Arts
10 நிமிட வாசிப்பு

வடக்கின் விருட்சங்கள் : தொலையாது காப்போம்!-மானிட வாழ்வியலில் மரங்களின் முக்கியத்துவம்

June 14, 2021 | Ezhuna
சிந்தனையின்றிய செயற்பாடுகளால் இழந்து போகும் நன்மைகள்
“ மப்பன்றிக் காலமழை காணா மண்ணிலே
சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது ஏர்
ஏறாது காளை இழுக்காது எனினும் அந்தப்
பாறை பிளந்து பயன்விளைவிப்பான் என்னூரான்
ஆழத்து நீருக்ககழ்வான் அவன் நாற்று
வாழத்தன் ஆவி வழங்குவான் ஆதலால்
பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் நன்னெல்லு..”
என்று ஈழத்து மகாகவி உருத்திரமூர்த்தி பாடியிருக்கிறார். கிடைத்த வளங்களின் உச்சப்பயனைப் பெறும் ஈழத்து விவசாயியை மிக அழகாக வர்ணிக்கிறது இக்கவி. இந்து சமுத்திரத்தின் முத்து என இலங்கையை வர்ணித்தமை எத்துணை பொருத்தமானது என்பதை இலங்கைக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப்பயணிகளும் உணர்வர். அத்துணை இயற்கை வளங்களையும் அருஞ்செல்வமாகக் கொண்டது எம் இலங்கை மண்.

இலங்கைக்குள்ளே பிரதேசத்துக்குப் பிரதேசம் வளங்கள் வேறுபட்டாலும் கிடைத்த வளங்களின் உச்சப்பயனைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் எம் முன்னோர் மிக உறுதியாக இருந்தனர். அதன் மூலம் தம் வாழ்வாதாரத்தையும் உயர்த்த முயன்றனர் என்பது கண்கூடு. அன்று அவர்கள் வேறு எதனைப்பற்றியும் யோசிக்கவில்லை. ஏனெனில் அன்றைய சனத்தொகையின் தேவைகளைப் பூர்த்திசெய்யத் தேவையான வளங்கள் இலங்கையில் மிகையாகவே காணப்பட்டன. ஆதலால், நிறைந்து காணப்பட்ட அவ்வளங்கள் அருகி வருவதைக்கூட அவர்கள் உணரவில்லை.

காலம் கடந்து சென்றது. வருங்கால சந்ததியினருக்கென சொத்துகளை சேகரிக்கத் தெரிந்த சமூகத்துக்கு வளங்களைப் பக்குவமாகப் பயன்படுத்தி சேமித்து வைக்கத் தெரிந்திருக்கவில்லை. இயற்கை வளங்கள் அள்ள அள்ளக் குறையாதவை எனவும் அவை தமக்கு இலவசமாகக் கிடைப்பன எனவும் தான் எம் முன்னோர் எண்ணியிருந்தனர். அவ்வெண்ணத்தைத் தம் வருங்கால சந்ததியினரின் உள்ளத்திலும் சிலையில் எழுத்தாகப் பதித்து விட்டிருக்கின்றனர். ஆதலால் தான் இன்றும் கூட எம்மில் பலர் அதே மன நிலையிலுள்ளோம்.

இது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என வரைவிலக்கணப்படுத்தும் சகல நாடுகளிலும் பொதுவாகக் காணப்படும் நிலைமையொன்றாகும். உலகளாவிய சனத்தொகை காலத்துடன் வேகமாகப் பெருகி வருகிறது. அதைப்பற்றி பிறிதொரு தடவை விரிவாக ஆராய்வோம். மனிதனின் தேவைகளும் காலத்துடன் வேகமாக அதிகரித்தன. ஆதலால் மனிதனும் முன்னரைப்போலவே வளங்களின் உச்சப்பயனைப்பெற முனைந்தபடி இருந்தான். தொடர்ந்தும் பூமியின் தாங்கும் கொள்ளவை மாற்ற முயற்சி செய்தபடியே இருக்கிறான். அவனது அதீத முயற்சியால் சில வளங்கள் மீளவும் புதுப்பிக்கமுடியாத எல்லைகளை அடைந்தன. சூழல் மாசடைந்தது. அது மிகவும் சிக்கலான புதிய பிரச்சினையாக உருவெடுத்தது. சூழற் பிரச்சினையில் தொடங்கி சமூகப்பிரச்சினைகளும் பொருளாதாரப்பிரச்சினைகளும் ஒன்றன் பின் ஒன்றாக எழத்தொடங்கின. அவற்றினால் சூழல் மேலும் மாசுபடத்தொடங்கியது. நாடொன்றின் அபிவிருத்தியின் நிலைத்து நிற்கும் தன்மையை கேள்விக்குள்ளாக்கின. அபிவிருத்தியென்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல என்பதை உலகமே உணர்ந்து கொண்டது.

உலகமயமாதல் மேலும் மேலும் விரிவடைந்து எய்தவன் ஓரிடத்திலும் அம்பை நோகின்றவன் இன்னோரிடத்திலுமாக காரண காரியங்கள் உலகளாவிய ரீதியில் பரந்து தாக்கம் செலுத்தத் தொடங்கின. எதிர்கால சந்ததியினரை நோக்கிய சிந்தனையின்றிச் செயற்பட்ட மனிதனின் நடவடிக்கைகளும் அவனது நுகர்வுக் கலாசாரமும் உலகளாவிய ரீதியிலே பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியனவாக மாறின. அபிவிருத்தி பற்றி மேற்குலக நாடுகளால் தரப்படுத்தப்பட்டிருக்கும் கண்ணோட்டமும் முதலாளித்துவ சுரண்டல்களும் நாடுகளுக்கிடையே, பிராந்தியங்களுக்கிடையேயான வருமான ஏற்றத்தாழ்வு இடைவெளிகளை உருவாக்கியமையை பல பொருளாதார ஆய்வாளர்கள் உணர்ந்து கொண்டனர்.

நிலைபேறான அபிவிருத்தி

அபிவிருத்தியென்பது வெறுமனே பொருளாதார வளர்ச்சியை மட்டும் அடிப்படியாகக் கொண்டதல்ல என்பதும் சமூக அபிவிருத்தி , ஒரு தனிமனிதனுக்கான சுதந்திரம் , அவனுக்கான சமூக சந்தர்ப்பங்கள், சுதந்திரங்கள் என்பன யாவுமே அபிவிருத்தியின் புதிய பரிமாணங்கள் என்பதும் ஆய்வாளர்களால் நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த நிலைமையில் தான் மனித அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு 2000 ஆம் ஆண்டு உலக நாடுகள் இணைந்து அபிவிருத்தி சார்ந்த எட்டு இலக்குகளை 2015 ஆம் ஆண்டளவிலே அடைவது என தீர்மானித்தன. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தால் வகுக்கப்பட்ட அவ் இலக்குகள் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் என அறியப்பட்டன. மனித வளம், மனித உரிமைகள், உட்கட்டமைப்பு ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டனவாக அவை விளங்கின. 2015 ஆம் ஆண்டு அடையப்படவேண்டிய இலக்குகளைத் துணையாகக் கொண்டு உலக நாடுகள் தமது அபிவிருத்தித் திட்டங்களை முன்னகர்த்தின. சில நாடுகள் வெற்றியும் கண்டன. பெரும்பாலான நாடுகள் ஓரளவான முன்னேற்றத்தையும் கண்டிருந்தன. இலங்கை உட்பட சில நாடுகள் ஒரு சில இலக்குகளில் மாத்திரம் மிகவும் சிறப்பான அடைவுகளை எட்டியிருந்தன.

மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளிலே ஒவ்வொரு துறை சார் இலக்குகளும் தனித்தனியாக வகுக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கிடையே இடைத்தொடர்புகள் காணப்பட்டபோதும் அவை காட்டிகளினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அவை அபிவிருத்தியின் வெற்றியை வெளிப்படுத்தியமையை விட நிதி வழங்குநரின் வெற்றியை அதிகம் வெளிக்காட்டுவனவாக அமைந்திருந்தன. இலக்குகளை அடையத்தவறினால் என்ன நடக்கும் என்பது தொடர்பில் எந்தவொரு கடப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கவில்லை. அவை உள்ளூர் பங்களிப்பையும் பொதுவான வலுவூட்டலையும் (பெண்களின் வலுவூட்டல் தவிர்ந்த) குறைவாக மதிப்பிட்டிருந்தன. அவ்விலக்குகளில் சூழலின் நிலைத்திருக்கும் தன்மைக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கவில்லை.


இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் அபிவிருத்தியின் நிலைபேறான தன்மையின் அவசியம் கருதியும் 2030 ஆம் ஆண்டளவிலே அடையப்படவேண்டிய இலக்குகளாக 17 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் வகுக்கப்பட்டன. அவ்விலக்குகளை 15 வருட காலத்துக்குள் அடைய முயற்சி செய்வதாக கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி உச்சி மாநாட்டிலே இலங்கை உட்பட 193 உலக நாடுகள் உறுதி பூண்டன.

இவ்வுடன்பாட்டை நடைமுறைப்படுத்தாவிட்டால் பாரிஸ் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டதைப் போன்று எந்த நாடுகளும் தண்டனைகளுக்கு ஆளாகப் போவதில்லை. ஆயினும் இந்த இலக்குகளுடன் இயைந்து நடக்காத நாடுகளுக்கு அபிவிருத்திக்கான நிதி கிடைக்காமல் போகும். அதுவே பாரியதொரு இழப்பாகும். இந்த நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளானவை எல்லா நாடுகளுக்கும் எல்லாத் துறைகளுக்கும் பொதுவானவை. ஒவ்வொரு இலக்குகளுக்கும் இடையே இடைத்தொடர்புகள் காணப்படுகின்றமை இவ்விலக்குகளின் சிறப்பம்சமாகும். ஓரிலக்கை அடைவதால் மற்றொரு இலக்கையும் ஓரிலக்கை அடைவதற்காகப் பல இலக்குகளையும் அடைய வேண்டியிருக்கிறது.

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடையும் பாதையில் இலங்கை மேற்கொள்ளும் நெடும் பயணத்தின் வெற்றியானது அவ்விலக்குகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகலதரப்பினரிடமும் காணப்படும் விழிப்புணர்விலும் அர்ப்பணிப்பிலுமேயே தங்கியுள்ளது. அவற்றை ஒவ்வொரு தரப்பினரும் உணர்ந்து செயற்பட்டாலொழிய வேறெந்த வழியிலும் அவ்விலக்குகளை அடைதல் கடினமாகவிருக்கும்.

இயற்கை வளங்கள் எல்லையில்லாமல் கிடைப்பவை, ஆதலினால் கிடைக்கும் வளங்களின் உச்சப்பயனைப் பெற வேண்டும் என்ற எண்ணப்பாங்கிலிருந்து இன்று நாம் மாறவேண்டிய கடப்பாட்டிலுள்ளோம். எல்லா இயற்கை வளங்களுமே வரையறுக்கப்பட்டவை. அவை மிகையாக நுகரப்பட்டால், மீள உருவாக இயலாத நிலைக்குச் சென்று விடும். இங்கு தான் அவற்றின் நிலைபேறான நுகர்வும் உகந்த பாவனையும் உணரப்படுகிறது.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டதைப் போன்று இன்று அருகி வரும் , அழிவின் விளிம்பு வரை வந்துள்ள இயற்கை வளங்களுள் தாவரங்கள் மிக முக்கியமானவை. அவற்றிலும் மரங்கள் மிக அவசியமானவை. இப்பூவுலகில் உயிர்கள் நிலைப்பதற்கு மரங்கள் ஆற்றும் பணி அளப்பரியது. ஆயினும் பொதுவாக நாம் மரங்களைக் கணக்கில் கொள்வதில்லை. ஆதலினால் மரங்கள் அழிக்கப்பட்டு வரும் வீதம் தினந்தோறும் அதிகரித்துவருவதாகவே உலகளாவிய அறிக்கைகளும் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. மரங்கள் அதிகம் காணப்படும் உயிர்ப்பல்வகைமைச் செறிவு மிக்க பகுதிகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே காணப்படுகின்றன. பொருளாதார அபிவிருத்தியா? மரங்களா? என்ற வினாக்களின் முன்னே மரங்கள் தோற்றுவிடும் நிலைமையே பொதுவாகக் காணப்படுகிறது. ஆனால் மரங்கள் மெல்ல மெல்ல அழிய, நாட்டின் பொருளாதாரமே கேள்விக்குறியாகி மீள முடியாத வறுமைச் சுழிக்குள் நாட்டை மாட்டிவிடும் என்பதை மனிதன் பல சந்தர்ப்பங்களில் உணர்வதில்லை.

இதற்கு இலங்கையும் காடுகள் செறிந்த வன்னிப்பெருநிலப்பரப்பும் விதிவிலக்கல்லவே? பனையும் பாலையும் முதிரையும் காட்டாமணக்கும் என வண்டி வண்டியாக மரக்குற்றிகள் வன்னியை விட்டுச் செல்வதைக் காணாதவர்கள் அரிது. பாலைப் பாணியையும் வீரைப் பாணியையும் குரக்கன் உரொட்டியுடன் உண்டு வளர்ந்த சமூகம் அம்மரங்களை இன்று அரிமரங்களாகத்தான்[1] பார்க்கிறது என்பதை ஏற்றுக்கொள்வது சற்றுக் கடினமாகத்தான் இருக்கிறது.

“முன்பெல்லாம் இங்கு முதிரை மரங்கள் இருந்தன யாவற்றையும் வெட்டி ஏற்றியாயிற்று. இப்போ பனை மரங்கள் மாத்திரம் தான் எஞ்சியுள்ளன. அவற்றிலும் கண் வைத்து விட்டார்கள். இன்னும் சில நாட்களின் பின் உயரமும் விட்டமும் கூடிய பனை மரங்களை எல்லாம் எமது ஊரில் காண்பது அரிதாகி விடும்”

என்று வருத்தப்பட்டார் இயக்கச்சியைச் சேர்ந்த கந்தசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)



உங்கள் கிராமத்தை ஒரு தடவை சுற்றிப்பாருங்கள். ஏறத்தாழ ஒரு தசாப்தத்துக்கு முன்னர் அது எப்படியிருந்தது என்று எண்ணிப்பாருங்கள்? இப்போது வித்தியாசம் தெரிகிறதா? பசுமை குறைந்திருக்கிறதா? அன்று நீங்கள் கண்ட வானுயர்ந்த மரங்கள் இன்று காணாமல் போயிருக்கின்றனவா?
வாருங்கள் வனங்களைப் பாதுகாப்போம்.

(தொடரும்)

[1] இங்கு அரிமரம் எனக் குறிப்பிடப்படுவது ஆங்கிலத்தில் Timber Tree எனக்குறிப்பிடப்படும் மரங்களையாகும். உலர் வலய மரங்களுள் பெரும்பாலானவை வைர மரங்களாகும். அவற்றிலிருந்து பெறப்படும் மரக்குற்றிகள் / பலகைகளின் அடிப்படையிலேயே அவற்றின் பெறுமதி கணிப்பிடபடுகிறது. இலங்கை அரச மரக்கூட்டுத்தாபனத்தினால் இத்தகைய அரிமரங்கள் அவற்றின் தரத்தின் அடிப்படையில் வெவ்வேறு வகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. உயர்வகுப்புக்களில் உள்ள பெரும்பாலான மரங்கள் உலர் வலயத்து சுதேச மரங்களாகும்.


ஒலிவடிவில் கேட்க

7306 பார்வைகள்

About the Author

மனோகரன் சாரதாஞ்சலி

மனோகரன் சாரதாஞ்சலி அவர்கள் ஆசிய தொழில் நுட்ப நிறுவகத்தில் இயற்கை வள முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் இளமாணிப்பட்டதாரி என்பதுடன் ஊடகவியலும் கற்றவர். லேக் ஹவுஸ் நிறுவனத்தில் சூழலியல் கட்டுரையாளராகப் பணிபுரிந்து பின்னர் கடந்த ஒரு தசாப்தகாலமாக இலங்கை நிர்வாக சேவை அலுவலராகப் பணிபுரிகிறார்.

இவர் முதுமாணிப் பட்டப்படிப்புக்காக உலகவங்கியின் புலமைப்பரிசிலையும் முதன்மை மாணவிக்கான இரு விருதுகளையும் பெற்றவராவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)