Arts
13 நிமிட வாசிப்பு

அரசியல் தலையீடும் விவசாய வீழ்ச்சியும்

July 11, 2023 | Ezhuna

நம்மிடையே உள்ள பாராம்பரிய வேளாண்மை முறைமைகளில் நவீன நுட்பங்களை புகுத்தி, இலங்கையில் ஒரு விவசாயப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான நவீன விவசாயக் கொள்கைகளை உருவாக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும், விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும்  ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்கு உசாத்துணை ஆதாரமாகவும் ‘இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர் அமைகிறது. இலங்கையின் பாரம்பரிய வேளாண்மை முறைமையில் உள்ள சாதக – பாதகங்கள், அதிலுள்ள போதாமைகளை நிவர்த்திக்கும் வகையில் நவீன நுட்பங்களைப் புகுத்துதல், நவீன நுட்பங்களால் உண்டாகக்கூடிய விளைவுகள், இலங்கையில் பசுமைப்புரட்சிக்காக முன்வைக்கப்படவேண்டிய விவசாயக் கொள்கைகள் என்பன பற்றி விரிவாகவும், ஆய்வுத்தளத்திலும் இந்தக்கட்டுரைத்தொடர் விபரிக்கின்றது.

அறிமுகம்

இலங்கையின் விவசாயம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட ஒரு மிக முக்கியாமான பொருளாதாரத்துறை. அந்நிய சக்திகள் இலங்கையில் காலூன்றுவதற்கு முன்னர், மன்னர் ஆட்சிக்காலத்தில் மன்னர்களின் (இன்றைய காலத்தில் அரசியல்)  தலையீடு இலங்கை முழுவதும் உணவுப் புரட்சியை ஏற்படுத்தும் அளவுக்கு விவசாயத்துறையை வளர்த்தது. ஆனால் அந்நியர் ஆட்சிக்குப் பின்னர் இலங்கை ஒரு ஜனநாயக சோசலிசக் குடியரசாக மாறியது முதல்  இலங்கையில் காலம் காலமாக நிகழ்ந்துவரும் அரசியல் தலையீடு நாட்டின் விவசாயத் துறையின் வளர்ச்சியிலும்  ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பிலும் பாதகமான விளைவுகளையே அதிகம் ஏற்படுத்தி வருகின்றது. வெவ்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சிப்பீடம் ஏறும்போது விவசாயத்துறை சார்ந்தவர்களின் மீது மேற்கொள்ளப்படும் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள்,  நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும்  விவசாயத் திட்டங்களில் மேற்கொள்ளப்படும்  மாற்றங்கள், தகுதியை விட அரசியல் பரிசீலனைகளை அடிப்படையாகக் கொண்ட முடிவுகள், பயனற்ற கொள்கைகள், இலஞ்சம், ஊழல் மற்றும் இனப்பிரச்சினை போன்றன விவசாயத்துறையின்  வளர்ச்சி மற்றும் வினைத்திறனைத் தடுக்கின்றன. விவசாயத் துறையில் அரசியல் தலையீடுகளை நிவர்த்தி செய்ய, சுதந்திரமான மற்றும் வெளிப்படையான நிர்வாகக் கட்டமைப்புகளை ஏற்படுத்துவது மிக முக்கியமானது. விவசாய நிறுவனங்களை அரசியலற்றதாக்குதல், தகுதி அடிப்படையிலான நியமனங்களை உறுதி செய்தல், பங்குதாரர்களின் பங்களிப்பை ஊக்குவித்தல் மற்றும் தேவையற்ற அரசியல் செல்வாக்கிலிருந்து துறையைப் பாதுகாக்க சட்டத்தை இயற்றுதல் ஆகியவை அத்தியாவசியமான நடவடிக்கைகளாகும். கூடுதலாக, பொறுப்புக்கூறல் கலாச்சாரத்தை வளர்ப்பது, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் வள ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்தல் ஆகியவை இலங்கையின் விவசாயத் துறையில் அரசியல் தலையீட்டின் எதிர்மறையான விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமானதாகும். இவ் அத்தியாயம் இலங்கையின் விவசாயத்துறையில் என்னென்ன வகையில்  அரசியல் தலையீடுகள் ஏற்படுத்தப்படுகிறது மற்றும் இந்த அரசியல் தலையீடுகளால் விவசாயத்துறையில் எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கிறது மற்றும் இவ்வரசியல் தலையீட்டை எவ்வாறு இல்லாமல் ஆக்கலாம்  என்பதை தர்க்கித்து விரிவாக விளக்க முற்படுகிறது.

எந்தெந்த விவசாயத் துறையின் பகுதிகளில் அரசியல் தலையீடு நிகழ்கிறது?

விவசாயத் துறையின் மிக முக்கிய ஆதாரங்களாகக் காணப்படுபவை நிலம், நீர் மற்றும் உரப்பாவனை ஆகும். இலங்கையில் பல சகாப்தங்களாகக் காணப்படுகின்ற மற்றும் இன்றுவரை இணக்கப்பாடு எட்டப்படாத இனங்களுக்கிடையிலான பிரச்சினை மேற்கூறிய  மூன்று ஆதாரங்களையும் முன்னிறுத்தி  அரசியல்வாதிகளின் தேர்தல் பகடைக்காய்களாக அதிகளவில் பயன்படுத்தப்படுவது விவசாயத்துறையின் வீழ்ச்சிக்குப் பிரதானமாக அமைவதோடு காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட கீழ்குறிப்பிடப்படும், சிறுபான்மை மக்கள் விரும்பாதா சீர்திருத்தங்களும் மற்றும் கொள்கை மாற்றங்களும் காரணமாக அமைந்தன.

நிலச் சீர்திருத்தங்கள்

1970 களில், நிலமற்ற விவசாயிகளுக்கு நிலத்தை மறுபங்கீடு செய்வதை நோக்கமாகக் கொண்ட நிலச் சீர்திருத்தங்களை அரசாங்கம் செயல்படுத்தியது. இருப்பினும், அரசியல் பரிசீலனைகள் பெரும்பாலும் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தியது, விவசாயத் தகுதி அல்லது தேவையை விட அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் நிலம் ஒதுக்கப்பட வழிவகுத்தது. இதன்மூலம் பல விவசாய நிலங்கள் விவசாயம் அல்லாத வேறு தேவைகளுக்கு பயன்படுத்த வழிவகுத்தது. மேலும், 1972 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் நெல் நிலச் சட்டத்தை நிறைவேற்றியது. இது விவசாயிகளுக்கு நிலம் பகிர்ந்தளிப்பதில் அரசாங்கத்திர்க்கும் அரசியல் வாதிகளுக்கும்  உரிமையை  வழங்கியது. இந்த செயல் அரசியல் கூட்டாளிகளுக்கு வெகுமதி அளிக்கவும் எதிரிகளைத் தண்டிக்கவும் பயன்படுத்தப்பட்டது.

விவசாயத்தின் தேசியமயமாக்கல்

1970 களில், தோட்டங்கள் மற்றும் விவசாய வணிகங்கள் உட்பட பெரிய அளவிலான விவசாய நிறுவனங்களை அரசாங்கம் தேசியமயமாக்கியது. எவ்வாறாயினும், இந்த நிறுவனங்களின் முகாமைத்துவம்  மற்றும் செயல்பாடுகள் பெரும்பாலும் அரசியல்வாதிகளின் செல்வாக்கின் மூலம்  பாதிக்கப்படுகின்றன. இதன் விளைவாக திறமையின்மை மற்றும் தவறான முகாமைத்துவம், முறையற்ற இடமாற்றம், இன மற்றும் மொழி ரீதியான பாகுபாடு ஆகியவை ஏற்பட்டன.

mahavali project plan

1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அரசாங்கம் பாரிய நீர்ப்பாசனத் திட்டமான மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இத்திட்டம் ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டது. மேலும் இது பெரும்பான்மையான விவசாயிகளுக்கு பயனளிக்கவில்லை. மாறாக மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை அண்டிய பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவியது. இதன் காரணமாக தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கிடையில் பிரிவினைகளையும் மற்றும் உள்நாட்டுப் போர் ஏற்படவும் வழிவகுத்தது. இந்த மிகமுக்கியமான நீர்பாசனத்திட்டத்தை வடக்கு மாகாணத்துக்குள் கொண்டுவருவதற்கு தமிழ்மக்கள் இன்றும் எதிர்ப்பதற்கு இந்த மகாவலி அபிவிருத்தி திட்டத்தினூடான சிங்களக் குடியேற்றங்கள் தந்த கசப்பான அனுபவமே காரணம். ஆனால் இந்த மகாவலி நீர்பாசனத் திட்டம் அரசியல் லாபத்தை விடுத்து வடக்கு மாகாணத்தை அடைந்தால் பல்லாயிரம் ஏக்கர் வடக்கு மாகாண விவசாய நிலங்கள் மூன்று போகமும் நெல்விளைவிக்கும் திறனைப் பெறும் என்பதில் ஐயம் இல்லை. அதுமட்டுமன்றி, இரணைமடுத்திட்டத்தினூடு யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்ப்பிரச்சினை, நிலத்தடிநீர் பாதுகாப்பு  மற்றும் கடல்நீர் ஊடுருவல் எனப்பல பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

மானியத் திட்டங்கள்

விவசாயிகளை ஆதரிப்பதற்கும் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் பல்வேறு அரசாங்கங்கள் மானியத் திட்டங்களை அறிமுகப்படுத்தின. அவற்றில் மிக முக்கியமானது உரமானியம் ஆகும். இருப்பினும், அரசியல் தலையீடுகள் மானியங்களின் தவறான ஒதுக்கீடு மற்றும் தவறான நிர்வாகத்திற்கு வழிவகுத்தது. உதவி தேவைப்படும் சிறு விவசாயிகளை சென்றடையாமல் அரசியல் செல்வாக்கு பெற்ற குழுக்களுக்கு நன்மைகள் பெரும்பாலும் சென்றடைந்தன. இவ்வாறு கொடுக்கப்பட்ட உரமாநியத்தினால் துறைசார் நிபுணர்களின் மேற்பார்வை இன்றி தாரள செயற்கை உரப்பாவனை அதிகரித்து மண்வளம், நீர்வளம் பாதிக்கப்பட்டு விவசாய நிலங்களின் உற்பத்தித் திறன் குறைவடைந்துள்ளது. மற்றும் சூழல் மாசடைதல் அதிகரித்து, மக்கள் இன்று தொற்றா நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

2009 ஆம் ஆண்டு முதல் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வறியவர்களுக்கான சமூக நலத்திட்டமான “சமுர்த்தி” திட்டத்தை தனது அரசியல் ஆதரவாளர்களுக்கு நன்மைகளை செய்வதற்காகவே பயன்படுத்தியது. மேலும் இது பெரும்பான்மையான ஏழை விவசாயிகளை சென்றடையவில்லை.

அரசியல் தலையீடுகள் இலங்கையின் விவசாயத் துறையைச் சேதப்படுத்திய வழிகளுக்கு இவை ஒரு சில எடுத்துக்காட்டுகள். விவசாயத் துறையில் சீர்திருத்தம் செய்வதில் அரசு தீவிரம் காட்டினால், அரசியல் தலையீட்டைக் குறைத்து அனைத்து விவசாயிகளின் நலன்களும் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் ஏற்றுமதிக்கான தடை

வளர்ச்சியடைந்த நாடுகளின் அரசியல் செல்வாக்கைப் பெறுவதற்கும் பூகோள அரசியல் இராஜதந்திர உறவுகளை மற்றைய நாடுகளுடன் பேணுவதற்கும் குறைந்த வரியுடன் தாராள விவசாயப் பொருட்களின் இறக்குமதிக் கொள்கையை ஆட்சியாளர்கள் கடைப்பிடிப்பதினால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு பல விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டுள்ளனர்.  மேலும் அரசு விவசாயிகளைப் பாதுகாக்க அடிக்கடி விவசாயப் பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளூர் விவசாயிகளை ஆதரிப்பதாகக் காட்டிக் கொண்டாலும் பல சமயங்களில் உண்மையான பொருளாதார அக்கறைகளைக் காட்டிலும் அரசியல் நோக்கமே அதிகமாகக் காணப்படுகிறது. இந்த இறக்குமதிக் கட்டுபாடுகள் நிலையற்றதாகக் காணப்படுவதோடு  உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இத்தகைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் சந்தைப்படுத்த முடியாமல்  விவசாயிகள் பரிதவிப்பதையும் நட்டம் அடைவதையும் நாம் காணலாம்.

2021 ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்கம் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த கட்டுப்பாடுகள் உள்நாட்டு நுகர்வோரைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை விவசாயிகளுக்குத் தங்கள் பொருட்களை விற்று வாழ்வாதாரத்தை ஈட்டுவதை மிகவும் கடினமாக்கியுள்ளன. 2022 ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்கம் புதிய விவசாயக் கொள்கையை அறிவித்தது. அதில் சிறிய அளவிலான விவசாயிகளின் இழப்பில் பெரிய அளவிலான விவசாயிகளுக்கு பயனளிக்கும் பல நடவடிக்கைகள் உள்ளன.

அடிக்கடி மாறும் விவசாயக் கொள்கைகள்

அரசியல் தலைமைகளில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கொள்கை முன்னுரிமைகளில் ஏற்படும் மாற்றங்கள் விவசாயத் துறையை பாதித்துள்ளன. ஒவ்வொரு புதிய அரசாங்கமும் அதன் சொந்த கொள்கைகள் மற்றும் திட்டங்களை அடிக்கடி அறிமுகப்படுத்துகிறது. இது நீண்ட கால திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலில் முரண்பாடுகள் மற்றும் இடையூறுகளுக்கு வழிவகுக்கிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு விவசாயத் துறையில் அரசியல் தலையீடு அதிகமாகக் காணப்பட்டது. உதாரணமாக, சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் (1960-1965, 1970-1977) விவசாயக் கொள்கைகளை அவரது அரசியல் ஆதரவாளர்களின் நலன்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்தியது. இதனால் விவசாய வளங்களை திறனற்ற முறையில் பயன்படுத்துதல், சிறு விவசாயிகளை புறக்கணித்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்பட்டன.

சமீப காலமாக விவசாயத் துறையில் அரசியல் தலையீடுகள் இன்னும் அதிகமாகி வருகின்றன. உதாரணமாக, மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் (2005-2015) விவசாயக் கொள்கைகளை அவரது பெரும்பான்மை இன அரசியல் கூட்டாளிகளின் இருப்பை நிலைத்திருக்கச் செய்யப் பயன்படுத்தியது. இதனால் விவசாய அதிகாரிகளின் ஊழல், விவசாயிகளின் எதிர்ப்பை அடக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்ட பெருமளவு நிதி அரசியல்வாதிகளினாலும் அவர்களுடன் தொடர்புபட்ட நிர்வாக அதிகாரிகளினாலும் வீணடிக்கப்பட்டன அல்லது  ஏப்பமிடப்பட்டன.

farmers protest

2019இல், கோத்தபய ராஜபக்சவின் அரசாங்கம் சூழலைப் பாதுகாப்பதாகவும் நஞ்சற்ற உணவை மக்களுக்கு வழங்குவதாகவும் அதிரடியான சேதன விவசாயக் கொள்கை காரணமாக இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்வதாகவும் எடுத்த முடிவு, விவசாய உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட விவசாய உற்பத்தியில் 50% இழப்பு ஏற்பட்டது. விவசாய ஏற்றுமதி முற்றிலும் தடைப்பட்டது. இதன் காரணமாக நீண்ட காலமாக அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ள இலங்கை, 450 மில்லியன் டொலர் பெறுமதியான அரிசியை இறக்குமதி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. தேசிய உணவுக் கேள்வியில் ஏற்பட்ட அதிகரிப்பினாலும் உணவுப் பற்றாக்குறையினாலும்  உள்நாட்டு விலைகள் சுமார் 50 வீதத்தால் அதிகரித்துள்ள நிலையில், இந்தத் தடையானது நாட்டின் தேயிலைப் பயிர், அதன் முதன்மை ஏற்றுமதி மற்றும் அந்நியச் செலாவணி ஆதாரத்தையும் அழித்தது. இலங்கையின் கிராமப்புறங்களில் முக்கிய வேலைவாய்ப்பை வழங்கும் தேயிலை உற்பத்தியாளர்கள், தேயிலை விளைச்சல்  இல்லாததால்  பலருக்கு வேலை வாய்ப்பை வழங்குவதைத் தவிர்த்துவிட்டதாகவும் விவசாயிகள் பரவலாக விமர்சித்துள்ளனர். தேயிலை உற்பத்தி குறைவினால் மட்டும் 2019 இல் 425 மில்லியன் டொலர்கள் பொருளாதார இழப்பு ஏற்பட்டு, இலங்கையின் பொருளாதாரம் உடைக்கப்பட்டு,  இன்று நாம் சோற்றுக்கு மற்ற நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

அரசாங்கத்தில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள், கொள்கை முன்னுரிமைகளில் ஏற்படும் மாற்றங்கள், விவசாயத் திட்டமிடல் மற்றும் நீண்ட காலத் திட்டமிடல் ஆகியன செயல்படுத்தலை சீர்குலைக்கின்றன. மானியங்கள், இறக்குமதிக் கட்டுப்பாடுகள், விலை நிர்ணய வழிமுறைகள் மற்றும் ஆதரவுத் திட்டங்கள் தொடர்பான கொள்கைகள் பெரும்பாலும் அரசியல் மாற்றங்களுடன் ஏற்ற இறக்கமாக இருப்பதால், விவசாயிகளுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதோடு இத்துறையில் முதலீடு செய்வதையும் தடுக்கிறது.

திறமையற்ற அதிகாரிகளின் நியமனம், ஊழல் மற்றும் லஞ்சம்

விவசாய முக்கிய பதவிகளில் உள்ள அதிகாரிகளை நியமிப்பதில் அரசியல் கருத்துக்கள் பெரும்பாலும் செல்வாக்கு செலுத்துகின்றன. விவசாயக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை திறம்பட நிர்வகிப்பதற்குத் தேவையான நிபுணத்துவம் மற்றும் அனுபவம் இல்லாத நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்த நடைமுறை வழிவகுக்கிறது. இதன் விளைவாக, முடிவெடுக்கும் செயல்முறைகள் விவசாய முன்னுரிமைகளை விட அரசியல் நிகழ்ச்சி நிரல்களால் பாதிக்கப்படுகின்றன.

விவசாயத் துறையில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு அரசியல் தலையீடு பங்களித்துள்ளது. அரசியல் தலையீடுகள் காரணமாக விவசாய வளங்கள், அனுமதிகள் மற்றும் நன்மைகளை அவர்களது ஆதரவாளர்கள் மற்றும் விசுவாசிகளுக்கு விநியோகிக்கும் வலையமைப்புகளை வளர்த்தெடுத்துள்ளது. இந்த நடைமுறை, விவசாயத் துறையில் வளங்கள் மற்றும் வாய்ப்புகளின் நியாயமான விநியோகத்தைத் தடுக்கிறது. அரசியல்வாதிகள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி துறைசார் நிபுணர்களின் செயற்பாடுகளை செய்யவிடாமல் தடுக்கின்றனர் மற்றும் நேர்மையான அதிகாரிகளை வலுக்கட்டாயமாக இடமாற்றத்துக்கு பணிக்கின்றனர். இதன் காரணமாக நிர்வாக அதிகாரிகள் தங்களது வேலைகளைச் சரிவரச் செய்யாமுடியாமல் புலம்புகின்றனர். அரசியல் தலையீடானது விவசாய நிறுவனங்கள், முடிவெடுக்கும் செயல்முறைகளின் சுயாட்சி மற்றும் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். அரசியல்வாதிகள் விவசாய வாரியங்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மீது செல்வாக்கு செலுத்தலாம். அவர்கள் சுதந்திரமாக செயல்படும் திறனைச் சமரசம் செய்து, சார்பு அடிப்படையிலான முடிவுகளை எடுக்கலாம்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

அரசியல் தலையீடு, விவசாய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியையும் பாதித்துள்ளது. ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான நிதியுதவி மற்றும் ஆராய்ச்சி திட்டங்களின் ஒதுக்கீடு ஆகியவை அரசியல் கருத்தாய்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளதோடு புதுமைகளைத் தடுக்கின்றன. மற்றும் மேம்பட்ட விவசாய நுட்பங்களின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கின்றன. 

விவசாயத் துறையில், அரசியல் தலையீடுகளின் அளவு மற்றும் தாக்கம் காலப்போக்கில் வெவ்வேறு அரசாங்கங்களில் வேறுபட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அரசியல் தலையீடுகளை குறைத்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல் மற்றும் தகுதி அடிப்படையிலான முடிவெடுப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் இலங்கையின் விவசாயத் துறையில் தொடர்ந்து சவால்களாக இருந்து வருகின்றன.

இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கு, விவசாயத் துறையை அரசியலற்றதாக்குதல், அரசியல் சுழற்சிகளில் தொடர்ச்சியுடன் நீண்ட காலக் கொள்கைகளை நிறுவுதல், உட்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சியில் முதலீடு செய்தல், நில மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் வளங்கள், மானியங்களின் வெளிப்படையான சமமான விநியோகத்தை உறுதி செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது. விவசாயத் துறையில் சீர்திருத்தம் செய்வதில் அரசு தீவிரம் காட்டினால், அரசியல் தலையீட்டைக் குறைத்து அனைத்து விவசாயிகளின் நலன்களும் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய வலுவூட்டலை ஊக்குவித்தல், நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல், கடன், சந்தைகளுக்கான அணுகலை வழங்குதல் மற்றும் விவசாயக் கல்வி, பயிற்சியை மேம்படுத்துதல் போன்ற முயற்சிகள் இலங்கையில் விவசாயத் துறையை புத்துயிர் பெறுவதற்கும் நீண்டகால உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இன்றியமையாதவையாகும். 

விவசாயத் துறையில் அரசியல் தலையீட்டுப் பிரச்சனை சிக்கலானது. அதற்கு எளிதான தீர்வு இல்லை. எவ்வாறாயினும், விவசாயத் துறையானது அதன் முழுத் திறனையும் அடைய வேண்டுமானால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது. இலங்கையில் விவசாயத் துறையில் அரசியல் தலையீடுகளை முறியடிக்க அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படும். எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், அனைத்து இலங்கையர்களுக்கும் நன்மை பயக்கும் மிகவும் நியாயமான மற்றும் சமமான விவசாயத் துறையை உருவாக்க முடியும்.

உசாத்துணை

  1. foreignpolicy.com/2022/03/05/sri-lanka-organic-farming-crisis
  2. government.economictimes.indiatimes.com/blog/opinion-sri-lankan-economy-collapsed-due-to-flawed-agriculture-policy/94129009
  3. www.orfonline.org/expert-speak/sri-lanka-food-security-impacted-by-flawed-economic-policies

ஒலிவடிவில் கேட்க

5603 பார்வைகள்

About the Author

கந்தையா பகீரதன்

கந்தையா பகீரதன் அவர்கள் 2009ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் விவசாய விஞ்ஞான இளமாணிப் பட்டத்தைப் பெற்று, அதே பல்கலைக்கழகத்தில் 2011ஆம் ஆண்டுமுதல் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். இவர் 2012ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பிற்கான விவசாய நிறுவகத்தில் தாவர பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் தனது முதுமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார். பின்னர் இவரின் ஆராய்ச்சித் திறமைகளுக்காக 2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் பட்டப்பின் ஆராய்ச்சிக்கான புலமைப்பரிசில் மற்றும் அவுஸ்திரேலியன் முதுகலை விருதையும் (IPRS&APA) பெற்று அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்றியல் தாவர பாதுகாப்புப் பிரிவில் கலாநிதிப் பட்டத்தை 2017 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார்.

இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் மற்றும் விவசாய உயிரியல் துறையின் தலைவராகவும் பதவி வகிக்கின்றார். இவர் தனது ஆராய்ச்சி முடிவுகளை 30இற்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி மாநாடுகளில் முன்னிலைப்படுத்தியதோடு மட்டுமல்லாது, உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற சஞ்சிகைகளிலும் தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை பிரசுரித்துள்ளார். இவர் எழுதிய ‘அந்நியக்களை பாதீனியம்: அடங்க மறுப்பது ஏன்? அறியாததும் புரியாததும்’ என்ற நூல் வெளிவரவுள்ளது.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)