான நடை ஏற்படும். சமிபாட்டைச் சீராக்கும். உடலில் உள்ள கொழுப்பினைக் குறைத்து உடலுக்கு பலத்தைக் கொடுத்திடும்.

உடும்பு இறைச்சி

“உடும்பதன் கறிக்கு ணங்கே ளுண்மூலங் கடுப்புச் சோகை
கடும்வாத பித்தந் தாகங் காசம்புண் சேட மாற்றும்
வடுவுடல் கொழுப்பி னோடு வண்மையார் பெலனுண் டாக்கும்
படுமிவ்வூ னுடம்பு னெங்கும் பரிவொடு சேரு மாமே”

– பக்.89, அமிர்தசாகரம், பதார்த்த சூடாமணி

“கிட்டும் உடும்பிறைச்சி கேள்விநோய் மூலமுளை
வெட்டைசிர நோய்சோபை மேகம்புண் – குட்டுகபஞ்
சீதமிரத் தக்கடுப்பு தீராத குடல் வாதம்
பேதியிவை போக்குமெனப் பேசு”

“சொல்லாத பித்தமொடு தோல்வறட்சி யும்போம்
பலமிலாத் துர்ப்பலர்க்கும் பாரில் – பலம் வந்
திடுந்துவர்ப்பி னிப்பும் இயற்கையிலே உள்ள
உடும்பின் இறைச்சிதனை உண்”

– பக்.445, தாது சீவ வகுப்பு, குணபாடம்

உடும்பின் இறைச்சியானது துவர்ப்பு இனிப்பு சுவைகளை உடையது. இதன் இறைச்சியினால் காதில் ஏற்படும் நோய்கள், உள்மூலம் / எருவாய்முளை, உடல்வரட்சி சூடு, தலையில் ஏற்படும் நோய்கள், குருதிச்சோகையால் ஏற்பட்ட உடல் வீக்கம், நீரிழிவு, புண்கள், குட்டநோய்கள் (தீவிர தோல் நோய்கள்), கப மாறுபாடு, அதி இரத்த அழுத்தம், குடல்வலி, கழிச்சல் என்பவற்றுக்குச் சிறந்தது.

பித்ததோச அதிகரிப்பு அதனால் ஏற்படும் தோல்வரட்சி என்பன குறையும். பலவீனமானவர்க்கும் பலத்தினை அளித்திடும் இயற்கையில் வளர்ந்த உடும்பின் இறைச்சி.

கோழி இறைச்சி – முட்டை – என்பு

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் அசைவ உணவு உண்பவர்கள், கூடுதலாக நகரத்தில் வசிப்பவர்கள் அதிகமாக உண்பது கோழி இறைச்சி ஆகும். யாழ்ப்பாணத்தில் ஊர்க்கோழி, கானாங்கோழி, கருங்கோழி, வெள்ளடியன், வான்கோழி எனப்பல இனங்கள் காணப்படுகின்றன. எனினும் இன்று ஊர்க்கோழி, புறொயிலர் கோழி, முட்டைக் கோழி என்னும் வகைகள் பிரதான இடத்தை வகிக்கின்றன.

புறொயிலர் போன்ற வளர்ப்புக்கோழிகளே இறைச்சிக்கு இப்பொது அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல் முட்டைக்கான கோழிகளில் இருந்து முட்டை உற்பத்தி அதிகளவில் பெறப்படுகின்றது. இவ்வினங்கள் இறைச்சிக்காகவும், அதிகளவிலான முட்டைகளை பெறும் நோக்கத்துக்காகவும் பல இனக் கோழிகளையும்   கலந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இனக் கோழிகளாகக் காணப்படுகின்றன. இவை இயற்கையுடன் இசைந்து வாழ முடியாதனவாகவும் அல்லது குறிப்பிட்ட சத்துக்கள் செறிந்த தீவனங்கள் இல்லாமல் குறிப்பிட்ட விளைவைத் தரமுடியாதனவாகவும் காணப்படுகின்றன. இன்று ஊர்க்கோழிகளுக்கும் கூடுகளுக்குள் தீவனங்கள் போடப்பட்டே முட்டைகள் பெறப்படுகின்றன. இத்தீவனங்கள் உயர்செறிவான புரதங்களைக் கொண்டனவாகவும்,  தேவையான உயிர்ச்சத்துக்கள், கல்சியம் போன்ற கனிமங்களையும் செறிவாகக் கொண்டனவாகவும் காணப்படுகின்றன. முட்டையிடும் கோழியின் தீவனத்தில் வளர்ச்சிக்கு இடப்படும் தீவனத்திலும் பார்க்க அண்ணளவாக 4 மடங்கு கல்சியம் காணப்படுகின்றது. இதனால் கோழி தொடர்ந்து முட்டையிடும் தன்மையும் அதிகரிக்கின்றது. அதாவது இத்தீவனங்கள் குறைவான அளவில் அதிக வளர்ச்சியைக் கொடுக்கக்கூடியவை. இதனை Feed conversion rate (தீவனம் இறைச்சியாக அல்லது முட்டையாக மாறும் விகிதம்) என்பார்கள்.

 இவை வர்த்தக நோக்கிலும், அதிகரித்து வரும் சனத்தொகைக்கும் ஏற்புடையதாக இருப்பினும், ஆரோக்கியத்துக்கு உகந்தனவா என்பது பெரியதொரு கேள்வியாகவே காணப்பட்டபோதிலும் அறிவியல் ரீதியாக புறோயிலரால் பாதிப்புக்கள் இல்லை என்றே ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சிறுவர்களில் ஏற்படும் அதிஉடற்பருமன் மற்றும் பெண்கள் விரைவாக வயதுக்கு வருதலுக்கும் இது ஒரு விசேட காரணமாகாது. ஆனால் பல பாதகமான காரணங்களில் இவற்றின் அதீத பாவனையும்  ஒன்று.

இவற்றுக்கு வழங்கப்படும் தடுப்பு மருந்துகள் அல்லது நுண்ணுயிர்க் கொல்லிகளால் ஆபத்துகள் அதிகமாகவே காணப்படுகின்றன. கோழிகளுக்குத் தொற்றுநோய்கள் ஏற்படுவதால் உண்டாகும் நட்டத்தினைத் தவிர்த்துக்கொள்ள , முற்பாதுகாப்பாகவே ஒரு  கால இடைவெளியில்  தொற்று நோய்களால்  கோழிக்கு பாதிப்பு ஏற்படும் முன்னரே,  குறித்த தொற்று நோய்களுக்கான   மருந்துகள் வழங்கப்படுகின்றன. இவற்றுக்கு வழங்கப்படும் நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotics) மருந்துகள் வழங்குவதற்கு அளவுகள், வழங்கப்படும் கால இடைவெளிகள், வழங்கப்பட்ட பின் எத்தனை நாட்களில் உட்கொள்ளலாம் என்பதற்கான விதிமுறைகள் பண்ணையாளர்களால் சரியான முறையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும். குறிப்பாக மேற்படி மருந்துகள் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனை இன்றி வியாபார நோக்கிலேயே இந்தத்தொழில்துறை காணப்படுகின்றது.

இவ்வாறு  முறையற்றவகையில்  இவை  பயன்படுத்தப்படுவதால் மனிதர்கள் பாரதூரமான பின்விளைவுகளைச் சந்திக்கவேண்டிய நிலையேற்படலாம்.   முறையற்ற வகையில் மருந்துகளை உட்கொண்ட கோழிகளின் இறைச்சி மூலம் நுண்ணுயிர்க்கொல்லிச் செறிவை நமது உடலில்   அதிகரிக்கும். இதனால் மனிதர்களுக்கு   நுண்ணுயிர்த் தொற்றுகள் ஏற்படும்போது, படிப்படியாக அவை  நுண்ணுயிர்கொல்லிகளுக்கான எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடுகின்றன. இந்த நிலையானது எதிர்காலத்தில்   ஏதேனும் தொற்றுநோய் ஏற்படும் போது பாதகமான விளைவை   மனிதர்களுக்கு  ஏற்படுத்திவிடும்.

ஊர்க்கோழி இறைச்சிக்கும் புறோயிலர் கோழி இறைச்சிக்கும் இடையிலான வேறுபாடுகள்:

chicken table 1
chicken table 2

“கோழியின் கறிக்கு வாதங் குடி போகுங் குன்ம நீங்கும்
வாழ்பெல னனலி னோடு வன்பசி யுண்டா முட்டை
பாழ்செயுங் கிரந்தி யல்லாற் பகரருங் கரப்பன் சேர்க்கும்
காழுறு மிதனெ லும்பு கண்ணுரோ கங்கட் காமே”

– பக்.89, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி

பொதுவாக ஊர்க்கோழி இறைச்சி  வாதரோகங்கள், குன்மம் (வயிற்றுப்புண்) என்பனவற்றுக்குச் சிறந்தது. பித்தத்தினை அதிகரிப்பதன் மூலம் உடற்சூட்டினையும், நிறைந்த பசியையும் உண்டாக்கும். கோழி முட்டையானது கிரந்தி (ஒவ்வாமையை ஏற்படுத்தும்) அல்லது தோல் நோய்கள் உள்ளவர்களுக்கு அவற்றை தூண்டும். கோழியின் எலும்பானது கண்கள் தொடர்பான நோய்களுக்கு சிறந்ததொன்றாகும்.

“வாதபித்தஞ் சேர்ப்பிக்கும் வன்றோடம் புண்போக்குந்
தாதுவை மெத்த தழைப்பிக்கு – மோது
கபத்தை யடக்குங் கரப்பானுண்டாக்கு
மிபத்தையுறுங் கோழிமுட்டை யெண்”

– பக். 479, தாதுசீவ வகுப்பு, குணபாடம்

வாத பித்த தோசங்களைச்  சேரவைக்கும். இதனால் சில ஒவ்வாமைகளையும் ஏற்படுத்தும்.  உயிர்த்தாதுக்களில் ஏற்பட்ட கடுமையான தோசங்கள், புண்களைப் போக்கும். உடலை பலமடையச் செய்யும். கப நோய்கள் அதிகரிக்காது தடுக்கும். கரப்பன் எனப்படும் ஒவ்வாமையுடன் கூடிய தோல் நோய்களை உண்டாக்கும்.

முட்டை மஞ்சள் கருவில், இறைச்சியில் காணப்படும் Alpha livetin எனப்படும் புரதம் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது. ஒவ்வாமைத் தாக்கம் உடையவர்கள் ஒவ்வாமையுடன் கூடிய தோல் நோய்கள், சுவாசநோய்கள் ஏற்படும்போது உணவில் இவற்றினைக் கவனத்தில் கொள்வது சிறந்தது. இதனால் இதனைத் தவிர்ப்பதற்காக பொதுவாக பத்தியக்கறிகளில் “விறாத்துக்குஞ்சு” எனப்படும் இளம் கோழி (அண்ணளவாக 2 மாத வளர்ச்சியுடைய) இறைச்சி பயன்படுத்தப்படுகின்றது. முதிர்ந்தகோழி பயன்படுத்துவதில்லை.

 முட்டை சிந்ததொரு நிறை உணவாகக் கொள்ளப்படுகின்றது. முட்டைகளை சமைத்து உண்பதால் சமிபாடு அடைவதை இலகுவாக்குவதுடன் கிருமித் தொற்றில் (Salmonella) இருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

 கொலஸ்திரோல், இதய நோய்கள் உடையவர்கள் முட்டை வெள்ளைக் கருவை பயன்படுத்தலாம். முட்டை முழுவதுமாயின் கிழமையில் 2 – 3 முட்டைகள்  உண்ணலாம். ஆனால் நோயின் தீவிரத்தைப் பொறுத்து  மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4290 பார்வைகள்

About the Author

தியாகராஜா சுதர்மன்

தியாகராஜா சுதர்மன் அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவ பட்டதாரியும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானத்தில் பட்டப்பின் டிப்ளோமா பட்டதாரியும், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் உளவளத்துணை டிப்ளோமா பட்டதாரியும் ஆவார்.

அரச சித்த மருத்துவ உத்தியோகத்தராகப் பணிபுரியும் இவர் ஒரு சிறுகதை எழுத்தாளருமாவார். இவர் 'ஆகாரமே ஆதாரம்' எனும் நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)