Arts
17 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணக் கோட்டையின் அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகள் – ஒரு புதிய பார்வை – பகுதி 1

June 12, 2023 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

உலக நாடுகள் பலவற்றின் வரலாறு பற்றிய ஆரம்பகால ஆய்வுகள் பெரும்பாலும் அந்நாடுகளில் நிலவிய  வரலாற்று வாய்மொழிக் கதைகள், வட்டார வழக்கில் உள்ள மரபுவழிச் செய்திகள், ஐதீகங்கள், பாரம்பரியச் சடங்குகள், நம்பிக்கைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன. இவற்றின் அடியாகக் தோன்றி வளர்ந்த வரலாற்று நம்பிக்கைகளை மீளாய்வு செய்வதில் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து  தோன்றி வளர்ந்த தொல்லியல், மானிடவியல், வரலாற்று மொழியியல் முதலான ஆய்வுகளுக்கு முக்கியமான இடமுண்டு. இது இலங்கைக்கும் பொருந்தும் என்பதை இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து வெளிவரும் புதிய வரலாற்று முடிவுகளும்,  அரச வரலாற்றுப் பாட நூல்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும் கோடிட்டுக் காட்டுகின்றன. பௌத்த மதத்தின் பரவலைத் தொடர்ந்து தென்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று இலக்கிய மரபு தோன்றி வளர்ந்த நாடு என்ற  சிறப்பு இலங்கைக்கு உண்டு.  இவ்வரலாற்று இலக்கியங்களில் இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து அநுராதபுரத்திற்கு வடக்கே திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிராந்தியங்கள் பாளி மொழியில் நாகதீபம் என்ற பெயரால் தனித்து அடையாளப்படுத்திக் கூறுவது சிறப்பாக நோக்கத்தக்கது. இப்பெயரே பழந்தமிழில் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள் என்பவற்றில் தமிழில் நாகநாடு எனக் குறிப்பிடப்படுகின்றது. இப்பெயர்களே பதின்மூன்றாம் நுற்றாண்டிலிருந்து வன்னி, வன்னிப்பற்று யாழ்ப்பாணப்பட்டினம்  முதலான பெயர்கள் தோன்றும் வரை வடஇலங்கையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்பிரதேச தனித்துவம் பௌதிக அடிப்படையில் மட்டுமன்றி பண்பாட்டு அடிப்படையிலும் தோற்றம் பெற்றிருக்கலாம் என்பதை தொல்லியல், இலக்கிய மூலாதாரங்களும் உறுதி செய்வதாக உள்ளன.

பாளி இலக்கியங்களில் வடபிரதேசம் தனித்து அடையாளப்படுத்திக் கூறப்பட்ட போதிலும் அநுராதபுரம், பொலநறுவை இராசதானிகள் கால ஆட்சியாளர்கள் இவ்வரச  தலைநகரங்களுக்கு தெற்கே மிகத் தொலைவிலுள்ள பிராந்தியந்தியங்களுடன்  கொண்டிருந்த அரசியல், பொருளாதார, பண்பாட்டு உறவுகளை விரிவாகக் கூறும் இப்பாளி இலக்கியங்கள்  இத்தலைநகரங்களுக்கு வடக்கே மிகக் கிட்டியதொலைவிலுள்ள வடஇலங்கையுடனான உறவுகள் பற்றி மிகக் குறைந்தளவு செய்திகளையே தருகின்றன. இதனால் பாளி இலக்கியங்களை முதன்மைச் சான்றுகளாகக் கொண்டு எழுதப்பட்ட பெரும்பாலான இலங்கை பற்றிய வரலாற்று நூல்களில் கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வடபிராந்தியத்தின் வரலாறானது புகைபடர்ந்ததாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் 1970 களில் கந்தரோடையில் பென்சில்வேனியப் பல்கலைக்கழக அரும்பொருள் ஆய்வார் விமலா பேக்கிளையின் தலைமையில், மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞானபூர்வமான தொல்லியல் அகழ்வாய்வும், 1980 காலப்பகுதியில்   கலாநிதி இரகுபதி மேற்கொண்ட யாழ்ப்பாணக் குடாநாட்டின் பூர்வீக மக்கள் பற்றிய தொல்லியல் அகழ்வாய்வுகளும், மேலாய்வுகளும், அவரைத் தொடர்ந்து 1990 களின் பின்னர்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து வடஇலங்கையில் பூநகரி, சாட்டி, முள்ளியான், பெரிய புளியங்குளம், செட்டிகுளம், கட்டுக்கரை, நாகபடுவான் முதலான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும், இலங்கையின் ஏனைய பிராந்தியங்களைப் போல் வடஇலங்கைக்கும் தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு என்பதை எடுத்துக்காட்டியுள்ளன. அந்த உண்மைகளை மேலும் உறுதிப்படுத்துவதில் 2010 இல் இருந்து யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த தொல்லியல் ஆய்வுகளுக்கு முக்கியமான இடமுண்டு.  

jaffna-fort

வட இலங்கையில் 327 ஆண்டுகள் ஐரோப்பியர் மேலாதிக்கம் நிலவியதன் அடையாளமாக காணப்படும் நினைவுச் சின்னங்களில் யாழ்ப்பாணக் கோட்டைக்கு தனித்துவமான வரலாற்றுச் சிறப்புண்டு. யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கு தெற்கே கடல் நீரேரியுடன் இணைந்துள்ள இக் கோட்டை இலங்கையில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய கோட்டையாகக் காணப்படுகின்றது. கி.பி 1621 அளவில் மண், கல்லைப் பயன்படுத்தி வட்ட வடிவில் போர்த்துக்கேயரால் இக் கோட்டை கட்டப்பட்டாலும் 139 ஆண்டுகள்  (1658-1796) யாழ்ப்பாணத்தில் ஆட்சி புரிந்த ஒல்லாந்தரால் மீளக் கட்டப்பட்ட தோற்றத்துடனேயே தற்போதைய கோட்டை காணப்படுகின்றது. அக்கோட்டையில் சில மாற்றங்களை பிரித்தானியர் தமது ஆட்சிக் காலத்தில்  ஏற்படுத்தியிருந்தாலும் அவை ஒல்லாந்தர் காலக்கோட்டையின் அடிப்படைத் தோற்றத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. அதனால் தான் இக்கோட்டை ஒல்லாந்தர் காலக் கோட்டையென அழைக்கப்படுகின்றது.

போர்த்துக்கேயரால் நான்கு பக்கச் சுவர் கொண்டதாக அமைக்கப்பட்ட இக்கோட்டையை ஒல்லாந்தர் நட்சத்திர வடிவில் ஐந்து பக்கச் சுவர்களைக் கொண்டதாக மாற்றியமைத்தனர். இந்த வடிவில் இலங்கையிலுள்ள ஒரேயொரு கோட்டை இதுவாகும். 62 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்கோட்டையின் வெளிப்புறச் சுவர்கள் ஒவ்வொன்றும் கீழ்ப்பகுதி 40 அடி அகலமும், மேற்பகுதி 20 அடி அகலமும், 30 அடி உயரமும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இக்கோட்டைமீது படையெடுத்து வரும் எதிரிகளை இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் சுவரின் உயரம் மேலிருந்து கீழ்நோக்கிப் பதிந்து காணப்படுகின்றது. கோட்டையின் வெளிப்புறச் சுவர்களைச் சுற்றி 20 அகலத்தில் ஆழமான அகழிகள் காணப்படுகின்றன. நான்கு பக்கமும் பாரிய பீரங்கித் தளங்களையும், பாதுகாப்பு அரண்களையும், காவற்கோபுரங்களையும், சுரங்கங்களையும், சுடுதளங்களையும் கொண்ட இக்கோட்டையைச் சுற்றி இரண்டு மைல் தொலைவில் 200 போர்த்துக்கேயப் படைவீரர்களும், உள்ளூர் படைவீரர்களும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்ததாக போர்த்துக்கேய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 34 ஏக்கரில் அமைந்த கோட்டையின் உட்பகுதியில் நிர்வாக மையங்கள், படைவீரர்களின் இருப்பிடங்கள், ஆயுதக் களஞ்சிய அறைகள், ஒல்லாந்தர் மீளக்கட்டிய கிறிஸ்தவ தேவாலயம், இந்து  ஆலயம், பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஆளுநர் மாளிகை, சிறைச்சாலைகள், பிற நிர்வாகக் கட்டடங்கள் என்பன காணப்படுகின்றன. ஒல்லாந்தர் ஆட்சியில் கொழும்பு, காலி முதலான இடங்களில் உள்ள கோட்டைகள் அந்தந்த மாவட்டங்களின் நிர்வாக மையமாகச் செயற்பட்ட போதும், யாழ்ப்பாணக் கோட்டை மட்டும் இராணுவப் பாதுகாப்பு மையமாகவே செயற்பட்டு வந்துள்ளது.

jaffna-fort-2

இந்து சமுத்திர நாடுகளில் உள்ள கோட்டைகளில் யாழ்ப்பாணக் கோட்டை கம்பீரமும், அழகும், சிறந்த தொழில்நுட்பத் திறனும், ஐரோப்பியர் காலக் கலை மரபும் கொண்ட கோட்டை என்ற சிறப்பிற்குரியது. 1984 இல் இலங்கையிலுள்ள ஒல்லாந்தர் காலக் கோட்டைகள் பற்றி  ஆய்வு மேற்கொண்ட நெல்சன் என்பவர் சமகாலத்து சிறந்த தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டையை இங்கிலாந்திலுள்ள தலைசிறந்த கோட்டைகளுடன் ஒப்பிடும் அளவிற்கு சிறந்த வடிவமைப்புக் கொண்டதெனப் புகழ்ந்து கூறுகின்றார் (Nelson 1984). இத்தகைய சிறப்புக்குரிய இந்தக்கோட்டை இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர், அதிலும் குறிப்பாக கடந்த மூன்று சகாப்த கால அனர்த்தத்தால் அதன் பொழிவையும், சிறப்பையும் இழந்து காணப்படுகின்றது. இந்தக்கோட்டையை வெளியில் நின்று பார்ப்பவர்களுக்கு சுற்றிவர அமைந்துள்ள பெரிய அரண்கள் கோட்டை என்பதனைப் புலப்படுத்தினாலும் உள்ளே இருந்த கட்டடங்கள் பெருமளவிற்கு அழிவடைந்து பல இடங்களில் கற்குவியலாகவே காட்சியளிக்கின்றது.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கால ஆவணங்களில் யாழ்ப்பாணக் கோட்டை கட்டிய வரலாறு விபரமாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கோட்டை கட்டுவதற்கு வேண்டிய கோறல் கற்கள் அயலில் உள்ள வேலணை, நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு முதலான இடங்களில் இருந்து பெறப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காங்கேசன்துறையிலிருந்து கோட்டை வரையில் உள்ளூர் மக்களை வரிசையாக நிற்கவைத்து காங்கேசன்துறையில் இருந்தும் கோட்டை கட்டுவதற்கான கற்கள் கொண்டுவரப்பட்டன. கோட்டையைச் சுற்றியுள்ள கடல்களில் இருந்து கோறல் கற்களைக் கொண்டுவந்த தோணிகள் ஒவ்வொன்றுக்கும் அக்காலத்தில் மூன்று பணம் கூலியாக வழங்கப்பட்டது. கடலில் இருந்து கற்களை சேகரித்து தோணியில் ஏற்றுவதற்கு அரைப்பணம் வழங்கப்பட்டது. தோணிகளுக்கு பாதுகாப்பாகச் செல்லும் அதிகாரிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 13 பணம் சம்பளமாக வழங்கப்பட்டது. கோட்டையைக் கட்டுவதில் போர்த்துக்கேய மேசன்மாருடன் உள்ளூர் மேசன்மாரும் பங்கு கொண்டனர். அவர்களுள் தலைமை மேசனுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு பணமும், அவனுக்கு கீழே வேலை செய்யும் மேசனுக்கு நாள் ஒன்றுக்கு அரைப் பணமும், சிற்றாள்களாக வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் சாப்பாட்டிற்கு வருடம் ஒன்றுக்கு 70 கரண்டி சாமி அரிசியும், கோட்டை கட்டுவோரை மேற்பார்வை செய்யும் பண்டாரத்திற்கு மாதம் ஒன்றுக்கு 8 பணமும் சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. மேலும் கோட்டை கட்டுவதற்கு சுதை தயாரிக்கும் சுண்ணாம்புக் கால்வாய்கள் குடாநாட்டின் பல இடங்களில் உருவாக்கப்பட்டன. அவை சுண்ணக் கற்களைப் பதமாக்கி பண்ணைக் கரைக்கு கொண்டு செல்லப்பட்டன. அவற்றோடு கலப்பதற்கான சர்க்கரை மூடைகள் இந்தியாவின் கோவாவில் இருந்து தருவிக்கப்பட்டன. இவற்றோடு கலப்பதற்கான களிமண் குளங்களிலிருந்து பெறப்பட்டன எனவும் கூறப்பட்டுள்ளன. இந்த விபரங்கள் யாழ்ப்பாணக் கோட்டை முழுக்க முழுக்க கோறல் கற்களைக் கொண்டே கட்டப்பட்டதென்ற கருத்தை புலப்படுத்துகின்றன.

ஆனால் கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளிலும், அழிவடைந்து காணப்படும் கிறிஸ்தவ ஆலயப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்விலும் கோறல் கற்களுடன் பல அளவுகளிலும், பல வடிவங்களில் அமைந்த சுண்ணாம்பு மற்றும் கருங்கற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் அவதானிக்க கூடிய முக்கியமான வேறுபாடு கோறல் கற்கள் குறிப்பிட்ட அளவுகளில் (10″ X 6″) வெட்டப்பட்டு பொழியப்பட்டு கோட்டையின் வெளிப்புறச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ள போது கருங்கற்களும், சுண்ணக்கற்களும் வேறுபட்ட அளவுகளிலும், வடிவங்களிலும் ஒழுங்கற்ற முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்தக் கற்களில் பெரும்பாலானவை ஏற்கனவே இந்து ஆலயங்களுக்கு பயன்படுத்தப்பட்ட கற்கள் என்பதற்கு அவற்றில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள், அலங்காரங்கள், கற்களின் வடிவ அமைப்புக்கள்  சான்றாகக் காணப்படுகின்றன. இந்தக்கற்கள் எங்கிருந்து பெறப்பட்டதென்பதற்கு போர்த்துக்கேய ஒல்லாந்த ஆவணங்களில் விபரமாகக் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் அவர்கள் ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பெரிதும், சிறிதுமாக இருந்த ஏறத்தாழ 500 ஆலயங்களும், பெரிய வசிப்பிடங்களும் இடிக்கப்பட்டு அவற்றிலிருந்த கற்கள் கோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்டதற்கான குறிப்புக்கள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக நல்லூர் இராசதானியை 1519 இல் வெற்றி கொண்ட போர்த்துக்கேயர் அங்கிருந்த ஆலயத்தை தமது பாசறையாகப் பயன்படுத்திவிட்டு பின்னர் அவ்வாலயத்தையும் இடித்தழித்து அந்தக்கற்களைக் கோட்டை கட்டப் பயன்படுத்தியதாக போர்த்துக்கேய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இதனால் கோட்டையில் கோறல் கற்கள் கலந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆலயங்களின் கற்களின் முக்கியத்துவத்தை இந்தக்கோட்டை கட்டிய வரலாற்று நிகழ்ச்சிகளின் பின்னணியில் நோக்கப்படுவது பொருத்தமானதாகும்.

இந்நிலையில் இலங்கை – நெதர்லாந்து அரசுகளின் நிதி உதவியுடன் மூன்று ஆண்டுகால திட்டத்தில் இக்கோட்டையை பழைய நிலைக்கு கொண்டு வரும் புனர்நிர்மாணப் பணியை இலங்கை தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டது. இதற்காக  தொல்லியல் திணைக்கள அறிஞர்கள், யாழ்ப்பாண தொல்லியல் பட்டதாரி மாணவர்கள் பலதரப்பட்ட தொழில்நுட்பவியலாளர், தொழிலாளர்கள் என நூற்றுக்கணக்கான பணியாளர்கள் சேவைக்கு அமர்த்தப்பட்டனர். இவர்கள் தமது ஆரம்ப புனர்நிர்மாணப் பணிகளாக கோட்டைக்கு உள்ளேயும், வெளியேயும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மாதிரி அகழ்வாய்வுகளையும், இடியுண்ட கட்டிடப்பகுதிகளில்  தொல்லியல் மேலாய்வுகளையும் மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளின் போது கிடைத்த தொல்லியல் ஆதாரங்கள் கோட்டையின் வரலாற்றுக்கு மட்டுமல்ல இப்பிரதேச பூர்வீக வரலாற்றுக்கும் புது வெளிச்சம் ஊட்டுபவையாக அமைந்தன. 

கோட்டைப் பிரதேசத்தின் தொல்லியல் ஆய்வுகள்

மட்பாண்ட ஓடுகள்

கோட்டைப் பிரதேசத்தில் இதுவரை நான்கு இடங்களில் மாதிரிக் குழி அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2011 இல் கோட்டை வாசற் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வின் போது போர்த்துக்கீசர் காலத்திற்கு  முந்திய சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு கோட்டை வாசல் தொடங்கும் இடத்திற்கும் கடற்கரைப் பக்கமாக உள்ள வீதிக்கும் இடையில் தற்போதைய கிறிஸ்தவ ஆலயத்திற்கருகில் முதலாவது அகழ்வாய்வு நடாத்தப்பட்டது. இவ் இடத்தில் 10 X 6 அடி நீள அகலத்தில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழியில் ஏறத்தாழ 2.5 அடி ஆழம் வரை நடாத்தப்பட்ட அகழ்வின் போது மூன்று வேறுபட்ட கலாசார மண் அடுக்குகளை அடையாளம் காணமுடிந்தது. இக்கலாசார மண் அடுக்குகளில் பல்வேறு வடிவங்களில் அமைந்த பலதரப்பட்ட மட்பாண்ட ஓடுகள் கிடைத்தாலும் மூன்றாவது கலாசாரப் படையில் மனித எலும்புக் கூடுகளுடன் பெருமளவு சீன மட்பாண்டங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இம்மட்பாண்டங்களின் காலம் கி.பி 10 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதால் மூன்றாவது கலாசாரப் படையின் காலம் போர்த்துக்கீசர் யாழ்ப்பாணம் வருவதற்கு 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது உறுதியாகத் தெரிகின்றது. ஆயினும் இவ்வாய்வுக் குழியில் இயற்கை மண்ணை அடையாளம் காணும் வரை தொடர்ந்து அகழ்வாய்வு நடத்தப்படாததால் அவ்வாய்வுக் குழியில் இருந்திருக்கக் கூடிய தொன்மையான ஆதாரங்களை வெளிக்கொண்டுவர முடியவில்லை. 

இரண்டாவது அகழ்வாய்வு கோட்டையின் உட்பகுதியில் ஆயுதக் களஞ்சிய அறைக்கு முன்னால் நடாத்தப்பட்டது. தொல்லியல் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கலாநிதி நிமல் பெரேரா தலைமையில் நடாத்தப்பட்ட இவ்வகழ்வாய்வில் 6 X 6 அடி நீள அகலத்தில் இயற்கை மண்ணை அடையாளம் காணும் வரை அகழ்வு நடாத்தப்பட்டது. இவ்வகழ்வாய்வின் முழுமையான பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாவிட்டாலும் இவ்வகழ்வாய்வுக்கு பொறுப்பாக இருந்த தொல்லியல் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கலாநிதி. நிமல் பெரேரா பத்திரிகைகளுக்கு வழங்கிய செய்திக் குறிப்பில் இவ்வகழ்வாய்வுக் குழியில் கிடைத்த தொடக்க கால ஆதாரங்கள் கி.பி 5 ஆம் நூற்றாண்டை அதாவது போர்த்துக்கீசர் யாழ்ப்பாணம் வருவதற்கு 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். 

தொடக்க-கால-ஆதாரங்கள்

மூன்றாவது அகழ்வாய்வு ஐரோப்பியப் படை வீரர்கள் தங்கியிருந்த கட்டடத்திற்கு முன்னால் நடாத்தப்பட்டது. இவ்வகழ்வாய்வு முன்கூட்டியே திட்டமிடப்பட்டதல்ல. இவ்விடத்தில் பிற தேவைக்காக 6 x 6 அடி நீள அகலத்தில் 7 அடி ஆழம் வரை குழி ஒன்று வெட்டிய போது வெளிவந்த அரிய தொல்லியல் சின்னங்கள் பின்னர் அவ்விடத்தில் அகழ்வாய்வு செய்ய காரணமாக அமைந்தன. இக்குழியில் கலாசார மண் அடுக்குகள் குழம்பிய நிலையில் காணப்பட்டாலும் இவற்றிடையே காணப்பட்ட ஆதாரங்கள் பூர்வீக குடியிருப்புக்களைத் தொடர்ந்து உரோமர், அரேபியர், சோழர், சீனர் யாழ்ப்பாண இராசதானி மற்றும் ஐரோப்பியர் காலத்திற்கு உரியவை என்பதை உறுதிப்படுத்த உதவியுள்ளது.

நான்காவது அகழ்வாய்வு இவ்வாய்வுக்குழிக்கு அருகே 2017ஆண்டின் பிற்பகுதியில் மத்திய கலாசார நிதிய யாழ்ப்பாண செயல்  திட்டத்தின்  அனுசரணையுடன், பிரித்தானிய டர்காம் (Durham) பல்கலைக்கழகமும் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் பிரிவும் இணைந்து மேற்கொண்டிருந்தது. இவ்வகழ்வாய்வு சமகால தொல்லியல் அறிஞர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான பேராசிரியர் கொனிகாம் வழிகாட்டலில் நடைபெற்றமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இதன்போது  நவீன தொழில் நுட்பக்கருவிகளைப் பயன்படுத்தி விஞ்ஞானபூர்வமாக அகழ்வு மேற்கொள்ளப்பட்டதால்  இங்கு கிடைத்த தொல்பொருட்  சின்னங்களின் காலம், அவற்றின் வரலாற்று முக்கியத்துவம் தொடர்பான கணிப்பீடுகள் நம்பகத்தன்மை வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. இவ்வாய்வுக் குழியில் இயற்கை மண்படைவரை  மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் ஒன்பது வேறுபட்ட கலாசார மண் அடுக்குகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றுள் இயற்கை மண்ணோடு ஒட்டிய கலாசார மண் அடுக்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்காலப்பண்பாட்டிற்குரிய கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் (Black and Redware) கி.மு.700க்கும் கி.பி.100 நூற்றாண்டுக்கும், நரைநிற மட்பாண்டங்கள் (Grey ware) கி.மு. 500க்கும் கி.பி.200க்கும் இடைப்பட்டதெனவும் கணிப்பிடப்பட்டுள்ளன. இக்காலக்கணிப்புகள் போர்த்துக்கேயர் வருகைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னரே கோட்டைப் பிரதேசம் முக்கியமான குடியிருப்புகளைக் கொண்ட பிரதேசமாக இருந்துள்ளதை உறுதி செய்கின்றன. 

கோட்டையில்-மேற்கொள்ளப்பட்ட-அகழ்வாய்வில்-கிடைக்கப்பெற்ற-ஆதாரங்கள்

மேலும் இவ்வகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு காலகட்டத்திற்குரிய தொல்பொருட்  சின்னங்கள் ஐரோப்பியர் வருகைக்கு முற்பட்ட கோட்டைப் பிரதேசத்தின் தொன்மையான, தொடர்ச்சியான வரலாற்றைத் தெரிந்து கொள்ளப் பெரிதும் உதவுகின்றன. அவற்றுள் பல்வேறு காலத்தை சேர்ந்த பல நாடுகளுக்குரிய பலவகை மட்பாண்டங்கள் கிடைத்திருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவ்வாதாரங்கள் போர்த்துக்கேயர் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தற்போதைய யாழ்ப்பாண நகரம் தோன்றி வளர்ந்த வரலாற்றைக் கால அடிப்படையில் உறுதிப்படுத்த உதவுகின்றன. பேராசிரியர் கொனிங்காம் அகழ்வாய்வில் கிடைத்த மட்பாண்டங்களை முக்கியமான ஆதாரமாகக் கொண்டு கோட்டைப் பிரதேசத்துடன் கடசார் வாணிபத்தில் ஈடுபட்ட நாடுகளையும், அவற்றின் காலங்களையும் கணித்துள்ளார். அவற்றுள் இந்திய Northern Black Polished Ware (500 BC to 100BC), உரோமநாட்டு Rouletted Ware (200 BC to 200AD), தமிழக  Arikkamdu Type – 10 (200 BC to 200AD), Arikkamdu Type – 18 (300 BC to 200AD), உரோம கிரேக்க நாடுகளின் செல்வாக்கிற்கு உட்பட்ட Omphalos Ware (200 BC to 100AD), உரோம நாட்டு Arretine Ware (100 BC to 100AD), Amphora (200 BC to 100AD), இந்திய Red Polished Ware (100 BC to 800AD), தமிழகத்திலும் இலங்கையிலும் பயன்பாட்டிலிருந்த Wite Slipped with Red Paint (600 AD to 1100AD), Appliqué Ware (1300 AD to 1400AD), ஈரான் ஈராக் நாடுகளுக்குரிய Sasanian Islamic Ware (200 BC to 700AD), Buff Ware(400 AD to 800AD), Lustre Ware (800 AD to 1000AD), Imitation Lustre Ware (800 AD to 1000AD), Wite Tin-Glazed Ware (800 AD to 1000AD), Lead- Glazed Ware(800 AD to 1000AD)மற்றும் சீன நாட்டுக்குரிய  Changsa Painted Ware (800 AD to 900AD), Xing Ding Wite Wares (800 AD to 1000AD), Yue green Ware (800 AD to 1000AD), Coarse Stone Ware(700 AD to 1100AD), Green Splashed Wite Ware (800 AD to 1000AD), Chinese Porcelain (1400 AD to 1700AD) முதலான நாடுகளுக்குரிய மட்பாண்டங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. 

. Jaffna Fort Artifacts and There Periods

மேற்கூறப்பட்ட அகழ்வாய்வைத் தவிர 1995 இற்கு முன்னர் கோட்டையை மையப்படுத்தி நடந்த போரில் பெரிதும் அழிவடைந்த கோட்டையின் உட்பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வின் பெறுபேறுகள் இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.  வெளித்தோற்றத்தில் காணப்படும் அரண்கள், பீரங்கித் தளங்கள் முழுமையாக கோட்டையின் அடையாளமாக இருப்பினும் கோட்டையின் உட்பகுதியில் 35 ஏக்கரில் அமைந்திருந்த கிறிஸ்தவ தேவாலயம், போர் வீரர்களுக்கு, நிர்வாக அதிகாரிகளுக்கு அமைக்கப்பட்ட கல்லறைகள், நினைவிடங்கள், இராணி மாளிகை, படை வீரர் தங்கியிருந்த இடங்கள், நிர்வாக அலுவலகங்கள், சிறைச்சாலைகள், ஆயுதக் களஞ்சியங்கள், பாதுகாப்பு அரண்கள் என்பன பெருமளவுக்கு அழிவடைந்த நிலையில் காணப்பட்டன. இந்நிலையில் 2010 இல் இருந்து இக்கோட்டை மீள் புனரமைப்பு செய்வதற்காக புதையுண்டிருந்த கட்டட அழிபாடுகள் அகற்றப்பட்டு அவ்விடங்களில் களவாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வின் போது ஐரோப்பியர் கால கட்டிட எச்சங்கள், பலவகை மட்பாண்டங்கள், நாணயங்கள் என்பவற்றுடன் ஐரோப்பியர் ஆட்சிக்கு முற்பட்ட கால உள்நாட்டு வெளிநாட்டு மட்பாண்டங்கள், பலவகை நாணயங்கள், சிலைகள், சிற்பங்கள், ஆலயங்களின் கட்டட எச்சங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆதாரங்கள் கோட்டை அமைந்துள்ள இடத்துக்கு 2000 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு உண்டு என்பதை கோடிட்டுக் காட்டுகின்றன. 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

18642 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (18)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)