Arts
8 நிமிட வாசிப்பு

வாழ்க்கையின் வெற்றிக்கு பல வருமான வழிகளை உருவாக்குவதன் முக்கியத்துவம்

May 26, 2023 | Ezhuna

திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில், புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற கட்டுரையாளரது பட்டறிவின் மொழிதலே இது. ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை’ என்ற இக்கட்டுரைத்தொடர் உலகில் மிகப்பிரபலமான தொழில் நுட்பதாரிகளைப்பற்றியும் அவர்களது ஆரம்ப நிலை தொழில் நிறுவனங்களை (Startup Companies) அமைக்கும் போது எதிர் கொண்ட சில முக்கியமான நுணுக்கங்களை (Nuances)  அடிப்படையாகக் கொண்டும், கட்டுரையாளரின் வணிகரீதியான சாதிப்பு அனுபவங்களைப் பகிர்வதாக அமைகிறது.

“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை” திருக்குறள் (512)

மு. கருணாநிதி விளக்கம்

வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்.

உலகில் பெரும் கோடீஸ்வரர்களைப் பார்த்தால் அவர்கள் தங்களது செல்வத்தை ஒரு தொழிலின் மூலமாக மட்டும் சேர்த்தவர்கள் அல்லர். அவர்கள் முதலில் பணத்தை ஏதேனும் ஒரு தொழிற்றுறை மூலம் உழைத்திருந்தாலும், அவ்வாறு உழைத்துச் சேர்த்த பணத்தை வேறுவகையான புதிய வியாபாரங்களிலும், முதலீடுகளிலும் முதலிட்டு தங்களது செல்வத்தைப் பன்மடங்காக்கினார்கள். இன்று ஐக்கிய அமெரிக்காவில் மிகப்பெரிய நில உரிமையாளர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஆரம்பித்த பில்கேட்ஸ் தானென்று உலகில் பலருக்கும் தெரியாது. அதேபோல இந்தியாவின் முன்னிலைப்பணக்காரர்களும் இவ்விதமே வெவ்வேறு தொழில் முயற்சிகள் மூலமே செல்வந்தர்களாக உயர்ந்தார்கள் என்பதை அறியமுடியும்.

எமது தாயகமான ஈழத்தில் இயற்கை வளங்கள், கடல், நிலம், காடு, மழை என இயற்கையின் கொடைகள் தாராளமாகவே இருக்கின்றன. எனினும் பெற்றோலியம், விலைமதிப்பற்ற உலோகங்கள் போன்றன மிகமிக அரிதாகவே உள்ளன. அப்படியிருந்தும் எம்மூதாதையார் இந்த நிலத்தை காலத்திற்கேற்ற விவசாயம் செய்து வளமாக்கினார்கள். அது மட்டுமன்றி விவசாயம் செய்ய முடியாத காலங்களில் இலங்கையின்  தெற்கு மற்றும் மத்திய இடங்களுக்கு சென்று வியாபாரம் போன்ற தொழில் முயற்சிகளில் ஈடுபட்டார்கள். அதன் மூலம் உழைத்த பணத்தை வைத்து கல்லூரிகளும், ஆலயங்களும் அமைத்தார்கள். எனது சிறுவயதில் நான் முல்லைத்தீவின் முள்ளியவளைப் பகுதிக்கு பள்ளி விடுமுறைக்கு எனது மாமாவின் தோட்டத்துக்குப் போனது ஓர் இன்பமான காலம். எனது மாமா அங்கு அரசாங்கப்  பாடசாலையில் ஆசிரியராக இருந்தார். அவர் ஆசிரியர் மட்டுமன்றி  ஒரு  சுயதொழிலதிபராகவும்  இருக்க விரும்பியவர். அதனால் அவர் ஒரு பெரிய நிலத்தை  வாங்கி, அதிலிருந்த காட்டைத் துப்புரவாக்கி பெரும்தோட்டம் செய்தார். நான் போயிருந்த போது அங்கு வேர்க்கடலை விதைத்து அந்த தோட்டம் பச்சைப்பசேலென்று இருந்தது. அதன் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து எனது மாமா  ஒரு கார் கூட வாங்கி வைத்திருந்தார். அவரது ஆசிரியர் சம்பளத்தில் கார் வாங்குவதென்பதையோ வசதியாக வாழ்வதென்பதையோ கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாது. ஆனால் அவரது கனவை இன்னொரு தொழில் முயற்சி நனவாக்கி வைத்தது.

இப்போதைய சமுதாயத்தைப் பார்த்தால் ஓர் அரசாங்க வேலை அல்லது தனியார் நிறுவன வேலை என இவற்றில் ஒன்றை மட்டுமே செய்து வருகிறார்கள். அதன் மூலம்  கிடைக்கும் வருமானம் குடும்பச் செலவிற்கே போதாது. அதனால் பிள்ளைகளை கல்விகற்க வைக்கவோ பின்பு கல்யாணம் செய்து வைக்கவோ வங்கியிலேயோ அல்லது மற்றவர்களிடமோ கைநீட்டி நிற்க வேண்டியிருக்கிறது. அதற்குத்தான் பல்வேறு வருமான வழிகளை உண்டாக்குவது முக்கியம். அதற்கான சில வழி முறைகளை இங்கு பகிர்கிறேன்.

  • வேலை வருமானம் : முதலாவதாக எல்லோரும் தங்கள் கல்வியறிவுக்கேற்ற ஒரு வேலையில் இணைந்து, அதற்குத் தேவையான நேரங்களையும் முயற்சிகளையும் கொடுத்து வினைத்திறனாகத் தமது பணிகளைச் செய்ய வேண்டும். பள்ளி ஆசிரியராக இருக்கலாம், வங்கியில் வேலை செய்பவராக இருக்கலாம், தனியாக கடை வைத்திருப்பவராக இருக்கலாம், எவராயினும் இத்தகைய நிரந்தர வருமான வழியொன்றை உருவாக்கி, தமது குடும்பப் பொருளாதாரத்தின் அத்திபாரத்தைப் பலமாக இடவேண்டும். எனது சிறு  வயதில், எனது தந்தையார் எமது கிராமத்தில் பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வந்த அதேசமயத்தில்  உப தபால் அதிபராகவும் இருந்தார். தபால் உப அதிபர் என்ற உத்தியோகத்தின் மூலம் நிரந்தரவருமானமும், கடைமூலம் உப வருமானமும் எமது குடும்பத்துக்கு கிடைத்தது.
  • பக்க வருமானம் : பக்க வருமானமானது முதல் வேலை செய்த காலங்களைத் தவிர, மீதமான நேரத்தைப் பயன்படுத்தி பணம் உழைப்பதாகும். இதற்கு பல முறைகளை அனுசரிக்கலாம். இப்போது ஆசிரியர்களையும் வைத்திய நிபுணர்களையும் பார்த்தால் அவர்கள் தங்கள் துறைகளிலேயே அரசபணியிலும், அந்தக் கடமை நேரம் முடிந்தபின்னர் தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்த்து மேலும் பணம் உழைக்கிறார்கள். இதேபோன்று ஏனைய தொழில்களில் உள்ளவர்களும் தமது பிரதான பணிநேரத்தை விட, மேலதிகமாகக் கிடைக்கும் நேரத்தில் வேறு வேலைகள் செய்யலாம். உதாரணமாக காணிகளை மேம்படுத்தி விவசாயம் செய்யலாம். இதன் மூலம் தொடர்ந்து உழைப்பு இல்லாவிட்டாலும் அறுவடைக் காலத்தில் வருமானம் கிடைப்பதுடன், விவசாயத்திலிருந்து வரும் அறுவடை மூலதனம் குடும்பத்தின் வாழ்வாதாரச் செலவை பெருமளவு குறைக்கலாம்.
  • முதலீட்டு வருமானம் :  உழைக்கும் வருமானத்தை முழுவதுமாகச் செலவிடாமல் முதலீடு செய்வதன் மூலம் செயலற்ற வருமானம் (Passive Income) செய்யமுடியும். இதற்கு நிறையப் பணம் தேவையில்லை. ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையைச் சேமிப்பதன் மூலமும், அதை முதலீடு செய்வதன் மூலமும் சேமிப்பை இன்னும் கூட்டலாம். இதற்கு கூட்டுத் திரும்புதல் (Compound return) என்று பெயருண்டு. உதாரணமாக ஒரு இலட்சம் ரூபாவை இருபது வீதம் வருடாந்தத் திருப்பத்துடன் முதலிட்டால் இருபது வருடத்தில் அது 26 இலட்சமாகப் பெருகும். அது மட்டுமன்றி தொடர்ந்து மேலும் சிறிய அளவு பணம் மாதாந்தம் அல்லது வருடாந்தம் முதலிட்டால் சேமிப்பு அதற்கு மேலே வரும்.
  • வாடகை வருமானம் : இப்போது வாடகை வருமானத்துக்கு  வெளிநாடுகளில்  அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. வேலை செய்பவர்கள் சேமித்த பணத்தை வைத்தும் மற்றும் வீட்டுக் கடன் (Home mortgage) எடுத்தும் இரண்டாவது வீட்டை வாங்கி வாடகைக்கு கொடுத்து பணம் உழைப்பார்கள். இதன் மூலம் மாதாமாதம் வருமானம் வருவதுடன் வீட்டின் பெறுமதியும் அதிகரிக்கும். அதன் மூலம் அவர்களின் செல்வம் மேலும் அதிகரிக்கும்.
  • மற்றவர்களில் முதலிடுதல் : மற்றவர்களிடம் முதலிடுதல் என்பது, இன்னொருவரின் எண்ணத்துக்கு செயலுருவம் கொடுப்பதற்காகச் செய்யப்படும் முதலீடாகும். ஒருவரிடம்  பணம் உழைப்பதற்காக புதியதான நல்ல யோசனைகள் இருக்கும். ஆனால் அவர்களின்  கனவைச் செயற்படுத்த பெரும் முதலீடு தேவைப்படும். அவ்வாறான பிறரின் சிறந்த தொழில்முயற்சி எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் திட்டங்களில்  முதலிடுவதன் மூலம் ஒருவர் தான் நேரடியாக வேலை செய்யாமல் பணம் உழைக்க முடியும். இது ஆபத்துக் கூடிய முதலீடு தான். ஆனால் திரும்பல் வீதம் அதிகமாக இருக்கும். இதற்கு சிறிய பங்கான பணத்தை முதலிடுவதன் மூலம் ஆபத்தைக் குறைத்து, அவர்கள் வெற்றி பெறும் போது திரும்பலைக் கூட்டலாம். எனது இரண்டு ஆரம்ப நிறுவனங்களிலும் இப்படியான முதலீட்டாளர்களைச் சேர்த்ததன் மூலம் எமது வியாபாரத்தை விரிவாக்க முடிந்தது. அப்படி எங்களுடன் ஆரம்ப நேரத்தில் பங்குபற்றியவர்கள் தங்கள் முதலீட்டை பத்து மடங்கு  அதிகம் பெற்றார்கள். இதனால் இப்படியான முதலீட்டை “பெரிய ஆபத்து பெரிய திரும்பல்” (High Risk, High Return) என்று கூறுவார்கள்.

இங்கு சொல்லப்பட்ட பல்வேறு வழிகளிலான தொழில்முயற்சிகளை எப்படித் தொடங்குவது, என்னிடம் இன்று வாழவே பணமில்லை அப்படியிருக்க எப்படி எதிர்காலத்தை சிந்திப்பதென்று சிலர் யோசிப்பார்கள். இது சுலபமான வேலையில்லைத்தான். ஆனால் திட்டமிட்டு எதிர்காலத்தை யோசித்து நிகழ்காலத்தில் சில ஆடம்பரங்களைக் குறைத்து, சேமிப்பை அதிகரிப்பதன்  மூலம் இலக்கை அடையமுடியும். இந்த நிலையை அடைய  சில நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும். அவையாவன:

  • வருமானத்துக்கு மேலே செலவிடுவது.
  • வருமானத்தில் அவசர நிதி சேர்த்து வைக்காமல் விடுவது (குறைந்தபட்சம் 6 மாத செலவுக்குத் தேவையான பணத்தைச் சேமிப்பில் – அவசர நிதியில் – வைத்திருக்க வேண்டும்).
  • எப்போதும் விலை கூடிய சமீபத்திய பொருட்களை கூடிய பணம் கொடுத்து வாங்குவது.
  • தன்னால் செய்யக்கூடிய சின்ன வேலைகளுக்குக்கூட மற்றவர்களைப் பணிக்கு அமர்த்துவது.
  • யோசனையின்றி அடிக்கடி விடுமுறை மற்றும் பயணம் புரிவது.
  • அடிப்படைக் கைவினைகளை சின்ன வயதில் செய்து பழகாதது.

இந்த உலகில் வருமானம் என்பது, ஒரு வேலையைச் செய்வதன் மூலம் மட்டுமே கிடைக்குமென்று சிந்திப்பது மிக்க தவறு. இங்கு மகிழ்வான, வசதிகள் நிறைந்த வாழ்வியலுக்கு பலமுனைகளிலான வருமான வழிகளை உருவாக்க வேண்டும். பில்கேட்ஸ் தொடக்கம் இந்தியாவின் ரத்தன் டாடா வரை பல வருமான வழிகளை உருவாக்கியே கோடீஸ்வரரானார்கள். நாங்கள் கோடீஸ்வரராக ஆகாவிட்டாலும் எங்கள் குடும்பங்களை மற்றவர்களிடம் கைநீட்டி கடன் வாங்காமல்  வாழவைக்கவேண்டும். சிறுவயதிலேயே இதற்கான விதையைப் போட்டு பல  தொழிற்கலைகளைப் பழகி வளர்வதன்மூலம் பிற்காலத்தில் வெற்றிகரமாக வாழலாம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7436 பார்வைகள்

About the Author

கணபதிப்பிள்ளை ரூபன்

கந்தரூபன் (ரூபன்) கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ் மாவட்டத்தின் புலோலியைச் சேர்ந்தவர். போர் காரணமாக ஆபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பின் அங்கிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று இளமாணி, முதுமாணிப் பட்டங்களை இயந்திரவியலில் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களில் பல புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி பல கோடி டொலருக்கு விற்றுள்ளார். மேலும் இவர் “Accidental Entrepeneur by Ruban” என்ற தலைப்பில் நூற்றிற்கு மேற்பட்ட கட்டுரைகளை தன்னுடைய அனுபவங்களை உள்ளடக்கி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)