Arts
15 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணக் கோட்டையின் அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகள் – ஒரு புதிய பார்வை – பகுதி 3

June 23, 2023 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

கோட்டைக்குள் மறைந்து காணப்பட்ட ஆலயங்களின் அழிபாடுகள்

கோட்டை மீள் புனரமைப்பு பணிகளின் போது கிடைத்து வரும் வரலாற்றுப் பெறுமதி மிக்க ஆதாரங்களுள் 16 ஆம் நூற்றாண்டில் தற்போதைய கோட்டை கட்டப்படுவதற்கு முன்னர் வழிபாட்டிலிருந்த இந்து ஆலயங்களின் அழிபாடுகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. இந்தக் கோட்டையைக் கட்டுவதற்கு கோட்டைக்கு அயலில் உள்ள தீவுகளிலும், கடலிலிருந்து கொண்டுவரப்பட்ட கோறல் கற்கள் பயன்படுத்தியதை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கால ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் கோறல் கற்களுடன் எந்தவித அளவுப் பிரமாணமம் இன்றி ஏற்கனவே பிற கட்டடங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட கருங்கள் மற்றும் சுண்ணாம்புக் கற்றூண்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதைக் காணமுடிகின்றது. இக்கற்கள் இந்து ஆலயங்களுக்குரியவை என்பதை அக்கற்களின் வடிவமைப்புக்களும் அவற்றில் செதுக்கப்பட்டுள்ள கலைவடிவங்களும் உறுதிசெய்கின்றன. அக்கற்கள் காணப்படும் இடங்களுள் போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு ஒல்லாந்தரால் மீள்ளுருவாக்கம் செய்யப்பட்ட கிறிஸ்தவ ஆலயத்தின் அழிபாடுகளிடையே கிடைத்த கற்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.

JAFFNA-FORT-HOLLY-CROSS

1730 இல் ஒல்லாந்தர் ஆட்சியில் மீளக் கட்டிமுடிக்கப்பட்ட இவ்வாலயத்தின் அமைப்பு சிலுவை போன்ற வடிவத்தில் அமைந்திருந்தது. ஏறத்தாழ 600 அடி சுற்றளவு கொண்ட இவ்வாலயத்தில் 50 அடி அகலமான இரு வாயில்கள் இருந்துள்ளன. வெளியில் சிறிதாக தோற்றமளித்த இவ்வாலயத்தின் உள்ளே மிக அலங்காரமான ஒல்லாந்தர்கால கலை மரபில் அமைந்த போதனைமண்டபமும், கலையரங்கும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இங்கு ஒல்லாந்தர் காலத் தேவாலய மணியோடு போர்த்துக்கேய மணியும் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.மேலும் இவ்வாலயத்தில் பல்வேறு காலகட்டத்திற்குரிய கல்லறைகளும் போர்த்துக்கேயக் கல்லறைகளும், போர்த்துக்கேய ஒல்லாந்து, ஆங்கிலேய கால போர் வீரர்கள், உயர் அதிகாரிகள் என்போருக்காக எழுப்பப்பட்ட நினைவுக் கற்களும், சாசனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆதாரங்கள் போர்த்துக்கேயர் கட்டிய கத்தோலிக்க தேவாலயத்தையே பின்னர் ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் புரட்டஸ்தாந்து தேவாலயமாக மாற்றினர் என்பதை உறுதி செய்கின்றன. ஆயினும் தற்போது இவ்வாலயத்தின் முழுமையான அமைப்பையோ அல்லது அவற்றின் தொழில்நுட்பக் கலை மரபினையோ தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவ்வாலயம் முற்றாக அழிவுண்டு கல் மேடாகக் காட்சியளிக்கின்றது. 

இவ்வாலய அழிபாடுகளிடையே கிடைத்த சான்றுகளைக் கொண்டு முருகைக்கல், செங்கட்டி, சுதை என்பவற்றைப் பயன்படுத்தி இவ்வாலயத்தைக் கட்டியுள்ளனர் என்பது தெரிகின்றது. ஆயினும் இவ்வாலயக் கட்டடக் கலைமரபுக்கு பொருந்தாத வகையில் சில கருங்கற் தூண்களும், சுண்ணாம்புக் கற்றூண்களும் இங்கு காணப்படுகின்றன. இவை அழிவடைந்த ஆலயத்தின் மேற்படையில் கண்டுபிடிக்கப்பட்டவையாகும். இந்த அழிபாடு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுமானால் மேலும் பல கற்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இங்கு கிடைத்த கற்களில் கருங்கல் மற்றும் முருகைக் கற்றூண்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. அதில் இரு கருங்கற்றூண்களும் இந்து ஆலயத்தின் கற்பக்கிருகம் அல்லது முன் மண்டபத்திற்குப் பயன்படுத்தப்பட்ட தூணாக இருக்கலாம். சற்சதுர வடிவில் நன்கு பொழிந்து வெட்டப்பட்ட தூண்களின் நடுப் பாகத்தில் தாமரைப் “பூ” வடிவம் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு கருங்கற்றூணின் மேற்பாகத்தில் காணப்படும் தாமரை வடிவம் திராவிடக் கலை மரபிற்குரிய போதிகை வடிவமாகக் காணப்படுகின்றது. மற்றைய தூண் சுண்ணக் கல்லால் ஆனது. ஏறத்தாழ ஐந்து அடி நீளமும்  1 ½ அகலமும் கொண்ட இத்தூண் பலகை போன்ற வடிவில் நன்கு பொழியப்பட்டுள்ளது. இத்தூண் ஆலய முகப்பின் வாசல் படியின் அல்லது கபோதத்திற்கு மேல் வைக்கப்பட்ட கற்பலகையாக இருக்கலாம். 

ஆலயங்களுக்குரிய கற்கள் பயன்படுத்திய இன்னொரு இடம் மீள்புனரமைப்புக்கு உட்படுத்தப்பட்ட கோட்டையின் வாசல் பகுதியாகும். சுரங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ள நீண்ட பாதையின் கூரை கோறல் கற்களைப் பயன்படுத்தி பிறை வடிவில் கட்டப்பட்ட போதும் அதன் கீழ்த்தள வாசல் பகுதி ஆலயங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள கருங்கல் மற்றும் சுண்ணாம்பு கற்றூண்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட இத்தூண்களின் அளவு,வடிவமைப்பு, அலங்காரம் என்பவற்றின் ஒழுங்கற்ற தன்மைகள் இக்கற்கள் கோட்டை கட்டப்படுவதற்கு முன்னர் வேறுபட்ட கலை மரபுகளில் ஆலயங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டவை என்பதை நன்கு உறுதிப்படுத்துகின்றன. 

கோட்டையின் மேல் தளத்திலுள்ள பீரங்கித் தளங்களின் சுவர்கள் குறிப்பிட்ட அளவுகளில் வடிவமைக்கப்பட்ட கோறல் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. ஆயினும் பீரங்கிகள் பொருத்தப்பட்ட இடங்களை அமைப்பதற்கு, ஆலயங்களுக்குரிய வைரமான தூண்களும் பிற கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. இப்பீரங்கித் தளங்களில் பீரங்கிகள் பொருத்துவதற்கு அமைக்கப்பட்ட வாசல் பகுதிகள் மீள் கட்டுமானத்திற்காக அகழப்பட்ட போது அதன் கீழ்ப் பகுதிகளிலும் மேல் பகுதிகளிலும் கோறல் கற்களோடு சுண்ணக்கல் மற்றும் கருங்கல் தூண்களும் பயன்படுத்திக் கட்டப்பட்டதற்கான ஆதாரங்களைக் காணமுடிந்தது. அவற்றில் இரு சுண்ணக் கற்றூண்கள் நடுவில் சற்சதுரமாக வெட்டப்பட்டு ஒரு பக்கத்தில் ஒரு துவாரமும் மறு பக்கத்தில் இரு துவாரமும் இடப்பட்டு இருபக்க நுனிப்பாகங்களும் அலங்காரமாகச் செதுக்கப்பட்டுள்ளன. அலங்காரமாகச் செதுக்கப்பட்ட இத்தூண்களில் காணப்படும் துவாரங்கள் இரு தூண்களை ஒன்றாகப்பொருத்தி முன்னர் வேறொரு கட்டடத்திற்கு பயன்படுத்தப்பட்ட தூண்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. 

மேலும் சுடுதளங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சுண்ணக்கற்கள் வளைவாக வெட்டப்பட்டு அவை பிற கற்களுடன் பொருத்திக் கட்டும் வகையில் அவற்றின் உட் பாகம் மூன்று படிகள் கொண்டதாகச் செதுக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு பயன்படுத்தப்பட்ட இக்கற்கள் தூணின் மேற்புறத்தில் பலகைக்கு மிண்டு போல் அமைந்துள்ள வளைவான கொடுங்கையாக இருக்கலாம். இந்தச்சுடுதளங்களில் சற்சதுர வடிவில் நடுவில் பள்ளமாக அமைந்த கருங்கற் பலகைகள் பல காணப்படுகின்றன. அவற்றுள் மிகப் பெரிய கருங்கல்லின் நடுப்பகுதியில் பள்ளமிடப்பட்ட கருங்கல் ஒன்று கிடைத்துள்ளது. இக்கல் கர்ப்பக்கிருகத்தில் இருந்த ஆவுடையாக அல்லது தெய்வச்சிலை வைக்கப் பயன்படுத்திய பீடமாக எடுத்துக்கொள்ள இடமுண்டு. 

மேற்கூறப்பட்ட கற்களும் கற்தூண்களும் இந்து ஆலயங்களுக்குரியவை என்பதில் ஐயமில்லை. 16 ஆம் நூற்றாண்டிலிருந்து யாழ்ப்பாணக் கோட்டை அந்நியரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததால் கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து மதங்களை முன்னிலைப்படுத்திய அந்நியர் ஆட்சியில் கோட்டைக்குள் இந்து ஆலயங்கள் கட்டியிருக்க வாய்ப்பில்லை. இதனால் இவ்வாலயக் கற்கள் 16 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட ஆலயங்களுக்குரிய கற்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவ்வாலயங்கள் போர்த்துக்கேயர் வருகைக்கு முன்னர் கோட்டை இருந்த இடத்தில் கட்டப்பட்டிருந்தவையா அல்லது கோட்டைக்கு வெளியே கட்டப்பட்டிருந்தவையா என்பது ஆய்வுக்குரிய விடயமாகும். 

16 ஆம் நூற்றாண்டிலிருந்து யாழ்ப்பாணத்தில் மேலாதிக்கம் செலுத்திய போர்த்துக்கேயரும் பின் வந்த ஒல்லாந்தரும் தமது கத்தோலிக்க புரட்டஸ்தாந்து மதங்களைப் பரப்புவதற்காக சுதேச மதங்களுக்கு எதிரான கலை அழிவுக் கொள்கையைக் கடைப்பிடித்தனர். இதனால் இந்து ஆலயங்கள் மட்டுமன்றி அவர்களின் இருப்பிடங்களும் அழிக்கப்பட்டன. போர்த்துக்கேயர் தமது ஆட்சியில் யாழ்ப்பாணத்திலிருந்த சிறிதும் பெரிதுமான 500 மேற்பட்ட இந்து ஆலயங்களை அழித்தாக தமது நூலில் குறிப்பிட்டுள்ளனர். 1619 இல் நல்லூரை வெற்றி கொண்ட போர்த்துக்கேயப் படை வீரர்கள் அங்கிருந்த பெரிய ஆலயத்தை தமது பாதுகாப்பு மையமாகவும், நிர்வாக மையமாகவும் பயன்படுத்திவிட்டு பின்னர் அவ்வாலயத்தை அழித்ததாகவும் கூறியுள்ளனர். அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயக் கற்களைப் பயன்படுத்தியே கிறிஸ்தவ ஆலயங்களையும், கோட்டைகளையும் கட்டியதாகத் தெரிகின்றது. இதனால் யாழ்ப்பாணக் கோட்டையில் காணப்படும் கற்களை யாழ்ப்பாண அரசு காலத்திலிருந்த இந்து ஆலயங்களுக்குரிய கற்களாகக் கருதமுடியும். ஆயினும் தற்போது கோட்டையில் கிடைத்து வரும் ஆதாரங்கள் கிறிஸ்தவ சகாப்த காலத்திலிருந்து இவ்விடம் குடியிருப்பு மையமாகவும், வணிக நகரமாகவும் இருந்துள்ளதை உறுதிசெய்துள்ளதால் இப்பிரதேசத்திலும் போர்த்துக்கேயர் வருகைக்கு முன்னர் இந்து ஆலயங்கள் இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது. இதை எதிர்கால ஆய்வுகளே உறுதி செய்யவேண்டும்.

OLD-FORT

யாழ்ப்பாணக்கோட்டை தோன்றிய வரலாற்றுப் பின்னணி

தற்காலத்தில் கீழைத்தேய நாடுகளிலுள்ள பெரும்பாலான கோட்டைகள் கி.பி 16 ஆம் நூற்றாண்டிலிருந்து வர்த்க நோக்கோடு வந்த போர்த்துக்கேயர், பின்வந்த ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டவையாகும். ஆனால் உலகில் நாகரிக உருவாக்கம் நிகழ்ந்த காலத்திலிருந்து ஆட்சியாளரையும், அரச வம்சத்தையும் பாதுகாக்கும் நோக்கில் பல அளவுகளிலும், பல வடிவங்களிலும் கோட்டைகள் கட்டப்பட்டதற்கு ஆதாரங்கள் உண்டு. இவற்றைக் குறிக்கும் பெயர்கள் அந்தந்த நாடுகளின் மொழி வழக்கிற்கு ஏற்ப பல பெயர் கொண்டு அழைக்கப்பட்டன. தென்னாசியாவில் தொடக்க கால கோட்டைகள் சிந்துவெளி நாகரிகத்திலும்,வேதகால நாகரிகத்திலும் இருந்ததற்கு தொல்லியல், இலக்கிய ஆதாரங்கள் உண்டு. தமிழகத்தில் சங்க காலம் தொட்டு கோட்டைகள் பற்றிய செய்திகள் இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன. சோழர் ஆட்சியில் அரசர்கள் கட்டிய ஆலயங்களையே அவர்களின் அரண்மனையாகவும், பாதுகாப்பு அரணாகவும், கோட்டையாகவும் பயன்படுத்தியமை தொல்லியல் ஆய்வுகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழில் கோட்டை என்ற சொல்லுக்கு மதிலரண், காடு, பரிவேடம், வீட்டின் உட்புறம் எனப் பொருள் காணப்படுகின்றது. யாழ்ப்பாணப் பேரகராதியில் கோட்டைப் போர் என்பதற்கு வைக்கற் போர் எனப் பொருள் காணப்படுகின்றது. தற்காலத்தில் இலங்கையிலுள்ள கோட்டைகளில் பெரும்பாலானவை போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு பின்னர் அவை ஒல்லாந்தர் ஆட்சியில் அவர்களின் கலை மரபில் மாற்றி வடிவமைக்கப்பட்டு பிரித்தானியர் ஆட்சியில் சிறிய மாற்றங்களுக்குள்ளாகின. இந்தக்கோட்டைகள் தென்னிலங்கையில் கொழும்பு, காலி, மாத்தறை, கற்பிட்டி முதலான இடங்களிலும், வட இலங்கையில் யாழ்ப்பாணம், மன்னார், பூநகரி, இயக்கச்சி, ஆனையிறவு, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றன. போர்த்துக்கேயர் ஆட்சியிலிருந்து இந்தக்கோட்டைகள் மிகப் பெரிய அரண்கள், அகழிகள், பீரங்கித்தளங்கள் கொண்டு அமைக்கப்பட்டாலும் கி. மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்தே மிகச் சிறிய அளவிலான கோட்டைகள் இலங்கையில் பயன்பாட்டிலிருந்ததற்கான ஆதாரங்கள் இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன.

INSCRIPT

கி.மு 2ஆம் நூற்றாண்டில் எல்லாள மன்னனுக்கும் துட்டகாமினிக்குமிடையே நடந்த போராட்டத்தில் அநுராதபுரத்திற்கு தெற்கே இருந்த கோட்டை பற்றி மகாவம்சம் கூறுகின்றது. இதன் சமகாலத்தைச் சேர்ந்த கிழக்கிழங்கை பிராமிச் சாசனம் ஒன்றில் கொடவேள் என்ற பெயர் காணப்படுகின்றது. அதைப் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் “கோட்டை வேள்” எனப் பெயர் கொண்டுள்ளார். இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 21 பிராமிக் கல்வெட்டுக்களில் வேள் எனும் தமிழ்ப் பெயர் காணப்படுகின்றது. இப்பட்டப்பெயர் சங்ககாலத் தமிழகத்தில் குறு நில அரசர்கள் பயன்படுத்திய வேள் ”வேளீர்” என்ற பட்டப் பெயர்களை ஒத்ததாகும். பேராசிரியர் ரோமிலா தாபர் வட மொழியில் “ராஜா” என்ற பட்டப் பெயர் என்ன பொருளைக் குறித்ததோ அதே பொருளை தமிழில் “வேள்” என்ற பட்டப் பெயர் குறித்ததாக கூறுகின்றார். மகாவம்சத்திலும் வேள் நாடு பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. இதனால் கிழக்கிலங்கைப் பிராமிச் சாசனத்தில் வரும் “கோட்டை வேள்” என்பது வேள் என்ற பட்டத்திற்குரியவனின் கோட்டையாகக் கருத இடமுண்டு. 

மேலும் பொலநறுவை அரசு காலத்திலிருந்து கோட்டைகள் பற்றிய செய்திகள் பாளி, சிங்கள இலக்கியங்களில் காணப்படுகின்றன. 11 ஆம் நூற்றாண்டில் 1ஆம் விஜயபாகுவின் ஆட்சிக் காலத்தில் பௌத்த மதத்திற்கு பாதுகாப்பளித்த சோழர்கால வேளைக்காரப் படையினர் நிலைகொண்டிருந்த இடங்களாக வட இலங்கையில் மாதொட்ட,மட்டிகாவாட்ட தீர்த்த ஆகிய இடங்கள் சூளவம்சத்தில் குறிப்பிடப்படகின்றது. அதில் மாதொட்ட என்ற இடம் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாதோட்டம் என்ற இடத்தை குறிக்கின்றது. மட்டிகாவட்ட தீர்த்த என்ற இடம் அடையாளம் காணப்படாது இருந்தாலும் இவ்விடம் பூநகரியிலுள்ள மட்டுவில் நாடாக இருக்கலாம். இதைப் பொருத்தமென முடிவாக எடுத்துக் கொள்ளும் பேராசிரியர் பொ. இரகுபதி பாளி இலக்கியம் கூறும் மட்டிகாவத்த என்பதை களிமண்ணால் வட்டமாக (மட்டி, களி மண், வட்ட, வட்டம்) அமைக்கப்பட்ட கோட்டை எனப் பொருள் கொள்கின்றார். பொலநறுவை இராசதானி வீழ்ச்சியைத் தொடர்ந்து சிங்கள இராசதானி தெற்கு நோக்கி தம்பதெனியா, யாப்பகூவா, குருநாகல், கோட்டை ஆகிய இடங்களுக்கு இடம் மாறிய போது அங்கெல்லாம் அரசின் பாதுகாப்பு கருதி கோட்டைகள் அமைக்கப்பட்டதை பாளி, சிங்கள இலக்கியங்கள் உறுதிசெய்கின்றன. இந்நிலையில் சிங்கள இராசதானிகள் தென்னிலங்கையில் தோன்றிய போது வட இலங்கையில் கலிங்கமாகன், சாவகன் தலைமையில் தமிழர் சார்பான அரசு தோன்றியது. சூளவம்சம், இராஜவலிய முதலான பாளி, சிங்கள இலக்கியங்கள் அவ்வரசின் படை வீரர்கள் நிலைகொண்டிருந்த இடங்களாக மன்னார் பட்டினம், மாதோட்டம், கோண, பதி மாவட்டங்கள், புலைச்சேரி, வலிகாமம், ஊர்காவற்றுறை முதலான இடங்களைக் குறிப்பிடுகின்றன. இவ்விடங்கள் சில சமகாலத்திலும் பிற்காலத்திலும் துறைமுகங்கள், கோட்டைகள் இருந்த இடங்களாகக் காணப்படுகின்றன. இதற்கு உதாரணமாக இரண்டாம் இராசாதிராச சோழனது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவராயன் பேட்டை மற்றும் திருவாலங்காட்டு கல்வெட்டுக்கள்  வட இலங்கை மீது படையெடுத்த சோழப் படை வீரர்கள் மட்டிவாள், ஊராத்தோட்டை, வலிகாமம், மாதோட்டம் ஆகிய இடங்களில் நிலை கொண்டிருந்த படை வீரர்களையும், யானைகளையும் சிறைப்பிடித்து தமிழ்நாட்டுக்கு கொண்டு சென்றதாக கூறுவதை குறிப்பிடலாம். இவற்றுள் ஊர்காவற்றுறை, மாதோட்டம் ஆகிய இடங்களில் போர்த்துக்கேயர் கட்டிய கோட்டைகள் உள்ளன. மட்டிவாள் என்ற இடம் தற்போது பூநகரியிலுள்ள மட்டுவிலைக் குறிப்பிடுகின்றது. இவ்விடத்தில் போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் மீளமாற்றி அமைக்கப்பட்ட  பூநகரிக் கோட்டை அமைந்திருப்பது இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. 

fort

ஆகவே தற்போதைய யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாணத்தில் அந்நியர் ஆதிக்கம் நிலவியதன் அடையாளமாக இருப்பினும் இவ்விடத்தில் கோட்டை கட்டுவதற்கு பொருத்தமான  இடமாக போர்த்துக்கேயர்  தெரிவு செய்தமைக்கு  அவ்விடத்தின் பாரம்பரிய வரலாற்றுப் பின்னணியும் அவர்கள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய போது இவ்விடம் யாழ்ப்பாண அரசின் மேலாதிக்கத்தின் கீழ்  இருந்தமையும்  முக்கியமான காரணங்கள் என்பதில் சந்தேகமில்லை.  பண்டு தொட்டு கடல் சார் வாணிபத்தில் முக்கிய கேந்திர மையமாக விளங்கிய இவ்விடம் யாழ்ப்பாண அரசின் மேலாதிக்கத்திற்கு வருவதற்கு முன்னர் சோழர் ஆட்சியில் அவர்களின் வணிக மையமாகவும்  பாதுகாப்புத்  தளமாகவும் இருந்திருக்கலாம் என்பதை அங்கு கிடைத்து வரும் தொல்லியல் ஆதாரங்கள் உறுதிசெய்கின்றன. இலங்கையில் உள்ள புராதன இந்து ஆலயங்கள் பற்றி ஆராந்த பேராசிரியர் சி. பத்மநாதன் சோழர் கால ஆலயங்களில் கருங்கற்களைப் பயன்படுத்திய போது யாழ்ப்பாண அரசர்கள் சுண்ணாம்புக் கற்களைப் பயன்படுத்தியே ஆலயங்களை அமைத்ததாகக் கூறுகின்றார். யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இருவகைக் கற்களையும் பயன்படுத்தி கட்டப்பட்டமைக்கான அழிபாடுகள் பரந்தளவில் காணப்படுகின்றன. 1980 களில் கோட்டை வாசல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கி. பி. 11 ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ்க் கல்வெட்டு இங்கிருந்த ஆலயம் ஒன்றுக்கு இராஜேந்திர சோழ மன்னன்  தானம் வழங்கிய செய்தியைக் கூறுகிறது. கோட்டை அழிபாடுகளிடையே கண்டுபிடிக்கப்பட்ட கருங்கல்லால் கட்டப்பட்ட இந்து  ஆலயங்களின் அழிபாடுகளின் கலைமரபு சோழர் கலை மரபைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன. கோட்டையின் பழைய பெயரான ஐநூற்றுவன் வளவு   இலங்கையில் சுயாட்சி கொண்ட நகரங்களை உருவாக்கிய சோழர்கால ஐநூற்றுவன் என்ற வணிகக்கணத்தினை நினைவுபடுத்துவதாக உள்ளது. இவ்வாதாரங்களை வைத்து நோக்கும் போது சோழர் காலத்தில் கோட்டைப் பிரதேசம் முக்கியமான துறைமுக நகராக வளர்ச்சியடைந்ததைக் காட்டுகிறது. இப்பின்னணியில் நோக்கும் போது கோட்டையில் கிடைத்து வரும் கருங்கல்லாலான ஆலய அழிபாடுகளை சோழர் காலத்தில் இங்கிருந்த ஆலயங்களாகக் கொள்வது பொருத்தமாகவிருக்கலாம்.

யாழ்ப்பாணக் கோட்டையில் கிடைத்த ஆதாரங்களில் கணிசமானவை யாழ்ப்பாண அரசு காலத்திற்குரியவை. இங்கு கிடைத்த நாணயங்களில் யாழ்ப்பாண மன்னர்கள் வெளியிட்ட சேது நாணயங்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சுண்ணக்கல்லாலான ஆலய அழிபாடுகள் யாழ்ப்பாண அரசு காலத்தில் கட்டப்பட்டவையாக கருத இடமுண்டு. யாழ்ப்பாண அரச காலம் தொடர்பாக தோனறிய யாழ்ப்பாண வைபவமாலை போன்ற தமிழ் இலக்கியங்களில் யாழ்ப்பாண அரசகாலக் கோட்டை பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாண அரசின் மீதான செண்பகபெருமாள் படையெடுப்பு பற்றிக் கூறும் கோகிலசந்தேஸய என்ற சிங்கள இலக்கியம் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த காவலரண்கள்,கோட்டைகள் பற்றியும் கூறுகிறது. தென்னிலங்கையில் கொட்டகம என்ற இடத்தில் கிடைத்த யாழ்ப்பாண மன்னன் வெளியிட்ட கல்வெட்டில் பொங்கொழில் சிங்கை நகர் என்ற குறிப்புக் காணப்படுகிறது.இதிலிருந்து கடற்கரை சார்ந்த இடத்தில் யாழ்ப்பாண அரசின் முக்கியமான நிர்வாக மையம் இருந்துள்ளமை தெரிகிறது. கடல் வழியாக யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்த போர்த்துக்கேயர் யாழ்ப்பாண அரசின் படைகளுடன் போரிட்ட இடங்களில் தற்போதைய கோட்டை அமைந்துள்ள பண்ணைத்துறை முக்கியமாகக் இடமாகக் குறிப்பிடப்படுகிறது. நல்லூரை யாழ்ப்பாண அரசின் தலைநகராக போர்த்துக்கேய ஆவணங்கள் குறிப்பிட்டாலும் அவர்களின் அரசியல் பொருளாதார நடவடிக்கைகள் பண்ணைத் துறைமுகத்தை மையப்படுத்தியே நடந்ததாகக் கூறுகின்றன. பண்ணை என்ற சொல்லுக்கு மரக்கலன்கள், பண்டங்கள், களஞ்சியப்படுத்தும் இடங்கள் எனும் பதங்கள் உள்ளன. போர்த்துக்கேயர் யாழ்ப்பாணம் வந்த போது கோட்டை அமைந்த பிரதேசம் பண்ணைத் துறை என அழைக்கப்பட்டிருப்பது கோட்டைக்கும் யாழ்ப்பாண அரசிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததைக் காட்டுகின்றது. இதனால் யாழ்ப்பாண அரசு காலத்தில் களிமண், மரம் கொண்டு அமைக்கப்பட்டிருந்த கோட்டையையே போர்த்துக்கேயரும், பின்வந்த ஒல்லாந்தரும் கற்களைப் பயன்படுத்தி தமது நாடுகளின் கலைமரபுகளில் கட்டினர் எனக் கூறலாம். இதை கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் ஆய்வுகள் எதிர்காலத்தில் மேலும் உறுதி செய்யலாம்.

உசாத்துணைகள்

  1. இந்திரபாலா,கா., 1972, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், கண்டி.
  2. பத்மநாதன்,சி., 2004, ஈழத்து இலக்கியமும் வரலாறும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
  3. Abeysinghe, T,.1966, Portuguese Rule in Ceylon 1594- 1612, Colombo.
  4. Codrington, H.W. 1924, Coins and Currency, Memoirs of the Colombo Museum, Series A, No.3, Colombo.
  5. Conigham,Robin.,2002, “Beyond and Before the Imperial Frontiers: ERLY Historic Sri Lanka and the Origins of Indian Ocean Trade” Man and Environment, Journal of the Indian Society for Prehistoric and Quaternary Studies;Vol.XXVII,No.1:99-107.
  6. Culavamsa, 1953, Geiger. W. [E.D.], Ceylon Government Information Department, Colombo.
  7. Davis,C.E., Coningham, R.A.E., Gunawardhana, Pushparatnam, PSchmit, A, A. &Manuel,M.J. (2019) The Antiquity of Jaffna Fort: New Evidence from post-disaster archaeological investigations in Northern Sri Lanka. Antiquity 93(368): e13.
  8. Mahavamsa, 1950, (E.D.) Geiger, W., The Ceylon Government Information Department, Colombo.
  9. Paranavitana, S., 1970, Inscription of Ceylon: Early Brahmi Inscrip¬tions, The Department of Archaeology Ceylon, Colombo, I.
  10. Pushparatnam, P., 2010, “Hindu Ruins Found in Jaffna Fort” in VaralāṛṛuUlā, (ed) Nadaraja R.,C. Published by CivattamiḷMāṇiṭaviyalKaḷakam, Jaffna. 
  11. Pushparatnam, P., 2014, commercial Ties Between Northern Sri Lanka and Foreign Countries up to 13th Century AD” in National Archaeological Symposium,  Department of Archaeology, Colombo
  12. Pushparatna, P., 2014, “Jaffna-Multi Lateral Views”, in Essay on History Culture and Foreign Relations: Festschrift for Professor S.Pathmanathan [eds], MahindaSomathilake and Wimalasena,, Colombo.
  13. Pushparatnam, P.,2014, Tourism and Archaeological Heritage Monuments in Northern Sri Lanka, Colombo.
  14. Pushparatnam, P., 2017, “Nallur- The Capital of Jaffna Kingdom” in Commemoration Volume in Honour of Rev. Prof. HangurankethaDheerananda : 373- 387
  15. Ragupathy, P., 1987, Early Settlements in Jaffna: An Archaeological Survey, Mrs.Thillimalar Ragupathy, and Madras.
  16. Rasanayagam, C., 1926, Ancient Jaffna, A.S., Everyman’s Publishers Ltd, Madras.
  17. Queroz,FrFernaode, 1930, The Temporal and Spiritual Conquest of Ceylon, Fr. S.G. Perera, Colombo.
  18. Sitrampalam, S.K., 1990, Proto Historic Sri Lanka: An Inter-disciplinary Perspective in Journal of the Institute of Asian Studuies, VIII [1]: 1-8.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10114 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)